search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் மின்கோபுரம்"

    கிருஷ்ணகிரியில் விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போச்சம்பள்ளி:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் நகரில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணைமின் நிலையம் மற்றும் கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையம் வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 1830 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மின்கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 கிலோமீட்டர் தூரம் வரை சுமார் 40 உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் வழியாக பெரிய கூத்தம்பட்டி சின்ன கூத்தம்பட்டி, செட்டி கொள்ளை தலையன் கொட்டாய், தேவிரஹள்ளி, குடிமேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்க வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குறிப்பிட்ட சில கிராமங்களில் விவசாயிகளிடம் அனுமதி பெற்று உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த மின்கோபுரம் அமைக்க குடிமேனஅள்ளி, வண்டிக்காரன் கொட்டாய் மற்றும் தேவிரஅள்ளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தெரியாமல் நிலங்களில் வருவாய்த் துறையினர் அளவீடு பணிகள் மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

    போச்சம்பள்ளியை அடுத்த குடிமனஹள்ளி கிராமத்தில் 800 கே.வி. திறன் கொண்ட உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் மற்றும் மத்தியஅரசின் பவர் கிரிட் அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் அதிரடிப்படை போலீசாரும் வந்தனர்.

    அவர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு நின்ற ராமசாமி என்பவரின் மனைவி முனியம்மாள் (வயது 45), சக்கரவர்த்தி மனைவி பார்வதி, மகன் திருமால் ஆகிய 3 பேரும் எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அவர்கள் வைத்திருந்த தீப்பெட்டி மற்றும் மண் எண்ணெயை போலீசார் பிடுங்கிக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தினார்கள். அங்கு கூடிய விவசாயிகள், விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கக் கூடாது என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    விவசாயிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிகாரிகளும், போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்ற விவசாயி கூறியதாவது:-

    தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள எங்களது தென்னந்தோப்பில் உயர் மின்கோபுரம் அமைக்க கடந்த ஒரு வருடமாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அப்போதே நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த ஒரு வார காலமாக தினமும் வந்து அளவீடு செய்கின்றனர். ஆண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு வந்து அளவீடு செய்கின்றனர்.

    எங்களுக்கு இருப்பது பூர்வீக சொத்து மட்டும் தான். குறைந்த அளவே இந்த நிலத்தில் உள்ள தென்னை மரங்களை மட்டுமே நம்பி எங்களது வாழ்வாதாரம் அமைந்துள்ளது.

    எங்கள் தோப்பில் உள்ள மரத்தையும் வெட்டி எடுக்க திட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல. தொடர்ந்து அளவீடு செய்து அங்கே உயர்மின் கோபுரம் அமைக்க முயன்றால் பாதிக்கப்படும் அனைவரும் தீக்குளிக்க தயாராக உள்ளோம். எங்கள் பிணங்களை தாண்டி அவர்கள் உயர்மின் கோபுரம் அமைக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயர்மின் கோபுரம் அமைக்கும் பகுதிகளில் ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 28 ஆயிரமும், ஒரு மா மரத்திற்கு ரூ. 18 ஆயிரமும் இழப்பீடு வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. இதேபோல் விவசாய நிலங்களுக்கும் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இதை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்றும், மாற்றுப் பாதையில் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினர்.

    குடிமேனஅள்ளி கிராமத்தில் மட்டும் 4 உயர்மின் கோபுரங்கள் அமைக்க உள்ளனர். இதற்காக சுமார் 6.5 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. வாழ்வாதாரமான எங்களது பூர்வீக நிலங்கள் மட்டுமே வேண்டும்.

    வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் மட்டும் மூன்று குடியிருப்பு வீடுகள், 10-க்கும் மேற்பட்ட கிணறுகள், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சேதமாகின்றன.

    மின்பாதை செல்லும் வழியில் விவசாயமே செய்ய முடியாது. ஆகையால் எங்களது நிலங்களையும், மரங்களையும் இழக்கவிட மாட்டோம். விவசாய நிலங்கள் இல்லாத மாற்றுப் பாதையில் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கூறியதாவது:-

    இதற்கு முன்பு பலமுறை விவசாயிகளிடம் அமைதிக் குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. சில விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விளைநிலங்களை அளவீடு செய்த பிறகே யாருடைய நிலத்தில் மின் கோபுரங்கள் வரும் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    கரூர்:

    விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இவ்வாறான மின் திட்டங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் பதித்து மின் வயர்களை கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முன்னூர் கிராமம், தென்னிலை கீழ்பாகம், க.பரமத்தி ஆகிய இடங்களில் சில விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலையோரமாக கேபிள் வயர்களை பதித்து மின்திட்டத்தை செயல்படுத்துமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, மாவட்ட செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் ஈசன், ஆடிட்டர் நல்லுசாமி, செந்தில் உள்பட நிர்வாகிகள், விவசாயிகளுடன், நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் போது அதன் திட்டப்பாதை விவசாய நிலத்தின் உள்ளே செல்வதால் மரம் வளர்த்தல் உள்ளிட்டவை தடைபடுகிறது. மேலும் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதிக்கின்றனர்.

    அந்த மின்பாதையில் ஏற்படும் மின் தூண்டலினால் பயிர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலத்தையொட்டி வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிப்படையக்கூடும். எனவே கரூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் கூறினர். அப்போது இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பதில் கூறினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    உயர் மின்கோபுர திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கேபிள் மூலம் புதை வழித்தடத்தில் மின்வயர்களை கொண்டு செல்வது தான். எனவே இதை தான் கரூரில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால் இந்த உயர் மின்கோபுர திட்டபாதையால் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை பொது மேடையிலோ அல்லது முக்கியஸ்தர்களின் முன்னிலையிலோ யாராவது வாதம் செய்து விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கம் சார்பில் ரூ.1 கோடி பரிசு தந்து விடுகிறோம். மேலும் விவாத மேடையிலேயே ரூ.1 கோடியை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ (டிடி) வைத்து விட்டு நாங்கள் பாதிப்புகளை முன்வைக்கிறோம். அந்த சமயத்தில் அதிகாரிகள் பாதிப்புகள் இல்லை என நிரூபிக்க தவறினால், ஏற்கனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களை கழற்றி கேபிள் மூலம் மாற்று முறையில் அதனை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×