search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TR Balu"

    • தமிழக ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளை சொல்லியது இல்லை.
    • புத்தகங்களை ஆளுநர் வாசித்தாலே உண்மையை புரிந்து கொள்ளலாம்.

    ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.மான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளைப் பொது வெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

    சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை திமுக சார்பில் நான் அளித்தேன். இந்த நிலையில், திராவிடர் குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600-ம் ஆண்டு என வைத்துக்கொண்டால், அதற்கு முன்னதாக திராவிடம் என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா?, இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?.

    ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

    திராவிடம்' என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. வடக்கு-தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன்-திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ்-சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது.

    இப்படி காலம்காலமாக இருந்த இன-இட-மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை-முன்னேற்றத்தை-எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது.

    ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் கவர்னரின் பேச்சில் வெளிப்படுகிறது. கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம்.

    கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டவைதான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
    • அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும்.

    இதுகுறித்து திமுக பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமன டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவி நிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.

    சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்" என்று பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தியும் பேசி இருக்கிறார்.

    ''சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர் அவர்கள். இவை அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கு அழகல்ல.வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்?

    ''இந்தியா என்பது இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது'' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளது. சமயச்சார்பற்ற தன்மையைப் பிரதிபலிக்க வேண்டிய ஒருவர், ஒரு சமயத்தின் சார்பாளராகக் காட்டிக் கொள்வதையும் தாண்டி, மாற்று மதத்தினர் மீது மனவேறும் மாறுபாடும் கொள்ளக் கூடிய கருத்துக்களையும், அதனை வன்முறைப்பாதையில் எதிர்கொள்ளலாம் என்ற தூண்டுதலையும் பொதுவெளியில் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும். அமைதி தவழும் தமிழ்நாட்டில் இத்தகைய கருத்துகளை ஆளுநர் என்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் போது ஒருவர் சொல்வதன் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைப்பதாக உள்ளது. சிலரின் சதிச்சிந்தனைகளுக்கு ஆளுநரின் இந்தக் கருத்துகள் தூபம் போடுவதாகவும் உள்ளது.

    இந்திய சமுதாயம் வேற்றுமை மிகுந்தது ஆகும். பல்வேறு இனம், மொழி,மதம், பண்பாடு, உணவுப்பழக்க வழக்கம், உடைகள், எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. இத்தகைய வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இதில் பிரிவினை எண்ணத்தை உருவாக்கி, இந்தியாவை நிலைகுலைய வைக்க பல்வேறு சீர்குலைவுச் சக்திகள் முயன்று வருகின்றன. சமீப காலமாகச் சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலை தூக்கி வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு வழிகாட்டுவதாக ஆளுநர் அவர்களின் இந்தப் பேச்சு அமைந்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே அதனைக் கண்டிக்க வேண்டியதாக உள்ளது.

    இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது.

    சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும். ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமமே தவிர, வேறுபாடுகள் இல்லை. மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் 'பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள்' வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு ஆளுநர் ரவி அவர்கள் இன்னும் சனாதனப் பிரமையில் இருக்கிறார். அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவின் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது.

    புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து தினமும் பேசிவரும் ஆளுநர் அவர்கள், இந்தியச் சமூக - சட்ட அமைப்புகளில் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கற்றுக் கொண்டு, அதனைப் படித்துப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களைச் சொல்வது சரியாக இருக்கும். யாருக்குச் சார்பாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கிறாரோ, அவர்களாலேயே மீண்டும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதவை சனாதனக் கொள்கைகள் என்பதை அவர் மறந்துவிட வேண்டாம்.

    90 விழுக்காடு மக்களுக்கு எதிரானது சனாதனம். சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம். எனவே, அதனை நியாயப்படுத்தி கருத்துகளை உதிர்ப்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதிரானது ஆகும்.

    சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

    எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.



    இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.
    திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன. #DMK #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. நியமித்துள்ளது. இதுதவிர மொத்தம் உள்ள 65 ஆயிரம் பூத்களுக்கும் தலா 21 பேர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், காங்கிரசுடன் கூட்டணி அமைவது உறுதி என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன.

    இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.


    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி 2007-ம் ஆண்டு பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆனார். தொடர்ந்து 2013-லும் மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த பதவி 2019 ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் கனிமொழி ஏற்கனவே இறங்கியுள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. போராட்டத்துக்கும் ஆதரவு அளித்தது. இதையடுத்து நடந்த கருத்துக் கணிப்பில் கனிமொழி இங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தூத்துக்குடி தொகுதியில் நாடார்கள் ஓட்டு அதிகம் உள்ளது. கிறிஸ்தவர்கள் ஆதரவும் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்.

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் கொண்டு வரும் முயற்சியிலும் கனிமொழி இறங்கியுள்ளார். எனவே தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன என்று கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மத்திய மந்திரியாக இருந்தபோது பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

    கத்திபாரா மேம்பாலம், கோயம்பேடு, விமானநிலைய மேம்பாலங்களும் இவருடைய முயற்சியால் கட்டப்பட்டன. இது டி.ஆர்.பாலு போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

    தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டால் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இவருக்கு உறுதுணையாக இருந்து தேர்தல் பணியாற்றுவார்கள். எளிதாக வெற்றி பெற முடியும். எனவே டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.


    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆனார். மீண்டும் இதே தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவார் என்று தெரிகிறது. கடந்த முறை 2ஜி வழக்கு காரணமாக இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது அந்த வழக்கில் நிரபராதி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே துணிச்சலுடன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் ஏற்கனவே மத்திய சென்னை பகுதியில் வெற்றி பெற்றவர். மீண்டும் இவர் இதே தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இந்த தொகுதியில் இப்போதே தி.மு.க.வினர் களம் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் முன்பு அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். கடந்தமுறை தொகுதி மாறி நின்றார். இந்த முறை மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. மேலிடம் அனுமதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபோல் தி.மு.க.வின் பிரபலங்கள் பலர் இப்போதே தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி குறித்து கட்சியிடம் தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயம் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்போதே போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்கள் என்று கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர். #DMK #ParliamentElection
    ×