search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவடி நாசர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.
    • காலை 5 மணி, 6 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் சில சமயம் காலை 8 மணி, 9 மணிக்குதான் பல பகுதிகளுக்கு செல்கிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

    நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    அமைச்சர் பதவியை இழந்த ஆவடி நாசர் பால்வளத்துறையில் சரியாக கவனம் செலுத்தாததால் அதள பாதாளத்துக்கு அதன் நிர்வாகம் சென்று விட்டதாகவும், பால் தட்டுப்பாடு மற்றும் பால் வினியோகம் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், வந்த பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஆவடி நாசர் ஆரம்ப கால கட்சிக்காரர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விசுவாசி.

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலம் முதல் இவரும் இளைஞரணியில் பொறுப்பு வகித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடும் கட்டளைகளை நிறைவேற்றி வந்தவர்.

    ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சரவையில் 2 முறை மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் அமைச்சர்களுக்குள் இலாகா மாற்றங்கள் நடந்துள்ளதே தவிர ஒருவர் கூட அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. ஆவடி நாசர்தான் இப்போது பதவி இழந்தவர்கள் பட்டியலில் உள்ளார்.

    1980-களில் தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலகட்டத்தில் அன்றைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக ஆவடி நாசர் இருந்ததுடன் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களிலும் அவருடன் சென்று கட்சிக்காக பாடுபட்டவர்.

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர், அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும்பான்மை வித்தியாசத்தில் மாஃபா.பாண்டியராஜனை வீழ்த்தி வென்றார்.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு தனது அமைச்சரவையில் பால் வளத்துறையை கொடுத்து நாசருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

    அமைச்சரான சில நாட்களிலேயே, தீபாவளி நேரத்தில் 1.5 டன் ஆவின் இனிப்புகளை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் பால்வளத்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஆவடி நாசர் அதன் பிறகு அந்த துறையில் நடைபெற்று வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் விட்டதால் ஆவின் நிறுவனம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு முழுமையாக பால் ஊற்றி வந்த நிலையில் இப்போது நிலைமை தலைகீழாக போய் பல்வேறு மாவட்டங்களில் தனியார் கம்பெனிகளுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதை சமாளிக்க மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பால்பவுடரை வாங்கி ஆவின் நிறுவனம் பால் தயாரித்து வருகிறது.

    அது மட்டுமின்றி பல மாவட்டங்களில் பால் வினியோகமும் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. காலை 5 மணி, 6 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் சில சமயம் காலை 8 மணி, 9 மணிக்குதான் பல பகுதிகளுக்கு செல்கிறது.

    இது தவிர ஆவின் பால் கொள்முதலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் அதை அவர் சரி செய்ய தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஆவின் நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு டெவலப்மெண்ட் ஆகவில்லை. உங்கள் பணி போதாது என்று ஏற்கனவே அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜாவால் அவருக்கு மேலும் கெட்ட பெயரை உருவாக்கி கொடுத்தது.

    ஆவடி மாநகர செயலாளராகவும் ஆவடி மாநகராட்சி 4-வது வார்டு கவுன்சிலராகவும், தேர்தல் பணிக்குழு தலைவராகவும் இருந்த ஆசிம்ராஜா மேயரை தாண்டி டெண்டா் விவகாரங்களில் தலையிட்டு தனி சாம்ராஜ்யம் செய்து வருவதாக தலைமைக்கு புகார்கள் குவிந்தது. ஒப்பந்ததாரர்களும் அவருக்கு எதிராக கிளம்பினார்கள்.

    இதற்கெல்லாம் மேலாக ஆவடியில் உள்ள 5-வது காவல் பெட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. கொடி நட்டு கடைகள் போடப்பட்டதற்கு ஆசிம்ராஜா பின்னணியில் இருந்ததாக உளவுத்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் அனுப்பியது.

    காவல்துறை நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த புகார் காரணமாக ஆசிம்ராஜாவின் மாநகரச் செயலாளர் பொறுப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிபோனது.

    அப்போதும் ஆவடி நாசரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்து உள்ளார். உங்கள் மகன் மீது அதிக புகார்கள் வருகிறது. கட்டுப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டரை நோக்கி ஆவடி நாசர் வீசிய சம்பவங்களும் கட்சி தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில்தான் பால்வளத்துறையில் உள்ள சில நிர்வாக பிரச்சினைகள் காரணமாக பால் கொள்முதல் மற்றும் வினியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் இவருக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

    இதன் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
    • நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.

    மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.

    ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.

    அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×