search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கோவில்"

    கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.
    வள்ளியை மணந்த கந்தன் விரும்பிய திருத்தலம், கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத் தலம், புத்தர் தவம் இயற்றிய புனித பூமி, அசோக மன்னனின் மகள் சங்கமித்தை வெள்ளரசு நட்ட பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.

    தொன்மைச் சிறப்பு :


    முருக வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற முருகன் தலமாக விளங்குவது கதிர்காமம் திருத்தலம் ஆகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்தர் தியானம் செய்த பதினாறு தலங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அசோகரின் மகளான சங்கமித்தை புத்த கயாவில் இருந்து புனித வெள்ளை அரசு மரக்கன்றைக் கொண்டுவந்து நட்டதை ‘மகா வம்சம்’ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது.

    கந்தப்பெருமானின் புனிதத்தலமாக கதிர்காமம் விளங்கியதை இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. கதிர்- ஒளி, காமம்-அன்பு என்பது பொருளாகும். ஆறு கதிர்ப்பொறிகளால் தோன்றிய முருகப்பெருமான், வள்ளியம்மை மீது காதல் கொண்டு, மணம் புரிந்த இடமாதலால் ‘கதிர்காமம்’ என்பது பொருத்தமான பெயராகவே அமைந்து விட்டது.

    ஏமகூடம், பூலோகக் கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய கதிர்காமம் வழங்கப்படுகிறது. அதேபோல முருகப்பெருமானும் கதிர்காமசுவாமி, கதிரைநாயகன், கதிரைவேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் எனப் பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.

    புராண வரலாறு :

    சூரபதுமனை வதம்செய்யும் நோக்கில், முருகப்பெருமான் கதிர்காமத்தை அடைந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதி அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார். இப்பகுதி ‘ஏமகூடம்’ என வழங்கப்பட்டது. சூரபதுமனை வதம் செய்து வென்று, நவகங்கைத் தீர்த்தம் உண்டாக்கி, தேவர்கள் வணங்குவதற்கு எழுந்தருளினார் என, தட்சிண கைலாச புராணம் குறிப்பிடுகிறது.

    தெய்வயானையை மணம் முடித்த பின், வள்ளிமலையில் வள்ளியம்மையை மணம்புரிந்த முருகப்பெருமான் திருத்தணிகையில் அமர்ந்தார். பிறகு தாம் விரும்பும் தலம் கதிர்காமமே என்று தன் துணையான இருவரிடமும் கூறி, கதிர்காம கிரியை அடைந்து, அன்பர்களுக்கு அருள் வழங்குகின்றார் என தட்சிண கைலாசபுராணம் கூறுகிறது.

    வேடுவர்கள் பகுதியான இதுவே வள்ளி வாழ்ந்த தலம் என்று சொல்கிறார்கள். இங்கே வள்ளி தினைப்புனம் காத்த இடம், முருகன் மரமாக நின்ற இடம் என பல்வேறு இடங்களை அதற்குச் சான்றாக அடையாளம் காட்டுகின்றனர் இப்பகுதியினர்.

    தல வரலாறு :

    ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற நூலும், ‘மகாவம்சம்’ என்ற சிங்கள வரலாற்று நூலும் கதிர்காமம் குறித்து குறிப்பிட்டுள்ளன. கி.மு. 500-ல் விஜயன் என்ற மன்னன், கதிரை வேலனுக்குக் கோவில் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது.

    கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மாமன்னனின் மகளான சங்கமித்தைப் புனித வெள்ளரசுக் கன்றை, அனுராதபுரத்தில் நட்ட பின்பு, இரண்டாவதாக கதிர்காமத்தில் நட்டார். அந்த ‘கிரிவிகாரை’ என்ற ‘பவுத்தவிகார்’, முருகன் ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. இதனை மக்கள் ‘சூரன் கோட்டை’ என அழைக்கின்றனர்.

    எல்லாளன் என்ற தமிழ் வேந்தனை வெற்றி கொள்ள விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன், கதிர்காமத்து கந்தனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படியே, கந்தன் அருளால் வெற்றி பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக கி.மு. 101-ம் ஆண்டில் கந்தனுக்குத் தனிக்கோவில் எழுப்பினான் என, ‘கந்த உபாத’ என்ற சிங்கள நூல் கூறுவதாக பொன். அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் சோழர் ஆட்சியில் சிறைப்பட்டிருந்த சிங்கள மன்னன் ஐந்தாம் மகேந்தரனும், அவன் மனைவியும் கதிர்காமத்தானிடம் விடுதலை வேண்டி விரதமிருந்தனர். கந்தன் கருணையால் சோழமன்னனைத் துரத்தியதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக கந்தனின் அருள்சக்தியை மகாவம்சம் என்ற சிங்கள நூல் ஏற்றுக்கொண்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

