search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்துகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன.

    மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதி.
    • சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில், தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதால், மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம்.

    தற்போது, சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    அடுத்த கட்டமாக, 250 விரைவு பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில், இதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

    இதன் வாயிலாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    சென்னை:

    போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர் சிங் மூலம் (காண்டிராக்ட்) டிரைவர், கண்டக்டர்களை வேலைக்கு பணியமர்த்துவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.22 ஆயிரம் சம்பளத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்தில் தினசரி 813 ரூபாய்க்கு பதில் 553 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற டிரைவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்த்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஏப்ரல் 18 அன்று ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இதன் மீது தற்போது 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டது. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை இணை கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் அனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சம்மேளன இணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்துக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர் கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தடையும் பஸ்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்துக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர் கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

    மேலும் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.
    • திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

    அதன்படி கடந்த 12-ந் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 13-ந்தேதி பயணம் செய்ய 10 ஆயிரம் பேரும், 12-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும், 14-ந்தேதிக்கு 1000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 800 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடந்துள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ள விரைவு பஸ்கள் நிரம்பியவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்படும்.

    தீபாவளியை போல பொங்கலுக்கு பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுங்கள்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
    • பேருந்துகளை நவீனமயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

    மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.

    மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பஸ்சில் பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும்.
    • டிரைவர் இடது பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்து யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என உறுதி செய்த பின்தான் பஸ்சை இயக்க வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழ்நாட்டில் சாதாரண நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    அவ்வாறு பயணிக்கும் பெண்களிடம் கண்டக்டர் ஏளனமாக நடந்து கொள்வதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

    இதனால் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பெண் பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய வரும்போது, மரியாதையின்றி சில கண்டக்டர்கள் ஏளனமாக நடந்து கொள்வதாகவும், இது வேதனை அளிக்கக்கூடிய விசயம் என்றும், இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    அதன் அடிப்படையில் ஒவ்வொரு பஸ் டெப்போக்களிலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அவை வருமாறு:-

    * பயணிகள் பஸ்சுக்காக நிற்கும்போது பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பஸ்சை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

    * டிரைவர் பஸ்சை குறித்த பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பஸ்சை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    * கண்டக்டர்கள் வேண்டும் என்றே பஸ்சில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடக்கூடாது.

    * வயதான பெண்கள் இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

    * பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

    * பஸ்சில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    * பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து டிரைவருக்கு விசில் செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

    * பஸ்சை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும்.

    * பஸ்சை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்த வேண்டும். பக்கவாட்டில் நிறுத்தக் கூடாது.

    * பஸ்சில் பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும்.

    * டிரைவர் இடது பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்து யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என உறுதி செய்த பின்தான் பஸ்சை இயக்க வேண்டும்.

    * பஸ் புறப்பட்ட பின் பயணிகள் ஓடி வந்தால் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

    * மாணவ-மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * கதவுகள் இல்லா பஸ்சில் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறும், படிக்கட்டில் நின்றவாறும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

    * பஸ் நிறுத்தம் வருவதை குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும்.

    * டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியில் இருக்கும்போது பஸ்சுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

    * கண்டக்டர் எப்போதும் பஸ் இயங்கி கொண்டு இருக்கும்போது, இரண்டு படிக்கட்டுகளும் அவருடைய பார்வையில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
    • நிறுத்தத்தை விட்டு தூரம் சென்று நிறுத்தக் கூடாது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 28 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    தற்போது பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாநகர பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகிறது. இலவசம் என்பதால் பெண்களை அவமதிக்க கூடாது, அவர்களிடம் கனிவாக நடந்து கொளள் வேண்டும் என டிரைவர்-கண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்கள் கை செய்கை மூலம் பஸ்சை நிறுத்த முயன்றால் நிறுத்தி ஏற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஒருசில பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்துவதாகவும் இதனால் பெண்கள், வயதானவர்கள் ஓடிச்சென்று ஏறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாமிற்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து அவர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார். டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். நிறுத்தத்தை விட்டு தூரம் சென்று நிறுத்தக் கூடாது.

    பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கிளை மேலாளர்கள் எடுக்க வேண்டும் என்று அன்பு ஆபிரகாம் அறிவுறுத்தி உள்ளார்.

    • சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.
    • மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும்.

    சென்னை:

    மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

    அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில், வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

    அதன் பின்னர், 1.8.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங் களை சமர்ப்பிக்க வேண்டும்.

    சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும்.
    • மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.

    தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும். மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும்.

    ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×