search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri"

    • மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
    • 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    நாங்குநேரி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • சின்னத்துரை, சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை தே.மு.தி.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
    • மாணவன், அவரது சகோதரி குறித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

    அப்போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செல்போன் மூலமாக, சிகிச்சை பெற்று வரும் மாணவரின் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவன், அவரது சகோதரி குறித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சை பகுதி செயலாளர் ராஜ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் கணேசன், மாசானம், மகேந்திரன், ராஜா, பாலாஜி உட்பட பலர் உடன் சென்றனர்.

    • படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பெருந்தெருவைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கையையும் பள்ளியில் நடந்த பிரச்சனையால் கடந்த 9-ந்தேதியன்று சக மாணவர்களால் தாக்கியும், மிகக் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் உள்ளார்கள்.

    உடன் படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தங்கையும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார்.
    • பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள்

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன. பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன.

    பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிக்கிறது. மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.

    பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதி வெறிக்கு இடமளிக்கப்படக் கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டு மொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.

    நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர்.
    • பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

    நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்குதல் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    சென்னை:

    நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமூக நீதிக்கான அரசு இது. பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நாளைய தமிழ்ச் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்... என பதிவிட்டுள்ளார்.

    • படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

    சென்னை:

    நாங்குநேரியில் சாதிரீதியான விரோதம் காரணமாக பிளஸ்2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

    இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

    அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றபோது, அங்கு புகுந்த மர்மநபர்கள் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதனைப்பார்த்த அவர்களுடைய சின்ன தாத்தா கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னத்துரை தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் நேற்று பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.
    • தாக்குதல் தொடர்பாக டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் அங்குள்ள கல்மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராமையா மகன் குபேந்திரா, அவரது சகோதரர் வானுமாமலை, உறவினர் ஆனந்த் உள்பட 4 பேர், சரவணனிடம் இங்கு எப்படி படுக்கலாம் எனக் கேட்டு தகராறு செய்தனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திரா உள்பட 4 பேரும் சேர்ந்து, சரவணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குபேந்திரா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது.
    • நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வானுமாமலை வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை அரிவாளால் வெட்டினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் வானுமாமலை (வயது 62). விவசாயி. கடந்த 27-ந் தேதி இவரது குடும்ப கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக வானுமாமலையின் தம்பி ராமையா மகன் சுடலை, சின்னத்துரை மகன் செல்வம் ஆகியோர் பூசாரியை அழைப்பதற்காக அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்ற கபாலி கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றனர்.

    அப்போது தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வானுமா மலைக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வானுமாமலை நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை தாக்கி, அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்ணனை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின்.
    • தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார்

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின் (வயது51). இவரது சகோதரர் எவரெஸ்ட் அதே ஊரைச் சேர்ந்த ராபின் என்பவரது தாயாரிடம் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் ராபினுக்கும், எவரெஸ்டுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மரியஜெபஸ்டின் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் ராபின் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஜெனிட்டா மேரியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார். தொடர்ந்த கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபினை தேடி வருகின்றனர்.

    • கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அமைப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.
    • குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சேர்மன் இசக்கி பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய எட்வின், ஸ்டீபன் ஜோசப் ராஜா, சங்கரலிங்கம், மீனா சுப்பையா, செந்தூர் பாண்டியன், முத்துலட்சுமி, லட்சுமி, கிறிஸ்டி, முருகேசன், ஜெபக்கனி செந்தில்ராஜ், செல்வ பிரேமா, செல்வி இலக்கண், அகஸ்டின் கீதாராஜ், பிரேமா எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம், தளபதி சமுத்திரம், சங்கனாங்குளம், இறைப்புவாரி, ராஜாக்கள்மங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அமை ப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் வாங்குவதற்கும், மழைக்கால வேலையாக தேவைப்படும் குளங்களில் புதியமடை, மறுகால் கட்டுவது, மதகுகளை சீரமைப்பது, தண்ணீர் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்துவது என்றும், 27 ஊராட்சிகளிலும் குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர்கள் சபரிகாந்த், பாக்யராஜ், மீனாட்சி, ஒன்றிய மேலாளர் மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×