search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambidurai"

    • மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.
    • தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள சூழலில், டெல்லியில் நேற்று முன் தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசி உள்ளார்.

    அது மட்டுமின்றி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி வைக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருந்த நிலையில் இதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபடுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியதாவது:-

    டெல்லியில் பா.ஜனதா தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவ்வப்போது தம்பிதுரையை அனுப்பி பேச வைப்பது வழக்கம். அதே போல் இந்த முறையும் தம்பிதுரை சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவையும், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி உள்ளார்.

    கர்நாடக மாநில சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார் தங்க வயல், பெங்களூரு மற்றும் ராம்ராஜ்நகர் பகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது.

    இங்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் கட்சியின் கர்நாடக மாநில அ.தி.மு.க. பிரிவை கூட ஜெயலலிதா தொடங்கி இருந்தார்.

    தற்போது இந்த தொகுதியில் பிரசாரம் செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதுபற்றி அமித்ஷாவிடம் தம்பிதுரை எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமின்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்திலும் இந்த கூட்டணி தொடருவது உறுதிபடுத்தப்படுகிறது.

    இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் தருவது குறித்தும் அமித்ஷா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த ஆண்டே மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.

    தம்பிதுரை இதற்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்தவர். இப்போது கடந்த பல வருடங்களாக பதவி இல்லாமல் உள்ளார். எனவே மத்திய மந்திரி பதவி மீது அவருக்கு ஆசை உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக தம்பிதுரை எச்சரித்துள்ளார். #LokSabhaElections2019 #Thambidurai
    புதுக்கோட்டை:

    கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

    அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் நவம்பட்டியில் அளித்த பேட்டி வருமாறு:-



    எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு தொடருவேன். எனக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஸ்டாலின் விலக தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Thambidurai
    ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுக்கிறது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று தம்பிதுரை பேசினார். #thambidurai #admk #dmk
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், பாராளு மன்ற துணை சபாநாய கருமான தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சென்று கரூர் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், வடக்கு காந்திகிராமம், ராமானூர், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, தொழிற்பேட்டை, மூலக் காட்டானூர், நரிகட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். 

    அப்போது பிரசார வாகனத்தில் நின்றபடியே தம்பிதுரை பேசியதாவது:-

    பல்வேறு தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவு பெருகி வருவதால் காங்கிரஸ்- தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதிலும் 45 கல்லூரிகளை நான் வைத்திருப்பதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். அந்த குற்றச்சாட்டு பொய் என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவாரா?. ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்தது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். 

    அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசும்போது, ஜெயலலிதாவின் உன்னத திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். கஜானாவை காலி செய்த காங்கிரஸ்-தி.மு.க.வால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்றார். இதில் கீதா எம்.எல்.ஏ., நகர செயலாளர் நெடுஞ்செழியன், பசுவை சிவசாமி, தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். #thambidurai #admk #dmk
    தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji
    சென்னை:

    கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கலின்போது, 100 மீட்டருக்கு வெளியே இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுடன் மைக்கில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்றபோது வேண்டுமென்றே அ.தி.மு.க. தொண்டர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து பிரச்சினையை ஏற்படுத்தினார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக நான் நேரடியாக முறையீடு செய்தேன்.

    அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் தம்பி துரையின் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு துணையாகவே செயல்பட்டார். இவர் கரூர் மாவட்டத்திலேயே உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் தொடர்பு உள்ளது.

    இவர் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்தால் நியாயமான தேர்தலை நடத்த இயலாது. எனவே விதி மீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவை பாராளுமன்றம் தேர்தல் முடியும் வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் நகல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. #SenthilBalaji
    கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லலாமே தவிர, அவர்கள் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது என்று சொல்லக்கூடாது. சட்டமன்றம்தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தருகிறது. அங்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து தந்தார். அந்த ஆட்சியை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் பாராட்டி சென்றார்.

    சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. வலிமையான மக்கள் இயக்கம். தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார்,அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கினார்.

    வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக மாறும் நிலை ஏற்படும்.

    ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை. துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர் நடந்த போது சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.


    மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. துரோகத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

    2014 தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஜெயலலிதா அப்போது தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. இரு முனை போட்டி நிலவுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk #parliamentelection

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

    ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.

    இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection

    மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai
    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

    அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

    அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?



    மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

    புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

    பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
    பா.ஜனத, தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என்று தம்பிதுரை எம்பி கூறியுள்ளார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கும் உரிமை, தன்மானம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ?, அவர்களுடன்தான் கூட்டணி என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.

    இன்று நம்நாட்டில் தேசிய கட்சிகளே கிடையாது. எல்லாம் கட்சிகளும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் தேசிய கட்சி நிலைமையில் இல்லை என்றார்.

    பின்னர் அவரிடம் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பித்துரை பதில் அளித்ததாவது:-

    பா.ஜ.க.வுடன் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசவே இல்லை. பா.ஜ.க. கூட்டணியிலும் இல்லை. பாஜ.க. என்னை விமர்சனம் செய்வதாலேயே நான் பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி வைப்போம்.


    திராவிட கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று தமிழிசை கூறுகிறார். திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசிய கட்சிகளை நாங்கள் எப்படி வர விடுவோம். பா.ஜ.க., தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுகின்ற ஒரே தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டுள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சினை கொடுத்து வருகிறது.

    அப்படித்தான் மேற்கு வங்காளத்திலும் செய்து வருகிறது. அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். இது பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும்.



    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜனதாவை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஓ.பி.எஸ்.சை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுப்பு தெரிவித்தது வேதனை அளிப்பதாகவும் அ.தி.மு.க.விடம் பாரதிய ஜனதா நட்பு காட்டவில்லை எனவும் தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வி.ல் எந்த ஒரு ஜனநாயக முடிவும் எடுப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசுவதாக இல்லை. மு.க.ஸ்டாலின் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார். மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்கிறார்.

    ஆனால் இவரைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. இது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

    ஒரு மத்திய அரசு பட்ஜெட்டை 5 முறை தாக்கல் செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. தற்போது 6-வது முறையாக தாக்கல் செய்தது. இதை வாக்கு வங்கிக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

    பிரதமர் மோடி பட்ஜெட்டை ஒரு டிரெய்லர் என்றுதான் சொல்லி இருக்கிறார். சில நேரத்தில் டிரெய்லர் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இருக்காது. இந்த பட்ஜெட்டை போல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் வரவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் தான் பறிபோய் இருக்கிறது.

    கஜா புயல் நிவாரண நிதி வரவில்லை, நீட் பிரச்சினை, காவிரி மேகதாது அணை பிரச்சினை எல்லாம் வேதனை அளிக்கிறது. ஜி.எஸ்.டி. என்று வந்ததோ அன்றே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எல்லாம் போய்விட்டது. பா.ஜனதாவினர் திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கள்.



    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவர் சந்திக்க முடியாது என்று சொன்னது வேதனை அளிக்கிறது. பா.ஜனதா அ.தி.மு.கவிடம் நட்புகாட்டவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர் என்று தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர் ஊராக சென்று ஊராட்சி கூட்டம் நடத்தி வருகிறார்.

    இதனால் அவரது முதல்வர் கனவு நிறைவேறப் போவதில்லை. தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.

    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர். ஏனெனில் அந்த கட்சியில் அதுபோன்ற தலைவர்கள் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

    மேகதாது அணை விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து அவையை முடக்கினோம். ஆனால் எங்களுக்கு ஆதரவாக எந்தஒருகட்சியும் குரல் எழுப்பவில்லை.

    தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் பிரச்சினை போன்றவற்றுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே அதிக இடங்களை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

    இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

    இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

    நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

    இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
    ×