search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siddha medicine"

    • வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம்.
    • அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்வதே சிறந்தது.

    வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சர்க்கரை, கொழுப்பு, ரத்த அளவு, உப்புச்சத்து, எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை டாக்டர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப்பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகை பலகாரங்களை அடிக்கடி உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் வாயுத் தொல்லை வரக்கூடும். இது, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

    மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம். வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்ற பிரச்சினை இருந்தாலும், அஜீரணம் இருந்தாலும் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமநீர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

    உடலின் தசைத்துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

    • கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும்.
    • நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும்.

    'சேற்றுப்புண்' தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும்.

    ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

    இது சேற்றுப்புண் அல்லது 'அத்தலட்ஸ்' புண் என்று அழைக்கப்படும் 'டீனியா பெடிஸ்' என்னும் பூஞ்சை வகை நோய். இது வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு அதிகமாக வரும். கால் விரல் இடுக்குகளில் வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு, தினவு அதிகமாக இருக்கும். சொரிந்த பிறகு எரிச்சல் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) பறங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், கந்தக பற்பம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) சேற்றுப் புண் உள்ள பகுதிகளில் அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஒன்றைப்பூசி வர வேண்டும்.

    3) கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணைக்கழுவி வர வேண்டும். 4) புண்ணைக் கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.

    5) கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
    • சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும்.

    மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

    இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும்.அடிவயிற்று பகுதியில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும்.

    மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, வாந்தி, முதுகுவலி இவற்றை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhoea) என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.

    இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்: 1) புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். 2)திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மி.கி. எடுத்து அதை ஒரு கிராம் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க வலி தீரும். 3) குன்ம குடோரி மெழுகு 500 மி.கி. வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும். 4) குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
    • கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    1) பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    2) பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    3) இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.

    4) சந்திர தரிசனம்: இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை (நிலவைப்) பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அரு ளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

    5) இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

    7) தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.

    8) சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

    9) பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

    10) இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும்.
    • இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இன்புளூயென்சா வைரஸ் தொற்று மக்களிடையே பரவலாக காணப்பட்டு வருகிறது.

    சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக தென்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டிருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேறு உடல் பாதிப்புகள் ஏற்படாதவாறு சித்த மருத்துவம் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறது.

    இன்புளூயென்சா எனப்படுவது புளூ என பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு. இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.

    இன்புளூயென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33 சதவீதம் நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியில் தெரிவதும் இல்லை.

    இன்புளூயன்சா நோய் தாக்கினால் அதிக காய்ச்சல் (100 முதல் 103 பாரன்ஹீட்), மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, தொடர் இருமல், உடல் சோர்வு, அசதி, கைகால் தளர்ச்சி, வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

    வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    இந்த நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

    தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப் படலாம். சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் என்ன நோய் என்று எளிதாக கணிக்க முடியும். விரைவு பரிசோதனை விரைவில் குணமடைய உதவும்.சித்த மருத்துவத்தில் இன்புளூயன்சா காய்ச்சல், இருமல் சளி தீர்க்கும் எளிய மருந்து மாத்திரைகள் உள்ளன. நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன. அதில் இன்னேட் இம்யூனிட்டி என்பது இயல்பாகவே நம் உடலில் உள்ளது. அக்கொயர்டு இம்யூனிட்டி என்பது நோய் தொற்றினால் உண்டாவது.

    இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். செல்வழி நோய் தற்காப்பு, எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு. உடலில் நோய் தொற்றினாலோ, தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை நாம் அதிகரிக்க வேண்டும்.

    இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1.அமுக்கரா சூரணம்-மாத்திரை, 2.நெல்லிக்காய் லேகியம், 3.திரிபலா சூரணம்-மாத்திரை.

    காய்ச்சல், சளி, இருமலுக்கு 1.பிரம்மானந்த பைரவ மாத்திரை, 2.பாலசஞ்சீவி மாத்திரை, 3.வசந்த குசுமாகர மாத்திரை, 4.சாந்த சந்திரோதய மாத்திரை, 5.தாளிசாதி சூரணம், 6.திரிகடுகு சூரணம், 7.சீந்தில் சூரணம், 8.நிலவேம்பு குடிநீர், 9.கபசுர குடிநீர், 10.திப்பிலி ரசாயனம், 11.பூரண சந்திரோதயம், 12.முத்து பற்பம், 13.பவள பற்பம், 14.முத்து சிப்பி பற்பம், 15.ஆடாதோடை மணப்பாகு முதலிய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும், குணப்படுத்தும் பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகளாகும்.

    எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த மருந்து. இது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மேலும் நோய் வராமல் தடுக்க தொற்றியிருந்தது பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமச்சீர் உணவுகளை அதாவது சத்தான அறுசுவை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல், வேண்டிய அளவு நீர் அருந்துதல், மலத்தை சரியான நேரத்தில் காலை மாலை அடக்காமல் வெளியேற்றுதல், தூக்கத்தை அடக்காமல் இருப்பது, நேரத்தில் தூங்குதல், எல்லா காலங்களிலும் தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் குடிப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றுடன் மாறுபட்ட குறிகுணங்கள் உடலில் தோன்றியதுமே உடனே மருத்துவரிடம் சென்று சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இச்சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவுசெய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலை மதிப்பில்லா உயிரோடு விளையாட வேண்டாம்.

    உடல், உயிர் பாதிப்பிற்கு நாம் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு கடிக்காத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன.

    உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.

    இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

    சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.

    வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

    குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.

    2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
    • கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

    இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்பு உறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இதில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அது தொற்றுகளிலிருந்து பிறப்பு உறுப்பை பாதுகாக்கிறது. உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினை முட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்றவை சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்களை காட்டுவதாகும்.நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

    வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்: கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்கள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா (Bacterial vaginosis), மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுத்து உஷ்ணம் (Cervicitis), நெடுநாட்களாக கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது, கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer). இதுபோன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

    வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) கீழாநெல்லி சூரணம் 1 முதல் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்,

    2) வெண் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்,

    3) ஓரிதழ் தாமரை சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்,

    4) திரிபலா சூரணம் ஒரு கிராம், படிகார பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 100 மி.கி. காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின்சாப்பிட வேண்டும்,

    5) வெண் பூசணி லேகியம் 1 முதல் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும், 6) படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்,

    7) நீங்கள் உட்காரும் அளவுள்ள பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதை ஆங்கிலத்தில் சிட்ஸ் பாத் (Sitz Bath) என்பார்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.
    • இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றுபவர் டாக்டர் எஸ்.அனிதா. இவர் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது?, அதற்கான தற்காப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    'பூப்பு' என்ற வார்த்தை பெண்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. இயல்பாக பூப்பு எய்தும் வயது 13 முதல் 16 வரையும், பூப்பு முடியும் வயது 45 முதல் 50 வரையும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் 8 மற்றும் 9 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருவம் அடைந்து விடுகின்றனர். பூப்பு எய்திய வயது முதல் பூப்பு முடியும் வயதிற்கு இடையில் தோன்றும் பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.

    கோளாறுகளின் வகைகள்

    பூப்புதடை (அமினோரியா) என்பது ஒரு பெண்ணுக்கு 25 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் இயல்பான மாதவிடாய் தடைபடுதல் ஆகும். இயல்பாகவே இது ஒரு பெண் கருத்தரித்துள்ள போதும், பாலூட்டும் காலத்திலும் பூப்புதடை ஏற்படும். பெரும்பாடு (மெனோரோஜியா) என்பது இயல்பாக 4 முதல் 7 நாட்களில் நிற்க வேண்டிய ரத்தப்போக்கு நிற்காமல் தொடர்வதாகும்.

    பூப்புவலி (டிஸ்மெனோரியா) என்பது மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பும், மாதவிடாயின் போதும் ஏற்படும் அதிகப்படியான வலியாகும். இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும். வெள்ளைப்படுதல் (லுகோரியா) என்பது பூப்பு காலத்திற்கு முன்னும், பின்னும், யோனி வழியாக சளிகலந்த நீர் போல் வெளிவரும் இயல்பை விட அதிகரித்த வெள்ளை கசிவாகும்.

    காரணங்கள்

    கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தசை வளர்ச்சி, பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி, கர்ப்பப்பை சுவர்களின் வீக்கம், ஹார்மோன் பாதிப்பு. கர்ப்பப்பை நார்திசுகட்டிகள், மாறுபட்ட உணவு, உடை என்பன போன்ற வாழ்வியல் மாறுபாடுகள்.

    வேலைப் பளுவால் வரும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், ஆல்கஹால் எடுத்தல். உடற்பயிற்சியின்மை, குழந்தை பேருக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவது, அடிக்கடி உருவாகும் நோய் தொற்றுகள் என்பன போன்றவைகள் ஆகும்.

    நிலையற்ற மனநிலை, சோர்வாக உணர்தல், பதற்றம், தூக்கமின்மை, முதுகுவலி, வாந்தி, குமட்டல், உடல் எடை அதிகரிப்பு. அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மார்பகங்களில் வீக்கம், தேவையற்ற ரோம வளர்ச்சி ஆகியவை மாதவிடாய் கோளாறுகளுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

    கர்ப்பப்பை நலன் காக்கும் சித்த மருத்துவம்

    உளுந்து, வெந்தயம், எள், அசோகு, சதாவேரி, சதகுப்பை, வெள்ளை பூசணிக்காய், கற்றாழை, முருங்கை, பெருஞ்சீரகம், குங்குமப்பூ, பிரண்டை முதலியன கர்ப்பப்பை கோளாறுகளுக்கு சிறந்த மூலிகைகள் ஆகும்.

    உளுந்து களி அல்லது உளுந்தங்கஞ்சி செய்து உண்ண அதில் உள்ள இரும்பு சத்து, போலேட் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குகிறது. வெண்பூசணிக்காயை ஜூஸ் அல்லது தயிர் சேர்த்து கறியாக உண்ண அதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் பூப்பு காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. எள்ளில் உள்ள 'வைட்டமின் -இ' பூப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை ஊற வைத்து உண்ண ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் தொந்தரவுகள் குணமாகும். முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து குடிப்பதால் மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் ரத்த சோகை நீங்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்த அதில் உள்ள க்ரோசின், பிக்ரோ க்ரோசின் என்னும் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் குறைக்கும்.

    தற்காப்பு வழிமுறைகள்

    மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்தே சத்தான உணவுகளான உலர்ந்த அத்தி, பேரிச்சை, திராட்சை, நெல்லி, பாதாம் ஆகியவற்றை உண்ண வேண்டும். மேலும் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மாதவிடாயின் போது ஏற்படும் வலி, ஒழுங்கற்ற பூப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம். மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உடல் சூட்டை தணிக்க இளநீர், கற்றாழை சாறு, கரும்பு சாறு அருந்தலாம்.

    பொதுவாக நேரம் தவறாமல் உணவு உண்ணுதல் மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டை ஆகியவை உண்பதுடன், தேவையான அளவு தண்ணீர் அருந்துதல் வேண்டும்.

    மாதவிடாயின் போது குளிர்ந்த நீரில் குளிப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், மைதா சேர்ந்த உணவுகள் உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.

    நடை பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்வதன் மூலமும், மாதவிடாய் கோளாறுகளில் இருந்து முற்றிலும் குணம் பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
    • சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன.

    பொதுவாக மக்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டு வட வலி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரண வலி என்று விட்டு விடக்கூடாது. இவைகள் தண்டு வட நரம்புகள் பாதிப்படைய (Radiculopathy generation) காரணமாகி விடும்.

    நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். முதலில் பத்தியத்துடன் மருந்துகள் கொடுத்து வீக்கம், வலி குறைந்து இளக்கம் கண்டபின் எளிய பயிற்சிகள் கொடுப்பதோடு தண்டு வட புற சிகிச்சை முறைகள், தண்டு வடம் சீராகவும், ஜவ்வுகளின் அழுத்தங்களை குறைத்து வலுப்பெற செய்கிறது.

    மேலும் எலும்பு மூட்டுக்கள் உறுதி பெற மூட்டுக்களில் எண்ணெய் பசை சீராவதற்கான ரசாயனங்கள், லேகியங்கள், பஸ்பங்கள் முதலிய சக்தி வாய்ந்த மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாமல் புற மருத்துவ சிகிச்சைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று தான் 'மசாஜ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புற சிகிச்சை முறை. இதற்கு சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்று பெயர்.

