search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியருக்கு செருப்படி"

    சேலத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் செருப்படி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மெய்யனூர்பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 24) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதுடன், சில்மிஷமும் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.  

    இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ் தொடர்ந்து மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாணவியின் இடுப்பை பிடித்து அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு வந்தனர். 
    மேலும் அவர்களுடன் மற்ற மாணவிகளின் பெற்றோரும் வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று ஆசிரியர் சதீஷை வெளியே இழுத்து வந்தனர். பின்னர் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு வைத்து அவரை செருப்பால் சரமாரியாக அடித்தனர். இதனால் வலி தாங்காமல் அலறிய சதீஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மடக்கிப்பிடித்து நடு ரோட்டில் வைத்து அடித்து உதைத்தனர். 
     
    இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியரின் சில்மிஷம் பற்றி அறிந்ததும் அவர்களும் தங்கள் பங்குக்கு சதீஷை பின்னி எடுத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஆசிரியர் சதீஷ் மயக்கம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், ஆசிரியரை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து அங்கு திரண்ட பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள், ஆசிரியர் சதீஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க கூடாது, மாறாக பெண் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

    பின்னர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ஆசிரியர் சதீஷ் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசிரியரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். 

    சேலத்தில் சமீப காலமாக மாணவிகள், சிறுமிகளுக்கான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
    ×