search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசாமிகள் வெறிச்செயல்"

    நாமக்கல் அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். திருட வந்த இடத்தில் மர்ம ஆசாமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவியும் இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பூசன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். நேற்று காலை 10 மணிக்கு மேல் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் பூசன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது வாய் மற்றும் கால்களும் கட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பூசன் வீட்டில் இருந்த மொபட், டி.வி. மற்றும் அவருடைய செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது வீட்டுக்கு திருட வந்த மர்ம ஆசாமிகள் அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை துணியால் கட்டி இருக்கலாம். பின்னர் ஆத்திரத்தில் பூசனை அடித்து கொலை செய்து விட்டு உடலை கட்டிப்போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூசனை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×