    இத்திருக்கோவில், கி.பி. 1581-ம் ஆண்டில் முதலாம் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாக ஆய்வாளர் வ.குமாரசுவாமி குறிப்பிடுகின்றார். அதே நேரம் கி.பி.1634-ல் இரண்டாம் ராஜசிங்கனால் கட்டப்பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஆலய அமைப்பு :

    கதிர்காம ஆலயத்தில், நம்நாட்டு கோவில் போல, ராஜகோபுரம், முன்மண்டபம், மகாமண்டபம், கருவறை எனும் எதுவும் கிடையாது. கோவிலின் முகப்பில் ஒரு வளைவு உள்ளது. அதிலும் சிங்கள மொழியில் எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறிய எழுத்துக்களால் பெயர் எழுதப்பட்டு உள்ளது.

    வலதுபுறம் விநாயகர் சன்னிதி, அருகே பெருமாள் சன்னிதி என்று கூறப்படும் இடத்தில் புத்தர்சிலை உள்ளது. முருகன் சன்னிதியின் இடதுபுறம், சற்றுத் தள்ளி தெய்வானை சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. இதன் வழிபாடுகளைத் தமிழர்கள் கவனிக்கின்றனர். கதிர்காமர் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளியம்மன் சன்னிதி வடக்கு நோக்கி, எதிரெதிர் பார்வையில் அமைந்துள்ளன. தெய்வயானை சன்னிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

    கதிர்காமத்து திருத் தலம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் கதிர்காமர் கோவில், வள்ளியம்மன் கோவில், கண்ணகியம்மன் கோவில் இருக்கிறது. இம்மூன்றும் பவுத்தமத கோவில் பரிபாலன சட்டப்படி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரிவில் மாணிக்கப் பிள்ளையார் கோவில், தெய்வானை அம்மன் கோவில், பைரவர் கோவில், முத்துலிங்கசுவாமி கோவில், கதிரை மலையில் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பழைய கதிர்காமம் எனும் செல்லக் கதிர்காமம் மற்றும் பிள்ளையார் கோவில், கதிரைமலை இவை அனைத்தும் பாபாக்களின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மூன்றாம் பிரிவில் கிரிவிகாரை, பெருமாள் கோவில் ஆகியவை பவுத்த குருமார்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது பிரிவில் சோனகருடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது.

    பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.

    கதிர்காமத்துக் கந்தனின் புகழைக் கேள்விப்பட்டு, பெரிய எதிர்ப்பார்ப்புடன் செல்லும் நமக்கு அவரைக் காண இயலாததும், கோவில் எளிய வடிவத்தில் அமைந்திருப்பதும் சற்று ஏமாற்றமாகத்தான் உள்ளது. என்றாலும், இவரின் சக்தியும், அருளாற்றலும் அதை ஈடுசெய்து விடுகிறது.

    திருவிழாக் காலங்களில் சன்னிதிக்குள் இருந்து, என்னவென்று அறிய முடியாத ஒரு பொருளை பெரிய துணியில் மூடி, யானை மீது உள்ள பெட்டியில் வைத்து இறுகக் கட்டி விடுகின்றனர். இது முத்துலிங்க சுவாமி அமைத்த எந்திரம் என்று கூறுவோரும் உண்டு. அப்பெட்டி வள்ளியம்மை கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்.

    எந்தக் கோவிலிலும் இல்லாத வழக்கமாக, இந்த ஆலய கருவறை எப்போதும் திரையிட்டபடியே இருக்கிறது. இதற்குப் பல்வேறு யூகங்கள் கூறப்படுகின்றன. திருப்புகழில் வரும் ‘கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே’ என்ற வரிகளை வைத்து பார்த்தால், மாணிக்கத்தால் செய்த விலை மதிப்பற்ற திருவுருவம் உள்ளே இருப்பதை உணர முடிகிறது. கதிர்காமத்தை தரிசனம் செய்த டாக்டர் டேவி என்பவரின் கூற்றில், கதிர்காமத்து திருவுருவம் காட்டில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் வரும் வரை, தமிழர்களால் சைவ முறைப்படி முருகப்பெருமானின் திருவுருவத்தோடு பூஜைகள் நடந்து வந்தன. இதன்பின் சிங்களவரிடம் கோவில் கை மாறியது. ஆனால் அவர்களுக்கு நமது வழிபடும் முறைகள் தெரியாததால், கருவறையைத் திரையிட்டனர் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் கருவறை வாசலை மறைத்து தொங்கும் திரைசீலையின் மீது ஓவியமாக விளங்கும் வள்ளி -தெய்வானை சமேத கந்தனையே வழிபட வேண்டியுள்ளது.

