search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்த்யோதயா"

    ‘அந்த்யோதயா’ ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். #ponradhakrishnan
    சென்னை:

    ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    பயணிகள் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் முன்பதிவு இல்லாதவையாக, யார் வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்று இயக்கப்படும் ‘அந்த்யோதயா’ ரெயில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தனையின் செயல்பாடு ஆகும்.

    தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 2009-14-ம் காலத்தில் ஆண்டுதோறும் ரூ.879 கோடி மட்டும் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கி உள்ளது.

    ரூ.20 ஆயிரத்து 64 கோடியில் 27 ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்காக பிரதமர் நரேந்திரமோடி ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். இதில் பாதி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். எனினும் மாநில அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முழுத்தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் தெற்கையும், வடக்கையும் இணைக்கக் கூடிய வகையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. நிச்சயம் இன்னொரு ரெயில் தேவை. எனவே அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை ஏன் நீட்டிக்க கூடாது? என்று ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்னிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

    அவர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, ‘போக்குவரத்து நெரிசலால் (சிக்னல் பிரச்சினை) தற்போது முடியாது என்று தெரிவித்தார். இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன் அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.



    சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில் 4 வழிச்சாலைகள் அல்ல; 8 வழிச்சாலைகளுக்கும் மேல் அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வரையில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசும்போது, ‘தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதை, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி, ரெயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. செங்கோட்டை-புனலூர் இடையே ரூ.390 கோடியில் தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. நாளை(இன்று) அது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும்.

    பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரெயில்களில் வேகத்தை மணிக்கு 25 கி.மீ அதிகரிப்பது குறித்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார். #ponradhakrishnan 
    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கியது. கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.

    இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

    அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.

    மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.

    தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    ‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.

    சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
    சென்னை:

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

    இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

    முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×