    தொக்கண முறைகள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசையில் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தரும். உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை சீராக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு வலிமை தரும். நெடுந்தூரம் தினமும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ்களில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் தொக்கணம் செய்தால் உடல் சோர்வு மாறும்.

    இவ்வாறு நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தொக்கணம் எனப்படும் புற சிகிச்சை மிகவும் அவசியம்.

    குமரி மண்ணில் 7-வது தலைமுறையில் சித்த மருத்துவ சேவையாற்றி வருகிறோம் என டாக்டர்கள் குணசிங்க வேதநாயகம், பிரசாந்த் சிங் தெரிவித்தனர்.

    ஆனக்குழி ஆசான், டாக்டர் குணம் மருத்துவமனை, ஆனக்குழி, பாலப்பள்ளம் அஞ்சல்-629159. தொடர்புக்கு: 04651 226354. 227827 செல் எண்: 91 97867 77828.

    • மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து.
    • தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 

    சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 

    தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். 

    பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். 

    பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

    • மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.
    • இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    "வைத்தியர் ஐயா, புதுசா கல்யாணமான என் பொண்ணு வாந்தி வாந்தியா எடுத்து, மயக்கம் போட்டு விழுந்துட்டா, நீங்க தான் வந்து என்னனு பாத்து நல்ல செய்தியா சொல்லணும்" என்று திருமணமான புதுமணப்பெண்ணின் வாந்தி, பித்த வாந்தியா? அல்லது கர்ப்ப வாந்தியா? என்று நாடி பார்த்து கணித்து சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இனி அதைப்போன்ற காட்சிகளை பாக்கியராஜ் படங்களில் தான் பார்க்க முடியும். நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் பரிசோதனை கிட் வைத்து மாதந்தோறும் பரிசோதனை செய்து அவர்களே உறுதி செய்துகொள்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    திருமணமான அடுத்தடுத்த மாதங்களில் சிறுநீர் சோதனை அட்டையில் இரட்டை கோடு வந்ததும் தம்பதிகளுக்கு அளவளாவிய மகிழ்ச்சி. பெண்கள் தம் வயிற்றில் கருவை சுமப்பதில் தான் (மகப்பேறு காலம்) அவர்களுக்கு உச்சகட்ட ஆனந்தம். அவர்களுக்கு தாய்மை மிகப்பெரிய பரிசு. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக இருப்பது என்பது மிகச்சிறந்த உணர்வு. அத்தகைய மகப்பேறு காலத்தில் அவர்கள் சமாளிக்கும் உடல் உபாதைகள் ஏராளம். மகப்பேறு காலத்தின் முதல் 3 மாதங்களில் மசக்கை எனும் கர்ப்பகால வாந்தியை சமாளிப்பது பலருக்கு மிகக்கடினம்.

    சிலருக்கு இந்த மசக்கை கர்ப்பகாலம் முழுவதும் குமட்டி, குமட்டி வாந்தி எடுக்கும் நிலை, மகளிரை துன்புறுத்தும். கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன் முக்கியமாக பீட்டா-எச்சிஜி எனும் சுரப்பு அதிகரிப்பால் இந்த மசக்கை உருவாகும். திருமணமான பெண்கள் மாதவிலக்கு தள்ளி போவதுடன் இந்த மசக்கை உண்டாவதை கர்ப்ப காலத்தின் அடையாளமாக கொள்ளலாம். உண்ட உணவு சிறிது கூட வயிற்றில் தங்காமல் அப்படியே வாந்தியாகி பெண்களை சோர்வடையச்செய்யும். அதற்கான தீர்வை தேடுபவர்கள் ஏராளம்.

    கர்ப்ப காலத்தில் மருந்துகளை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை உலக அளவில் விடுத்த முதல் நிகழ்வு 1960 களில் நடந்த தாலிடோமைடு என்ற மருந்தால் ஏற்பட்ட விபரீதம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. என்னவெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மசக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தால் ஜப்பான், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறந்த சிசுக்கள் பலவும் கை,கால் குறைபாடுள்ளவையாக இருந்தது குறிப்பிடத்தக்க வருத்தம் தரும் நிகழ்வு. ஆனால் அவர்களுக்கு சித்த மருத்துவம் தரும் எளிய மருந்து 'மாதுளை மணப்பாகு'.