    முத்துலிங்க சுவாமி :

    காஷ்மீரில் இருந்து கதிர்காமத்திற்கு வந்தவர், கல்யாணகிரி ஆவார். இவர் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றி இத்தலத்திலேயே சமாதி அடைந்தார். இவரே முத்துலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். இவர் ஆகர்ஷணம் செய்து தந்த யந்திரம் தான் மூலஸ்தானப் பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

    இதேபோல, இந்தியாவில் இருந்து வந்த கேசவபுரி என்ற பால்குடி பாவா என்ற மகானும் இத்திருக்கோவிலில் தவமியற்றி சமாதியடைந்துள்ளார்.

    கண்டியும்.. கதிகாமமும்.. :

    இத்தலத்தைக் ‘கண்டி கதிர்காமம்’ என்று சொல்வது, இந்தியாவில் வழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. கண்டியில் புத்தரின் புனிதப்பல்லைக் கொண்ட கோவில் பிரசித்தி பெற்றது. அதேபோல், கதிர்காமத்தில் கந்தப்பெருமானின் கோவில் புகழ்பெற்றது. இரண்டு இடங்களுக்கும் உள்ள தூரம் 210 கி.மீ. ஆகும். ஆகவே, கண்டி வேறு, கதிர்காமம் வேறு என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. இந்தியாவில் காசி -ராமேஸ்வரம் என்ற சொல் வழக்கு போல, கண்டி- கதிர்காமம் என்ற சொல் வழக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
    ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.
    ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.

    தல வரலாறு :

    தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

    கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.

    ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.

    ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.

    மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

    தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.

    சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

    சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

    ராமர், சீதையுடன் லட்சுமணன்

    ஆலய அமைப்பு :

    இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.

    ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

    ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.

    கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.

    தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:

    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

    வாழ்வில் வசந்தம் உருவாக...

    சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

    அமைவிடம் :

    இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.
    வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
    கோவில் தோற்றம் :

    யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய திருக்கோவில், புவனேகுபாகுவால் எழுப்பப்பட்ட ஆலயம், வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.

    இலங்கைத் தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கு மாகாணத்தில் அமைந்த முக்கியத் திருக்கோவிலாக திகழ்வது, நல்லூர் கந்தசாமிக் கோவில். மன்னர் காலத்தில், தலைநகராக விளங்கிய இவ்வூர், இன்று முக்கிய நகரமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பெரிய கோவில் என்ற பெருமையையும் இந்த ஆலயம் பெற்றுள்ளது. இலங்கைவாழ் தமிழர்களின் அபிமானத் தலமாகவும் விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய வாசல் கோபுரம் கலைநயம் கொண்டு தங்க நிறத்தில் ஒளி வீசுகிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம் எழில் காட்சி தர, இதில் புராணச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. இதன் இரு திசைகளிலும் மிதமான உயரத்தில் மணி கோபுரங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கும் கோபுரத்திற்கும் நடுவில் அர்த்தமண்டபம், ஆறுமுக சுவாமி கோவில் மண்டபம், முத்துக்குமார சுவாமி மண்டபம், ஸ்தம்ப மண்டபம் அமைந்துள்ளன.

    பிள்ளையார், பைரவர், சந்தான கோபாலர், தெய்வானை, வள்ளியம்மை கோட்டங்கள் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன. ஆறுமுகசுவாமி மண்டப வாசலின் எதிரே, தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. இதன் அருகே தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, திருப்புகழ் மண்டபம் ஆகியவை இருக்கின்றன.

    2011-ம் ஆண்டு 108 அடி உயர தெற்கு கோபுரமும், 2015-ல் 108 அடி உயர வடக்குக் கோபுரவாசல் ராஜகோபுரங்களும் அமைக்கப்பட்டன. பழனியாண்டவர் சன்னிதி, சூரியனுடன் தேவியர், உற்சவத் திருமேனி உள்ளன. பிரமாண்டத் தேரும், தேர் நிறுத்த மண்டபமும் கிழக்கு வாசலின் எதிரில் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் நடுநாயகமாக நல்லூர் கந்தசாமி விளங்குகின்றார். இங்கே வேல் வழிபாடே பிரதானம் என்பதால், கந்தன் வேலாயுதனாக, வேல் வடிவில் காட்சி யளிக்கிறார். தீப ஒளியில் இக்கோலத்தைக் காணும்போது, நம் மெய்சிலிர்க்கின்றது.

