search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy Health"

    • கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது.
    • கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம்.

    கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக நீங்கள் எதையும் சாப்பிடத் தேவையில்லை. அதாவது, நீங்கள் ஏற்கெனவே என்ன சாப்பிட்டுக்கொண்டிருந்தீர்களோ, அதையே இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டால் போதுமானது.

    சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். எனவே, அப்படி இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேர்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

    4 முதல் 6 மாதங்கள் வரையிலான இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரில் நீங்கள் 2,200 கலோரிகள் வரை சாப்பிட வேண்டும். அதாவது 300 முதல் 350 கலோரிகள் வரை அதிகமாக நீங்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக இன்னொரு வேளை உணவு சாப்பிட வேண்டும் என்றில்லை. ஒரு டம்ளர் பால் குடித்தாலே அதிலிருந்து உங்களுக்கு 150 கலோரிகள் கிடைத்துவிடும். அந்த வகையில் இரண்டு டம்ளர் பால் குடித்தாலே அந்த அதிகப்படியான 300 கலோரிகள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

    7 முதல் 9 மாதங்கள் வரையிலான மூன்றாவது ட்ரைமெஸ்ட்டரில் மொத்தமாகவே 2,400 கலோரிகள்தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் கர்ப்பம் தரிப்பதற்கு முன் நீங்கள் சாப்பிட்டதிலிருந்து 400 முதல் 450 கலோரிகள் வரை அதிகம் சாப்பிட வேண்டி யிருக்கும். இதற்கும் நீங்கள் இரண்டு டம்ளர் பாலுடன் ஒரு முட்டையோ, பத்து பாதாமோ சாப்பிட்டாலே போதுமானது.

    எனவே, கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சாப்பிட வேண்டும் என அதிகம் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம். ஆனால், அந்த எடையானது கர்ப்பத்தின் போதான பி.எம்.ஐ-யைப் பொறுத்தது. ஒருவேளை உங்களுடைய முந்தைய கர்ப்பத்தில் மிகக் குறைவாகவே எடை கூடியிருந்தால் அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் 18 கிலோ வரைகூட எடை கூடலாம்.

    • மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

    சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பி கோளாறுகள், கருப்பை கட்டிகள், ஹார்மோன் மாறுபாடுகள் இவற்றால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை மருத்துவ முறைகளால் சீர்செய்து, தாமதமாகும் கருத்தரிப்பை துரிதமாக்கி, கருச்சிதைவு இன்றி பாதுகாத்து பிரசவம் வரை கொண்டு செல்வது என்பது மகளிர்க்கு மற்றொரு சவால்.

    மாதவிடாய் துவங்கியது முதல் மகப்பேறு, இறுதிபூப்பு வரை உள்ள நோய்க்குறிகள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடுத்தடுத்த சவால் மிகுந்த காலம் ஆகும். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. அவை அனைத்தையும் கையாண்டு ஆரோக்கியத்தை நிலைநாட்ட சத்தான உணவு அவசியமாகின்றது. முக்கியமாக கர்ப்பகாலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துக்கள் மிகமிக அவசியம்.

    "வாயும் வயிறுமா இருக்கியே, வயித்துல இருக்கிற புள்ளைக்கும் சேர்த்து சாப்பிடணும்" என்று நம் பாட்டி காலம் முதல் பழகி வந்தவை நம் பாரம்பர்ய உணவுகள். இன்றைய அறிவியல் கூறும் சுண்ணாம்பு சத்தும் (கால்சியமும்), இரும்புச்சத்தும் கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியம் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து அத்தகைய சத்துக்கள் இருக்கும் உணவு முறைகளை வழங்கி இயற்கையான முறையில் ஆரோக்கியத்திற்கு வித்திட்டனர்.