    சித்த மருத்துவ கணிப்புப்படி அதிகரித்த பித்தம் ஒன்றிணைந்து, இந்த மசக்கையை உண்டாக்குவதால் மாதுளை பித்தத்தை குறைத்து வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது. இது மிகவும் பாதுகாப்பானது. மாதுளையில் அதன் நிறத்திற்கு காரணமான அதிகப்படியான ஆன்தோசயனின் நிறமிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தையும் நல்ல போஷாக்கையும் அளிக்கும் மாதுளம் பழம் என்பது பலரும் அறிந்தது. அதனைக் கடந்து கர்ப்பகாலத்தில் மாதுளை பழச்சாற்றினை எடுத்துக்கொள்ள பிறக்கும் குழந்தை அழகாகவும்,புத்தி தெளிவாகவும் பிறக்கும் என்பது வாய்மொழி செய்தி அந்த வரிகளை உறுதி செய்கின்றன நவீன அறிவியலின் சில ஆய்வுகள்.

    மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் தன்மையுள்ள பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு நன்மையையும் தோலிற்கு அழகையும் கொடுக்கக்கூடியது. அதில் உள்ள வேதிப்பொருட்களால் கர்ப்பகாலத்தில் கருவின் மூளையில் ஏற்படும் காயங்களை தடுத்து, புத்தி தெளிவை உண்டாக்குவதாக எலிகள் மீது நடத்திய ஆய்வுமுடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் நஞ்சுக்கொடியின் அழுத்தத்தை குறைத்து, தடைபட்ட கருவளர்ச்சியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.

    மாதுளை மட்டுமல்லாமல் மசக்கையில் பலனளிக்கும் பல மூலிகை கடைசரக்குகள் உள்ளது. மசக்கையில் இருந்து விடுபட இஞ்சியை அவ்வப்போது நீரில் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளலாம். பல வெளிநாடுகளில் கூட 'மார்னிங் சிக்னஸ்' எனப்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை மருந்தாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாலில், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டாலும் வாந்தி குறையும். டீ, காபிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். புதினா இலைகளை தேநீராக்கி குடிப்பதன் மூலமும் பலன் பெறமுடியும். கர்ப்ப காலத்தில் மசக்கை வாந்தியால் ஏற்படும் சத்துக்கள் இழப்பையும், கருவில் வளரும் மகவுக்கு தேவையான போஷாக்கையும் ஈடுகட்ட இரும்புசத்து மாத்திரைகளையும் பாதுகாப்பான சத்துமருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

    சித்த மருத்துவத்தில் உள்ள 'அயசெந்தூரம்' மற்றும் 'அன்னபேதி செந்தூரம்' ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அத்துடன் நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்து, சத்துக்களை உள்ளடக்கிய அமிர்த பெட்டகமாக உள்ளதால் அதனையும் எடுத்துக்கொள்ளலாம். அதியமான் அவ்வைப்பாட்டிக்கு கொடுத்த நெல்லிக்கனியைப் போல, பெண்கள் தம் கருவில் உள்ள மகவிற்கும் கொடுத்து வருங்கால சந்ததியின் ஆயுள்ரேகையை கருவிலேயே உறுதிசெய்யலாம்.

    மேலும் 'கருவேப்பிலை சூரணம்' எனும் சித்த மருந்தையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து அனீமியா எனும் ரத்தகுறைவு நோய்க்கு தீர்வு தரும். கருவேப்பிலை ஈர்க்கினை சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமிட்டு குடிப்பதாலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இயற்கையாய் கூடும். மசக்கை வாந்தியும் நிற்கும். கர்ப்ப கால அசீரணமும் நீங்கும். மசக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அசீரணம், புளியேப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் ஏற்பட்டு அவர்களைத் துன்புறுத்தும். இதற்கு ஏலக்காய் முதன்மையாக சேர்ந்த 'ஏலாதி சூரணம்' என்ற சித்த மருந்து உதவும்.

