search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்கள் பிரேத பரிசோதனை"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை இன்று தொடங்கியது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியானவர்களின் உடல்களில் மாணவி ஸ்னோலின், சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடல்கள் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் பதப்படுத்தி வைக்கப்பட்டன.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



    அதன்படி மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்தனர். அவை அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது.

    சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா, தமிழரசன் ஆகிய 6 பேரின் உடல்கள் அடுத்தடுத்த நாட்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்னோலின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கடந்த 3-ந்தேதி அவரது உடலையும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் பிரேத பரிசோதனையே செய்யாமல் இருந்த அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் கோர்ட்டு உத்தரவுக்காக தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஜிப்மர் டாக்டர் மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த 2 டாக்டர்கள் மேற்கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து உடல்களும் இன்று இரவுக்குள் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி உள்ளிட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது கடை பிடிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டது.

    ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் வினோத் மற்றும் தூத்துக்குடி மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  #thoothukudifiring

    ×