    புரதச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடல் உறுப்புகள் வளர்ச்சியை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு கிட்டத்தட்ட 10 கிலோ வரை எடை கூடும். அதற்கு புரதம் சிறந்த உணவு. சைவபிரியர்களுக்கு பட்டாணி வகைகள், முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள் இவற்றிலும், அசைவப்பிரியர்களுக்கு மீன், முட்டை, கறி வகைகள் இவற்றிலும் அதிக அளவு புரதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நமது பாரம்பரிய பருப்பு வகையான உளுந்து மற்றும் பாசிப்பயறில் அதிகம் புரதம் உள்ளது. ஆதலால் மாதவிடாய் துவங்கியது முதல் பெண்கள் தோலுடன் உள்ள கருப்பு உளுந்தை வடையாகவோ அல்லது பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம். உளுந்து பெண்களுக்கு இடுப்புக்கு அதிக வலிமையை தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    பாசிப்பயிறு எனும் சிறந்த போஷாக்கு அளிக்கும் பருப்பு வகையை பொங்கலில் சேர்த்து எடுத்துக்கொள்வது நம் மரபு. பொங்கல் என்பது கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, புரதம் நிறைந்த பாசிப்பயிறு, கொழுப்புச்சத்து நிறைந்த நெய் இவை மூன்றும் கலந்த சரிவிகித உணவாக உள்ளது. சரிவிகித உணவு பற்றி இன்றைய அறிவியல் பேசும் முன்னரே, பொங்கலை உணவாக படைத்தது நமது பாரம்பரிய உணவுமுறையின் சிறப்பு.

    சர்க்கரைச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு முதன்மை ஆற்றலை அளிக்கும் தன்மையுடையன. மாவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் இருப்பது இந்த சர்க்கரை சத்துக்கள் தான். சர்க்கரை சத்துக்கள் அரிசி வகைகளிலும், பழங்களிலும் அதிகம். ஆனால், பழங்களில் சர்க்கரை சத்துக்களுடன் எண்ணற்ற தாது உப்புக்களும், வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த இயற்கை நிறமிகளும் அதிகம் உள்ளது.

    இயற்கை நிறமிகள் பழங்களில் அதிகம் கிடைக்கின்றது. ஆக, 'மாசமா இருக்கும் போது மாதுளை சாப்பிட்டால் பிறக்கிற குழந்தை நல்ல கலர்ல இருக்குமாம்' என்பதை வேடிக்கை மொழியாக பார்க்காமல், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மாதுளையை பெண்கள் எடுத்துக்கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ஆரோக்கியம் தானே அழகு. அதற்குத்தான் இந்த மறைமொழி.

    கர்ப்பம் தரித்த பெண்கள், சர்க்கரைச்சத்து நிறைந்த தீட்டப்பட்ட அரிசியை எடுத்துக்கொள்வதை விட பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பூங்கார் அரிசி சர்க்கரை சத்தினை மட்டும் கொண்டிராமல் அதிக அளவு இரும்புச்சத்தினையும் கொண்டுள்ளது.

    மாதம்தோறும் ரத்தஇழப்பினை சந்திக்கும் பெண்களுக்கு இரும்புசத்து தேவையான ஒன்று. அதனை பூங்கார் அரிசி பூர்த்தி செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து எனும் கால்சியம் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி வகை குழியடிச்சான் அரிசி, அதிகம் கால்சியத்தை கொண்ட மற்றொரு அரிசி வகை நீலம் சம்பா அரிசி. பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரின் உடலுக்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்களை இயல்பாகவே கொண்டுள்ளன. இதைப் பயன்படுத்திய நமது மூதாதையர்கள் சத்துக்கு தனி மாத்திரை மருந்துகளை உண்ணாமல் வாழ்ந்தது உலகறியும் வரலாறு. சத்தான உணவைப் பயன்படுத்த மறந்த நாம், சக்கையை உணவாக அருந்தி மாத்திரைகளை நம்பி வாழ்நாளை கடத்துகிறோம் என்பது தான் உண்மை.

    கொழுப்பு பொருட்கள் அதிக அளவு சக்தியை தரக்கூடியது. நரம்பு மண்டலத்தின் செயர் பாட்டுக்கும், உடலை காக்கவும், உடல் அழகுக்கும் அவசியமானது. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் வேதிமூலக்கூறுகள் கொழுப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே உடல் பெறமுடியும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல பலத்தை தரும். பாலில் புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் உள்ளது குறிப்பி டத்தக்கது. பொதுவாக எண்ணெய் வகைகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகம்.