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகவும், ஐப்பசி வெள்ளி மிகவும் புனித நாளாகவும் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியவர்கள் விரதமிருந்து கந்தனை வழிபடுவார்கள். ஐப்பசி அமாவாசை தொடங்கும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை, தைப்பொங்கல், தைப்பூசம், ஆண்டுப்பிறப்பு, நவராத்திரி, திருவெம்பாவை விழாக்களும் உண்டு.

    ஆடி அமாவாசை முடிந்து வரும் சஷ்டியில் பிரம்மோற்சவம் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக 25 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகலிலும் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி உற்சவத் திருமேனிகள் வீதி உலா வரும். விழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம், அடியழித்தல் முதலிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

    ஆலயம் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணி பூஜை செய்யப்பட்டதும், கதவுகள் மூடப்படும். பின்னர் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கோவிலில் தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாக கருதப்படுவதால் அன்றைய தினம் தொடர்ச்சியாக நடை திறக்கப்பட்டிருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் மா மரம் ஆகும். தல தீர்த்தமாக சண்முகத் தீர்த்தம் அமைந்திருக்கிறது.

    மாப்பாணர் பரம்பரையினரால் இக்கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    நல்லூரில் கந்தசாமி கோவில் தவிர, கயிலாயநாதர், சட்டநாத ஈஸ்வரன், நாயன்மார்கட்டு, அரசடிப் பிள்ளையார், வெயிலுகந்த விநாயகர், முக்குறுணி பிள்ளையார் முதலான கோவில்கள் அமைந்திருக்கின்றன.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம் நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 355 கி.மீ. தொலைவில் நல்லூர் இருக்கிறது.
    ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.
    தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.

    புராண வரலாறு :


    இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.

    சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.

    திருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள் திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    போர்ச்சுக்கீசியரின் அராஜகம் :

    இந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.

    திட்டமிட்டபடி போர்ச்சுக்கீசிய தளபதி டீசா, திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த மலை, மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோவில் என மூன்று கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான். இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில் ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது ‘பிரட்றிக் கோட்டை’ என அழைக்கப்படுகிறது.



    1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.

    கொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.

    ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.

    ஆலய அமைப்பு :

    மூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.

    கருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.

    இறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.

    இவ்வாலயத்தில் பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. சிவராத்திரியில் திருக்கோணேஸ்வரர், திருக்கோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது, திருக்கோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது மற்றுமொரு சிறப்பு.

    வெந்நீர் ஊற்றுகள்

    விஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று :

    திருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.

    திருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.

    இதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.

    ராவணன் வெட்டு :

    ராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.

    ராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.

    திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இருக்கிறது.
    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.
    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், இருபத்தியோரு நாள் விநாயகர் சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறும் கோவில், மாசியில் பிரம்மோற்சவம் காணும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.

    தல வரலாறு :

    கி.பி. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிழைப்பு தேடிய இந்தியத் தமிழர்கள், தலைமன்னார், அரிப்பு துறைமுகம் வழியே இலங்கை வந்தனர். காட்டுவழியில் பெரும் துன்பப்பட்டு, கால்நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மாத்தளையில் இருந்து சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மலையகத் தோட்டங்களுக்குச் சென்றனர். இவர்களின் கடினஉழைப்பே இன்றைய மலையகத்தின் செழிப்பாக காட்சி தருகின்றது.

    அவர்களது, தாய்நாடான இந்தியாவையும், வழிபடும் தெய்வங்களையும் பிரிந்து வந்த ஏக்கம் இவர்களை வாட்டியது. இந்நிலையில், இவர்களில் ஒரு அடியாரின் கனவில் அன்னை முத்துமாரி தோன்றினாள். ‘உங்களின் குறை தீர்க்க நான் ஊரில் உள்ள வில்வ மரத்தடியில் தோன்றியுள்ளேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். நான் உங்களை காவல் தெய்வமாகக் காத்தருள்வேன்’ என்று கூறி மறைந்தாள்.

    இதை அனைவரிடமும் கூறி மகிழ்ந்த அடியார், அன்னை அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்றனர். அங்கே சிறிய வடிவில் அன்னையின் சிலை வில்வ மரத்தடியில் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அன்னைக்கு சிறுகுடில் அமைத்து வழிபட்டு வந்தனர். இவளே முத்துமாரி அம்மனாகப் போற்றப்படுகின்றாள்.