    அவ்வப்போது இதனை எடுத்துக்கொள்ள நன்மை தரும். மேலும் இதனால் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் தோலில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நல்லது. இந்த வலிகளுக்கு வெளிப்பிரயோக சித்த மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மிக்கது உள் மருத்துவம் மட்டுமல்ல. வெளி மருத்துவமும் கூட தான். அந்த வகையில் இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    அதை ஐந்தாம் மாதம் முதலே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த துவங்குவது நல்லது. வலியை குறைக்க 'பிண்ட தைலம்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். 'குந்திரிக்க தைலம்' என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவ தசைகள் தளரும். மகப்பேறுகாலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் பருவங்களில் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. அவற்றை முறையாக சித்த மருத்துவர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவத்திற்கு வழிகோலும்.

    மாறாக, நஞ்சுக்கொடி மகவின் கழுத்தை சுற்றி இருத்தல், அதிக எடை உள்ள மகவு, அதிக ஆபத்துமிக்க பிரசவம் என்று கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரசவத்திற்கு பின் நல்லபலன் தரும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதங்களில் 'பாவனபஞ்சாங்குல தைலம்' என்ற சித்தமருந்து பெரும் பயனளிக்கும். கருப்பையானது விரிவடையும் போது அதன் பின்பகுதியில் உள்ள மலக்குடலை அழுத்தும்போது மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவே பின்னாளில் பல பெண்களுக்கு மூலவியாதிக்கு வித்திடும். அவர்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை பயன்படுத்த கர்ப்ப சூடு, சிறுநீர்ப்பாதை எரிச்சல், மலச்சிக்கல் இவற்றை போக்கும்.

    மேலும் கர்ப்பத்தில் குறைவான பனிக்குடநீரைக் கொண்டுள்ள பெண்களுக்கு தண்ணீர்விட்டான் எனும் மூலிகை சேர்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். நவீன வாழ்வியலில் துரித உணவுகளை அதிகம் நாடும் பெண்கள் கர்ப்ப காலத்திலே சர்க்கரை நோயில் அகப்பட்டு கொள்வதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது. நடை பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு முறைகள் இவற்றை பின்பற்ற மறந்தக்காரணத்தால் 'ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' எனும் கர்ப்ப கால நீரிழிவு பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் மாறிவிடுகிறது.

    அதற்காக சித்த மருத்துவம் கூறும் உணவு முறைகளும், மருத்துவ முறைகளும், யோகாசன பயிற்சி முறைகளும் பின்பற்றுதல் அவசியம். அந்த வகையில் மற்றொரு சவாலான நோய்நிலை கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் அதாவது 'ஜெஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன்'. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

    இல்லாவிட்டால் பிரசவகாலத்தில் வலிப்பினை ஏற்படுத்தி பல்வேறு சிக்கல்களை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்தும். பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் சித்த மருத்துவம் கூறும் யோகாசனப் பயிற்சிகளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தனித்தனி முறைகளை பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் தாய்க்கு மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். கருவில் வளரும் மகவுக்கும் ஆரோக்கியம் கிட்டும்.

    முதல் மூன்று மாதங்களில் தாடாசனம், உத்தனாசனம், சேது பந்தாசனம், பூர்ணதிதலி ஆசனம், கட்டிசக்ராசனம் ஆகியவற்றுடன் பிராணாயாமம் செய்தல் சிறப்பானது. கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்களில் தாடாசனம், கட்டி சக்ராசனம், வஜ்ராசனம், அனந்தாசனம், சீதலி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் இவற்றை பயிற்சி செய்தல் நல்லது. கடைசி மூன்று மாதங்களில் அர்த்த திதலி ஆசனம், பூர்ண திதலி ஆசனம், பிராணாயாமம், தியானம், மற்றும் ஓய்வு நிலை பயிற்சிகளை செய்தல் நல்லது. இவை சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

    கர்ப்ப காலத்தின் போது கணவனின் கையைப்பிடித்து சிறிது தூரம் மேற்கொள்ளும் உல்லாச நடை கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி மன உறுதியையும், ஆனந்தத்தையும் தரும். இதனை புரிந்துகொண்டு ஆண்கள் செயல்படுவதும், அவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவரச வாழ்வியலில் அவசியமான ஒன்று. இயற்கை உணவும், வாழ்வியல் நெறிமுறைகளும், இன்னும் பல சித்த மருத்துவமுறைகளும் காலம் கடந்து நம்மை காத்துக்கொண்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நலப்பெட்டகமாக உள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்தல் எளிய சுகப்பிரசவத்திற்கு மட்டுமின்றி மெய்நலத்திற்கும் வழிவகுக்கும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    ×