    சித்த மருத்துவம் எண்ணெய் என்று குறிப்பிடுவது எள்ளின் நெய்யை தான். நல்ல எண்ணெய் என்ற பெயரைக்கொண்ட எள்எண்ணெய் பெண்களுக்கு மிகசிறந்த பலனைத் தரக்கூடியது. சமையலில் நல்லெண்ணையை பயன்படுத்தினால் புற்றுநோயை தடுக்க முடியும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வதன் மூலமும் பெண்களுக்கு அத்தகைய சத்துக்கள் கிடைக்கும். எள் எலும்புகளுக்கு மிகசிறந்த உணவு. எள்ளு ருண்டைகளை பாரம்பரிய கால்சியம் சத்து உருண்டைகள் என்றே சொல்லலாம்.

    எலும்புகளை, மூட்டுகளை வன்மையாக்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த எளிய உணவு கேழ்வரகு. இதனை மகப்பேறு காலத்தில் பெண்கள் அவ்வப்போது பனைவெல்லம் சேர்த்து உருண்டையாக்கி எடுத்துக்கொள்வது நல்லது. பயன்படுத்த மறந்த மற்றொரு பாரம்பரிய சிறுதானிய உணவு தினை. இதனுடன் அவ்வப்போது நெய், பனைவெல்லம் சேர்த்து தினைமாவு உருண்டையாக எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுப்படும்.

    இரும்பு சத்து உடலின் ரத்தத்துக்கு அவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகளை எடுப்பதுடன் அதிக இரும்பு சத்து மிக்க முருங்கைக்கீரையை, ஈர்க்குடன் சேர்த்து அவ்வப்போது சூப் செய்து எடுத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை மற்றும் ஈர்க்கும் அதிக இரும்புச்சத்தினை கொண்டது. பப்பாளி, அத்திபழம் ஆகிய நம் நாட்டு நார்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக்கொள்வதும் சத்துகுறைப்பாட்டை பூர்த்தி செய்யும்.

    வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லி,கொய்யா ஆகிய பழங்களையும், கண் பார்வைக்கு வித்திடும் வைட்டமின் ஏ அதிகமுள்ள மாம்பழம் மற்றும் முருங்கை கீரை, கறிவேப்பிலை ஆகிய எளிமையாக கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருட்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதை அமைக்கும்.

    வைட்டமின் சி உள்ள பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிரகித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்து மிக்க அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலே வியக்கும் வண்ணம் உள்ளது.

    வைட்டமின் டி-3 எனும் சத்து, தாய்க்கும், கருவில் வளரும் சேய்க்கும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். இயல்பாகவே குறைந்தது 15 நிமிடங்கள் வரை தோலினை வெயில் படும்படியாக செய்வது தேவையான வைட்டமின் டி சத்தினை தோலில் உற்பத்தி செய்யும். உணவுமுறைகளில் அவ்வப்போது சுண்டைக்காயை வற்றலாக்கி பயன்படுத்தினாலும் வைட்டமின்-டி உடலுக்கு கிடைக்கும். மாமிச வகைகளில் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த மீன் வகைகள் மகவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் ஜிங்க், மெக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நாம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கில்லாமல் கிடக்கின்றது என்பது தான் உண்மை. அதை விடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்துக்கள் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையுடைய துரித உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்வது கருவில் உள்ள மகவின் ஆரோக்கியத்தை கெடுப்பது போன்றது. அவ்வகை உணவுகளை நாகரிக வாழ்வியலில் வாழும் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

    வழிவழியாய் மகப்பேற்றின் சீமந்த விழாவில் பெண்களுக்கு சத்தான சிகப்பரிசியும், கம்பு உருண்டையும் கொடுத்து தாய்க்கும், சேய்க்கும் போஷாக்களித்து பலம் சேர்ப்பது நமது பாரம்பரிய உணவுமுறைக்கு உதாரணம். மொத்தத்தில் இரும்பு சத்து, கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் சத்துக்கள் என சத்துக்களின் கூடாரமாக உள்ளது சிகப்பரிசி வகை.

    சித்த மருத்துவ கூற்றுப்படி சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம். சத்தான உணவு உண்பது தாய்க்கு மட்டுமல்ல கருவுக்கும் வளர்ச்சியை கொடுத்து வருங்கால சந்ததியினை ஆரோக்கியமாக உருவாக்க வழிவகை செய்யும். உண்மையில் நம் பாரம்பரிய உணவு முறைகள் நம் நாட்டு மருத்துவத்தின் ஒரு அத்தியாயம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால் குமட்டல் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.
    • சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

    தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 பழங்கள் குறித்து பார்ப்போம்.

