search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தேச விடைகள்"

    குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும்.

    தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    ×