search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சியினர் கைது"

    உண்ணாவிரதம் முடிந்து ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது பரோட்டா விலை தகராறில் அடிதடி-ஓட்டல் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை குரோம்பேட்டையில் ஒரு கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் வந்தனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போராட்டம் முடிந்ததும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது குரோம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்தனர்.

    16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்தார். அப்போது ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.

    அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று அதில் இருந்தவர்களிடம் தகவல் கூறினார்.

    பஸ்சில் இருந்தவர்கள் உடனடியாக ஓட்டலுக்கு வந்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    அரசியல் கட்சி தொண்டர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் மோதல் உருவானது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் திடீரென்று ஓட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். அனைத்து பொருட்களையும் சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.

    போலீஸ் நிலையம் அருகே இருந்த கடையில் மோதல் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்றனர்.

    இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். இதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆவர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    மோதல் நடந்த போது அடிதடியில் ஈடுபட்டவர்கள் ஓட்டல் ஊழியர்கள் மீது வென்னீரை தூக்கி ஊற்றினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×