    கி.பி. 1852-ம் ஆண்டு சுப்புப்பிள்ளை என்பவர் தன் பொருட்செலவில் இடம் வாங்கி அதனை கோவிலுக்கு தானமாகக் கொடுத்தார். இவருக்குப்பின் பல வணிகர்கள், செல்வந்தர்கள், நகரத்தார் போன்றோரின் ஒத்துழைப்போடு திருக்கோவில் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். கி.பி. 1960-ம் ஆண்டு புதிதாக கருவறை எழுப்பப்பட்டு, முதலாவது குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது.

    108 அடி ராஜகோபுரம் :


    இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்வது, விண்ணை முட்டி நிற்கும் 108 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம். சுதைச் சிற்பங்கள் நிறைந்த இந்த கோபுரம், நம் கண்களுக்கு விருந்தாகவும் வியப்பூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த ராஜகோபுரம் வடக்கு திசையில் இருந்து நம்மை வரவேற்கிறது. ஆலயத்திற்குள் உள்ளே விநாயகர், முருகப்பெருமான், சண்டேஸ்வரி, முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு, துர்க்கையம்மன், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன.

    ஆலயத்தின் நடுநாயகமாக அன்னை மாத்தளை முத்துமாரியம்மன் கிழக்கு முகமாக எளிய வடிவில் ஒளி வீசும் வடிவங்கொண்டு அருளாசி வழங்குகின்றாள். இந்திய வம்சாவளி தமிழர்களின் காவல் தெய்வம் இவளே என்று எண்ணும் போது நம் மெய்சிலிர்க்கிறது.

    மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை என்ற அமைப்பினால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



    இவ்வாலயம் ஆன்மிகப் பணியோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தப் பகுதிவாழ் மக்களின் சமூக முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வருகிறது. சமயம் சார்ந்த அறப்பணிகள், இயல், இசை, நாடகம், நூல்கள் வெளியீடு இவற்றோடு நூலகம், ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்புகள், பள்ளிக்கூடம், தமிழ்தட்டச்சுப் பயிற்சி, தையல்வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என அனைத்தையும் இலவசமாகக் கற்றுத் தருகிறது.

    இவ்வாலயம் 1983-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கலைநயம் மிக்க ஐந்து தேர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. என்றாலும், அனைவரும் பெரும் முயற்சியின் காரணமாக, ஐந்து சித்திரத் தேர்கள் 1993-ல் மீண்டும் உருவாகி தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    அலுவிஹாரை :

    மாத்தளை நகரின் வடக்கில் பேதிஸ்த மன்னனால் எழுப்பப்பட்ட ‘அலுவிஹாரை’ பதிமூன்று குகைகளைக் கொண்டதாகும். இதன் பெருமையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இங்குதான் திரிபீடகம் என்ற ஓலைச்சுவடி நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில், வலகம்பாகு மன்னன் காலத்தில் எழுதப்பட்டது.

    கொடுங்கோல் மன்னன் ராஜசிங்கன் காலத்தில் பவுத்த குருமார்கள் இந்த அலுவிஹாரையில் தஞ்சமடைந்தனர். அதோடு பவுத்த நூல்களைப் பாதுகாக்கும் இடமாகவும் இது விளங்கியிருக்கிறது. ஐரோப்பியர் ஆட்சியில் இக்குகை சேதப்படுத்தப்பட்டது. என்றாலும், கண்டிமன்னன் விஜயராஜ சிங்கன் காலத்தில் (கி.பி.1739-1747) புனரமைக்கப்பட்டது. இலங்கை அரசு இக்குகையினைப் புனித பிரதேசமாக அறிவித்துள்ளது. பதிமூன்று குகைகளில் சிலவற்றை மட்டுமே தற்போது காணமுடியும்.

    பெயர்க்காரணம் :


    மாத்தளை திருத்தலமானது, இலங்கை நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகவும், புராதனமான நகரமாகவும், முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் விளங்குகின்றது. கஜபாகு மன்னன் காலத்தில் சோழநாட்டில் சிறைபிடிக்கப்பட்ட பெருங்கூட்டம், மாத்தளை பகுதியில் தான் குடியமர்த்தப்பட்டனர். பெருங்கூட்டத்திற்கு சிங்களத்தில், ‘மஹாதலயக்’ என்று பெயர். இதுவே மருவி, ‘மாத்தளை’யானதாகக் கூறுவர்.

    அமைவிடம் :

    இலங்கையின் மத்திய மாகாணத்தின், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 154 கி.மீ., கண்டியில் இருந்து வடக்கே 24 கி.மீ., தொலைவில் மாத்தளை நகரம் உள்ளது. இக்கோவிலின் பின்னணியில் அழகிய மலையும், அதன் மீது முருகன் கோவிலும் இருக்கின்றன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 
    ×