    1. வாழைப்பழம்: இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் இந்த பிரச்சினைகள் தலைதூக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் அதனை சாப்பிடுவது நல்லது.

    2. சிட்ரஸ் பழங்கள்: இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்ப பெற்றிருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி நல்லது. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் செரிமானத்தை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்கவும் உதவும்.

    3. அவகேடோ: இந்த பழத்தில் அதிக போலேட் உள்ளது. வைட்டமின் சி, பி, கே, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படும். மேலும் அவகேடோ பழத்தில் உள்ள பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் தசை பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். பொதுவாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு காரணமாக காலில் பிடிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவை பூர்த்தி செய்து விடலாம். குமட்டல் பிரச்சினையையும் கட்டுப்படுத்தி விடலாம்.

    4. ஆப்பிள்: நார்ச்சத்துள்ள இந்த பழம் அதிக அளவு வைட்டமின் சியையும் கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பெக்டின் ஆகியவையும் உள்ளன. பெக்டின் என்பது ஆப்பிளில் காணப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆப்பிளில் இருக்கும் அதிக சத்துக்களை பெறுவதற்கு அதனை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது. இருப்பினும் தோல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.

    5. தர்பூசணி: தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் தாதுக்களும், நார்ச்சத்துகளும் உள்ளன. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. தசைப்பிடிப்புகளையும் போக்க உதவும்.

    பிளாக்பெர்ரி, கிவி, மாம்பழம், கொய்யா, பேரிக்காய், மாதுளை, திராட்சை, செர்ரி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

    • கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 காய்கறிகள்குறித்து பார்ப்போம்.

    கர்ப்ப காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகள்

    1. பச்சை இலை காய்கறிகள்: முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.

    2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் அதில் இருக்கிறது.

    3. வெள்ளரி: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான மலச்சிக்கல் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

    4. தக்காளி: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. தக்காளியை அளவோடு பயன்படுத்துவதன் மூலம் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

    5. கத்திரிக்காய்: கத்தரிக்காயும் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது, ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    • கர்ப்பிணிகள் தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்ணுக்கு தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும்,

    எந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றியெல்லாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தனக்கும், தன் உடலில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச் சத்துக்கள் என்ன, எவ்வளவு கலோரிகள் அளவு இந்த ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும், அவை எந்த உணவுகளில் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    * Green leaves – கீரை வகைகள்

    * Green vegetables – பச்சைக் காய்கறிகள்

    * Grains – முழு தானியங்கள்

    * முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

    * அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. அவை சினிமாவிலும் டிவி மொகா தொடர்களிலும்தான் அபார்ஷனை ஏற்படுத்தும்.

    * தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்சியம் சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

    * கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.

    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை.

    நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி. இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப்படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும்.
    கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப் படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும். நாளடைவில் நிரந்தர நீரிழிவும் உண்டாகலாம். கருச்சிதைவும் நேரலாம். அது மட்டுமல்ல... குழந்தைகளுக்கும் பிரச்னைதான். அளவு மீறிய எடையோடு பிறப்பு, குறைப் பிரசவம், சுவாசப் பிரச்னைகள் உண்டாகக் கூடும். சில குழந்தைகளுக்கு தாழ்நிலை சர்க்கரை அல்லது டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

    * இந்திய வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.

    * சர்வதேச வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.

    எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.

    சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.

    எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.

    கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.

    பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
    சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும்.
    குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.

    கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

    முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.

    28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.

    சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.

    சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

    32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.
    கர்ப்ப காலத்தில் ஏறிய உடல்எடை பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? எது நார்மல்? எது அசாதாரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.

    கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.

    உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
    அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
    கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடாமல் இருப்பதற்காக கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.

    அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.

    மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.
    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
    முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.

    ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.

    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

    கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்சனை கொண்ட கால்வீக்கம், பிரச்சனை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்சனை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.

    ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்சனை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.

    கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.

    இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.

    இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.



    சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்சனை இல்லாத வீக்கம்’ என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.

    கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.

    இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.

    கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

    ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.

    இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

    சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு. இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...

    இதயத்தில் பிரச்சனை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.

    ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கு...

    சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.



    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும்  இதம் தரும்.
    ×