search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து தரகர்"

    ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இங்கிலாந்து தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. #Agustascandal
    துபாய்:

    இந்தியாவில் ஜனாதிபதி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் ரூ.3,721 கோடி என விலை நிர்ணயம் செய்திருந்தனர்.

    ஆனால் இதில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். அதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் உள்ளிட்ட 3 வெளிநாட்டினர் இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இதில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சுக்கு ரூ.350 கோடி லஞ்ச பணம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்திய கடற்படை தளபதி எஸ்.பி. தியாகி, அவருடைய 3 சகோதரர்கள், பாதுகாப்பு படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோரும் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் துபாயில் வசித்து வந்தார். சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அரசு அவரை கைது செய்தது. பின்னர் ஒரு மாதத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது.

    இதற்காக ஐக்கிய அரசு எமிரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதை விசாரித்த 3 நீதிபதிகள், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதாக நேற்று தகவல் வெளியானது.

    ஆனால் அப்படி எந்த உத்தரவும் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

    கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாமா? என்று ஐக்கிய அரபு அரசு கோர்ட்டில் விவரம் கேட்டிருந்தது. இது சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்ட கோர்ட்டு தனது கருத்துக்களை குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இந்த அறிக்கையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்ற கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது கோர்ட்டு தீர்ப்பு அல்ல, கருத்து தான் என்பதால் அவரை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவாக கருத முடியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் அவர் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இப்போது சாத்தியம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒரு வேளை ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவிட்டாலும் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அங்கு வாய்ப்பு உள்ளது. அந்த கோர்ட்டிலும் தீர்ப்பு வந்தால் மட்டுமே அவர் நாடு கடத்தப்படுவார் என்று சட்ட நிபுணர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜேம்ஸ் வழக்கில் அவரது வக்கீலாக அமல்அல் சுபி ஆஜராகி வருகிறார்.

    அவரிடம் இதுபற்றி கேட்டபோது, தற்போது கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    அதே நேரத்தில் அவரை நாடு கடத்தும்படி ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார். #Agustascandal

    ×