search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டுப்போட்டி"

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018

    சென்னை:

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, சுனாய்னா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பி உள்ளார். #AsianGames2018

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018
    ஜகர்த்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர்கள் அய்யாச்சாமி, தருன் ஆரோக்கிய ராஜ் உள்பட 4 பேரை உள்ளடக்கிய இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதகத்தை வென்றது.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    மற்றொறு போட்டியான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஹாக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

    தொடக்க ஆட்டங்களில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0, ஜப்பான் அணியை 8-0, கொரியாவுக்கு எதிராக 5-3, இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா.

    இதனால் இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றது.

    இதனால், 13 தங்கம், 21 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsianGames2018

    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய 11-வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது. டிரிபிள் ஜம்பில் அர்பிந்தர்சிங்கும், ஹெப்படத்லானில் சுவப்ன பர்மனும் தங்கம் வென்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளியும் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையில் தமிழக வீரர் சரத்கமல்-மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலமும் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 54 பதக்கம் பெற்றுள்ளது.

    தடகள போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான வட்டு எறிதல் பந்தயம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.10 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சீமாபுனியா, குமாரி சந்தீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இருவரும் பதக்கம் பெற்று தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீமா புனியா கடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார். காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 5.50 மணிக்கும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 6.05 மணிக்கும் நடக்கிறது. இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் மோனிகா சவுத்ரி மற்றும் மஞ்ஜித்சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

    மஞ்சித்சிங் தகுதி சுற்றில் முதலிடமும், ஜின்சன் 2-வது இடமும் பிடித்தனர். இதனால் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் 800 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் (தங்கம், வெள்ளி) பெற்றுக் கொடுத்து இருந்தனர்.

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் கலந்து கொள்கிறார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் வெண்கல பதக்கம் பெற வேண்டியது. விதி முறை மீறலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது. இதனால் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலாவது பதக்கம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் 6.50 மணிக்கும், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணி பங்கேற்கிறது. தொடர் ஓட்டத்திலும் பதக் கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட களத்தில் இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி ஆக மொததம் 14 பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை இன்று பாராட்டிய பிரதமர் மோடி, மேலும் பதக்கங்களை வெல்ல காத்திருக்கும் பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ என்னும் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.

    இன்றைய 47-வது ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நமது மகள்கள் பெருமளவில் பதக்கங்களை வென்று வருவது சாதகமான அம்சங்களுக்கான அறிகுறியாக தோன்றுகிறது என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இதற்கு முன்னர் நாம் பெரிய அளவில் வெற்றிபெறாத விளையாட்டுகளிலும் நமது வீரர் - வீராங்கனைகள் தற்போது சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

    துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போட்டிகளில் நமது நாட்டினர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பிறபோட்டிகளிலும் இவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    ஊஷூ, துடுப்பு படகு போட்டிகளில் நாம் பெற்றவை சாதாரண பதக்கங்கள் அல்ல. எங்கள் திறமைக்கு வானமே எல்லை என்பதை பறைசாற்றிய இந்திய வீரர்-வீராங்கனைகளின் ஊக்கத்துக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.


    இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது? என்பதை அறிந்து கொள்வதற்காக நாள்தோறும் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூகவலத்தளங்களிலும் தேடுகின்றனர்.

    நமது நாட்டை சேர்ந்த மகள்கள் அதிகமான பதக்கங்களை பெற்று தந்துள்ளது, சாதகமான அறிகுறியாகும். மேலும், 15,16 வயதிலும் நாட்டுக்கு பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர், இவர்களில் பலர் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் சாதகமான அறிகுறியாகும்.

    நாட்டுக்காக பதக்கம் வென்ற அனைத்து வீரர் - வீராங்கனைகளை பாராட்டுகளையும், இதர போட்டிகளில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு (29-ம் தேதி) எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்ளும் அதே வேளையில் ஆரோக்கியத்தை பேணுவதற்கு விளையாட்டுகளில் நமது மக்கள் ஈடுபாடு காட்ட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    ஏனெனில், ஆரோக்கியமான இந்தியாவால்தான் வளமையான இந்தியா உருவாகும். இந்தியா நலமாக இருந்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AsianGames2018 #winningmedals #positivesign
    ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ, ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். #AsianGames2018
    ஜகர்தா:

    18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

    நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் மூன்று நிலை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார். #AsianGames2018 #SanjeevRajput
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கமும், அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.



    இந்நிலையில், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 452.7 புள்ளிகள் பெற்றார்.

    இப்பிரிவில் சீன வீரர் ஹுயி ஜிசெங் தங்கப்பதக்கமும் (453.3 புள்ளிகள்), ஜப்பான் வீரர் மத்சுமோட்டோ (441.4 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #AsianGames2018 #SanjeevRajput

    மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த யாக்சிமுராடோவா-வை எதிர்கொண்டார். இதில் 10 - 0 என வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் வினேஷ் போகத் வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் முன்னணி வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் 7-9 எனத் தோல்வியடைந்தார். என்றாலும் இன்னொரு போட்டியில் வெற்றி பெற்றால் வெண்கலம் வெல்ல வாய்ப்புள்ளது.
    45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது.

    18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 2-ந்தேதி வரை தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.

    ஆசிய விளையாட்டு முதல் முறையாக 2 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    56 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியாவில் இந்தப்போட்டி நடக்கிறது. கடைசியாக 1962-ம் ஆண்டு இந்தப்போட்டி அங்கு நடைபெற்றது.

    இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, கஜகஸ்தான், ஈரான், தாய்லாந்து, சீன தைபே, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஆசிய விளையாட்டில் 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது. ஈட்டி எறியும் வீரர் நிரஜ் சோப்ரா தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

    கபடி, பேட்மின்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம், ஆக்கி, ஸ்குவாஷ், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    கடந்த முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் ஆக மொத்தம் 57 பதக்கம் பெற்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த முறை அதிகமான பதக்கங்களை குவிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவே எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டித் தொடரிலும் சீனா பதக்கங்களை குவிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த நாடு 879 வீரர், வீராங்கனைகளுடன் இதில் பங்கேற்கிறது.

    கொரியா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வேட்டையாடும் வேட்கையில் உள்ளன.

    நாளை தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #AsianGames2018
    ×