search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram accident"

    • 30-ம் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.
    • கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது.

    விழுப்புரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கீரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது 60). இவரது தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் இறந்தார். நேற்று அவருக்கு 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி (52) மகன்அழகுவேல் ராஜா, மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி (22) ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.

    இந்த கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது.

    இந்த விபத்தில் ராஜேந்திரன், மனைவி சாந்தி மற்றும் அழகு ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சகுந்தலா தேவி, பலத்த காயம் அடைந்தார்.

    தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த சகுந்தலா தேவியை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குபதிந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம்வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் என்பவரை கைது செய்தனர்.

    • வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பிரபல வக்கீலான இவர் வக்கீல்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரகதீஷ்வர் (வயது 30). வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இவர் தனது சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரகதீஸ்வரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கண்டமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று வளவனூர், மடுகரை வழியாக புதுவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை காத்தவராயன் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு அந்த பஸ் கண்டமங்கலம் அருகே அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்தது.

    இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த பஸ் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடததிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாஸ்(வயது 37), சதீஷ்(25), சுனில்(31). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த மகாலிங்கம்(32), அருண்குமார்(35), மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன்(37) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று மாலை ஒரு காரில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

    காரை சேலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(40) ஓட்டிசென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு மும்பை- சென்னை அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு அங்கிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டனர்.

    காலை 5 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் காரில் இருந்த அருண்குமார், சதீஷ், கார் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தாஸ், மகாலிங்கம், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விபத்தில் இறந்த அருண்குமார், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மயிலம்:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 50). இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கையில் இருந்து தனக்கு சொந்தமான வேனில் சென்னை நோக்கி புறப்பட்டார். அந்த வேனை அங்குசாமி ஓட்டினார்.

    இந்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (48), அவரது உறவினர் சிவகங்கை அருகே உள்ள கட்டான்குளத்தை சேர்ந்த உமாபதி (35), உமாபதியின் மனைவி விஜி (28) மற்றும் பலர் இருந்தனர்.

    இவர்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அதேபோல் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வக்கிரபட்டியை சேர்ந்த அருணானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவராக குப்பத்துபட்டியை சேர்ந்த பிரபு (37) என்பவரும் இருந்தார்.

    அந்த பஸ் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது விலங்கம்பாடி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் டிரைவர் எதிர்பாராதவிதமாக மறுபுறம் உள்ள சாலைக்கு பஸ்சை திருப்பினார்.

    சிறிது தூரம் பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் மாற்றுச்சாலையில் செல்வதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

    அப்போது அந்த சாலையில் அங்குசாமி குடும்பத்தினர் வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் வேனில் பயணம் செய்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர் உமாபதி, உமாபதியின் மனைவி விஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் வேனில் பயணம் செய்த விக்னேஷ்வரன் (31), ரேகா (28), 1½ வயது குழந்தை நித்திஷ், பவித்ரன் (4), அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் அருணானந்தன், பிரபு, சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல், கரூரை சேர்ந்த நவீன் (25) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 24 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருநாவலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா திவண்டா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது 45). இவர் திருநாவலூர் ஈஸ்வரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலத்தில் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவசாமி உளுந்தூர்பேட்டையில் இருந்து கெடிலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார்சைக்கிள் திருநாவலூரை அடுத்த காந்திநகர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சிவசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சிவசாமி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவசாமி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருநாவலூரை அடுத்த சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராசு படையாட்சி(55). விவசாயி. இவர் இன்று காலை விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ராசுபடையாட்சி மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராசு படையாட்சி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள். #VillupuramAccident
    மயிலம்:

    ஆந்திர மாநிலம் சத்தியவாடி பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 39 பேர் கடந்த 8-ந்தேதி ஒரு பஸ்சில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தசரதய்யா (வயது 66) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது தம்பி ராமகிருஷ்ணன் (62) மற்றும் பஸ்சில் இருந்த 39 பேர் இடிபாட்டுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர் தசரதய்யாவின் உடலை படத்தில் காணலாம்.

    பின்னர் அவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டார்.

    மற்ற 38 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களில் சிலர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    விழுப்புரம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஓனாசிறுவயலை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம்(50), நாகராஜன்பிரபு(28) ஆகியோர் நேற்று மாலை ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

    காரை பழனிவேல் ஓட்டிசென்றார். நள்ளிரவு 1 மணியளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னால் துணிப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென்று 4 வழிச்சாலையில் திரும்பியபோது பின்னால் வந்த கார் திடீரென்று லாரி மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிதம்பரம், நாகராஜன்பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சரஸ்வதி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ×