search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rangasamy bjp"

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார். #bjp #admk #nrcongress #parliamentelection

    புதுச்சேரி:

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது.

    அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சியடையவும் உதவியாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். உள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். மாணவர், இளைஞர், மீனவர், முதியோர், தொழிலாளர், அரசு ஊழியர், வர்த்தகர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றினோம். இதன்மூலம் புதுவை மாநிலமே பெரும் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரங்கசாமி அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார்?

    பதில்: தகுந்த நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்வோம். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார்.

    கே: பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா?

    ப: நாங்கள் கூட்டணியில்தான் உள்ளோம். கடந்த கால கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    கே: அ.தி.மு.க., பா.ஜனதாவோடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இல்லையே?

    ப: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலிலேயே அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்தோம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்தோம், பிரச்சாரமும் செய்தோம்.

    கே: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப: சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை நாங்கள் பாராட்டினோம். பல நல்ல வளர்ச்சி திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.

    கே: புதுவை முதல்-அமைச்சர் கவர்னரோடு மோதல்போக்கை கடைபிடிக்கிறாரே?

    ப: கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவர் முதல்- அமைச்சர். அவர் மத்திய மந்திரியாக இருந்த போதே கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை பட்டியலிட்டு சொல்லியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் யாருக்கு என்ன அதிகாரம்? என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடமை உள்ளது. அதைவிடுத்து கவர்னரோடு மோதல் போக்கில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை. முடிந்துள்ள 2½ ஆண்டு கால ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் புதுவையில் கொண்டுவரப்படவில்லை. நடைமுறையில் இருந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை. பொதுப்பணித்துறை மூலமாக தார்சாலை போடும் பணியாவது நடக்கிறதா?

    கே: புதுவை முதல்- அமைச்சர் உங்களை மோடியின் தம்பி என கூறியுள்ளாரே?

    ப: மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் மோடியின் தம்பி என்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    கே: பொங்கல் பரிசு, தீபாவளி பரிசு எதையும் புதுவை அரசு தரவில்லையே?

    ப: மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையை செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

    கே: காங்கிரஸ் அரசின் குறைகள் பற்றி நீங்கள் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

    ப: சட்டமன்றத்தில் நாங்கள் பேசியுள்ளோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அரசின் குறைகளை நிறைய தெரிவித்துள்ளனர். நாளிதழ்களிலும் அரசின் குறைகளை கூறியுள்ளனர். சமீபத்தில்கூட சட்ட ஒழுங்கை பற்றி கூறியுள்ளனர். பாராளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இதையெல்லாம் எடுத்துக்கூறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #bjp #admk #nrcongress #parliamentelection

    ×