search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு சார்பு நிறுவனங்கள்"

    அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு கவர்னர் கிரண்பேடி தான் காரணம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #cmnarayanasamy #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, காரைக்கால் ஜெய பிரகாஷ் நாராயணன் ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு சார்ந்த சம்பள மானியமாக நடப்பாண்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் .அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்துள்ளது.

    இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரின் நிதி அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை கவர்னர் மதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அனுப்பிய கோப்புக்கு அனுமதியும் தரவில்லை.

    அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தோடு இயங்க முடியாது. பல நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக இயங்குகிறது.

    கதர் வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், கூட்டுறவு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எண்ணாமல் மக்களுக்கான சேவை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. கவர்னர் லாபத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என சொல்கிறார்.

    பிற அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி தர முட்டுக்கட்டையாக உள்ளார். விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும்.

    சம்பந்தப்பட்ட துறைகளை அழைத்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கவர்னர் உடனடியாக அதை அமல்படுத்த சொல்கிறார். அந்த அறிக்கையில் ஆட்குறைப்பு மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தம், சிக்கனம் ஆகியவற்றையும் பரிந்துரை செய்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல கடமைகள் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும். கவர்னருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால்தான் அவர் அரசு நிர்வாகத்தை முடக்க நினைக்கின்றார்.

    அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இதன்பிறகு கவர்னரின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    புதுவை ஜிப்மரின் கிளை 50 ஏக்கரில் சேதராப்பட்டில் அமையவுள்ளது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடனடி விபத்து மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு மையம், இதயநோய் சிகிச்சை, வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜிப்மர் கிளை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.ஆயிரத்து 200 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதற்கான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். புதுவையில் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் 10 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் இருந்தது.

    தற்போது புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டாக குறைத்துள்ளது. 8 ஆண்டுக்கு பிறகும் படிப்பை முடிக்காமல் 50 மாணவர்கள் உள்ளனர்.

    இவர்கள் என்னை சந்தித்து தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேசி கூடுதலாக ஒரு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க கோரியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #cmnarayanasamy #governorkiranbedi

    ×