search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு கர்டர்கள்"

    ரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால் இழுத்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30-ந்தேதி வரை திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார். 
    ×