search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றச்சாட்டு.
    • இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    • காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது.
    • ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத், ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி கொல்லப்பட்டார்.

    இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

    ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் அவரை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து, அவரது மார்பில் மூன்று முறை சுட்டு கொலை செய்தனர்.

    • யூத விரோதத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.
    • இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது," என குறிப்பிட்டுள்ளார்.

    "மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை பேய்த்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது".

    "எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!" என்று அவர் மேலும் கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    • உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

    அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் வரை உள்ள நிலையில் காசாவில் ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேதன்யாகுவை கண்டித்து பேரணி நடத்தினர்.

    அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர், ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    • இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
    • ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கியது.

    இதில் ஏவுகணை, டிரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள், ராணுவ தளங்கள் சேதமடைந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள் என்றும், ராணுவ தளங்கள் சிறிது சேதங்கள் ஏற்பட்டது என்றும் ஈரான் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தது.

    இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.

    இதற்கிடையே ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் அது போன்ற தவறை செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது.

    அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார்.

    இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறும் போது, ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை என்றார். இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கருதப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
    டெல் அவிவ்:

    கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை.

    ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது.

    தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    அதில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது.

    விமானம்

    அனைத்து நாடுகளை சேர்ந்த பயணிகளும் இஸ்ரேல் வருவதற்கு 14 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ஒமிக்ரான் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் மந்திரி சபை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த பயணத்தடை அமலுக்கு வந்தது.

    இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பு தடயங்களை கண்காணிக்க சர்ச்சைக்குரிய தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால் இது மக்களின் தனியுரிமையை மீறும் செயல் என இஸ்ரேலின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதற்கிடையே அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.

    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். #Israel
    காசா நகரம்:

    அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது.  இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடினர்.

    வரும் ஏப்ரலில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால் பதற்றமான எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.  மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. #Israel
    இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரி கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். #GonenSegev
    ஜெருசலேம்:

    இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.  #GonenSegev

    சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. #Israel #Beresheet
    டெல் அவிவ்:

    சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது.

    இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.

    இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

    இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

    இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-

    “சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.

    இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. #Israel #Beresheet
    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PulwamaAttack #Israel #Plaestine
    ஜெருசலேம்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர்.

    இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

    இதைப்போல பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #PulwamaAttack #Israel #Plaestine 
    இஸ்ரேல் வீரரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
    ரமல்லா:

    இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியின் தெற்கே அல்-பைரே என்னுமிடத்தில் உள்ள அம்அரிஅகதிகள் குடியிருப்பை நேற்றிரவு ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த சுமார் 400 பேரை கைது செய்தனர்.

    மேலும், அப்பகுதியில் அபு ஹமித் குடும்பத்துக்கு சொந்தமான 4 மாடிகள் கொண்ட வீட்டை வெடி வைத்து, தகர்த்து தரைமட்டமாக்கினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அங்கிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் தற்போது பாலஸ்தீன செம்பிறை தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, இப்பகுதிக்கு வந்த ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது பாலஸ்தீனியர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு பத்திரைகையாளர் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.  #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் இன்று பரிந்துரைத்துள்ளது. #Israelpolice #BenjaminNetanyahu Netanyahubribery
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். 

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வந்தனர். தன்மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர். 

    ‘வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இதுவரை பலமுறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில், சுமார் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர்வதற்கு போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாடு போலீஸ் தலைமையகம் இன்று பரிந்துரைத்துள்ளது. 

    நேதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் லஞ்சம் வாங்கி பண ஆதாயம் அடைந்ததன் மூலம் நாட்டுக்கு எதிரான மோசடி மற்றும் நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பெஞ்சமின் நேதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக இன்றே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். எனினும், தற்போது பெஞ்சமின் நேதன்யாகு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Israelpolice  #BenjaminNetanyahu Netanyahubribery
    ×