என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Ponmudi"
- பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
- உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும். இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர் கல்வி நிறுவனங்களிடையே இடமாறுதல் கோரும் வகையில் மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை.கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.
சென்னை:
உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளநிலை பட்டப்படிகளில் 5 பாடப்பிரிவுகள் இடம்பெறும்.
இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.
இதன்படி, முக்கிய பாடங்களையும் விருப்ப பாடங்களையும், செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். பல்கலைகளும், தன்னாட்சி கல்லூரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு.
தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராகும் விதமாக, திறன் மேம்பாட்டு அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பாடத்திட்டம் தொடர்பாக ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில், ஏதேனும் நடைமுறை சிக்கல் இருந்தால், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் கவர்னர் ஆர். என். ரவி.
- உயர்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கவர்னர் பேச வேண்டும்.
சென்னை:
தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும். பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் கவர்னர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார்.
தவறுகளை முறையாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது.
செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என கவர்னர் தெரிவிக்கிறார். ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார். வேண்டப்பட்டவர்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்று குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் கவர்னர் ஆர். என். ரவி. அரசியல் செய்யும் சிந்தனையுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
உயர்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கவர்னர் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார்.
- போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கடந்த 2003-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர்.
பிறகு பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தினார்கள். இதையடுத்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு 6.9.2017 அன்று ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட சான்றா வணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜெயவேல் தீர்ப்பை வழங்கினார். போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஜெயவேல் தனது தீர்ப்பில், "நிலத்தை அபகரித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே பொன்முடி உள்பட 7 பேரையும் விடுதலை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணை.
- சொத்து வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் வந்தது.
அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.
- பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.
அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.
புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.
அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
- தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
- பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
* மாணவர்கள், தங்களது தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம்
* தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
* பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டின் கீழ் 28,425 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* மாதம் 1000 ரூபாய் பெறும்திட்டம் மூலம் 13,284 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
* ஜூலை 2-ந்தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்றார்.
சென்னை:
அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.
ஒரு அமைச்சர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதனால் மட்டுமே அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க. அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.
துறை மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற அவசியமில்லை. மரபு கருதி கடிதம் அனுப்பப்பட்டது. அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினாலும், அதனை கவர்னர் திருப்பி அனுப்புகிறார்.
அமைச்சர்களின் துறைகளை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என காரணம் கேட்க கவர்னருக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை.
கவர்னர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாகவும், தமிழக அரசின் அதிகாரங்களில் அதிகம் தலையிடுபவராகவும் இருக்கிறார். அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.
- தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
- பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.
தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.
உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
- சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
சென்னை:
அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.
அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.
கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.
கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.
சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.
மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.
திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியை மீண்டும் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் கவர்னர் முறையிட வேண்டும்.
பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல். இதில் கவர்னருக்கும் மாற்று கருத்து இருக்காது.
இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபிறகு முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு தனியாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்வியில் சேர்வதற்கான அட்டவணை தனியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான செய்தித்தாள் விளம்பரம் 30.6.2022 அன்று வெளியிடப்படும். முழு நேரம், பகுதிநேரம் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் பதிவு 1.7.2022 அன்று தொடங்கி 15.7.2022 அன்று முடியும். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் 22.7.2022 அன்று நடைபெறும். கல்வி நிறுவனங்களிடம் இருந்து பி-பாரம் பெறும் இறுதித் தேதி 29.7.2022 ஆகும்.
நேரடியாக பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு கல்வியில் சேர விரும்புவோருக்கு (ஆன்லைன்) செய்தித்தாள் விளம்பரம் 22.6.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் பதிவு 23.6.2022 அன்று தொடங்கி 8.7.2022 அன்று முடியும்.
பொதுவாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்பு குறைவாக இருந்தது. இப்போது சற்று சீர்பெற்றுள்ளது. இந்த கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.
எந்திரவியல் (கணினி மூலம் வடிவமைத்தல், ஆட்டோமொபைல் (சாண்ட்விச்), அலுவலக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடு, இதயத்துடிப்பு பதிவு தொழில்நுட்பம், இணையவலை வடிவமைப்பு, தளவாட தொழில்நுட்பம், உயிர்மருத்துவ மின்னணுவியல், அக வனப்பியல், ஆடை வடிவமைப்பியல், வேளாண்மை பொறியியல் ஆகிய 10 புதிய பாடத்திட்டங்களை சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி, மாநில வணிகவியல் பயிலகம், டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக், புத்தூர் சீனிவாசா சுப்புராயா பாலிடெக்னிக், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் பாலிடெக்னிக் மற்றும் கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர், அரியலூர், தூத்துக்குடி, ஊத்தங்கரை என மொத்தம் 13 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கவிருக்கிறோம்.
இந்தப் பாடத்திட்டத்தில் 30 முதல் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர்கள் விரும்பும் வகையிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இந்த பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. இவை மற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் குறித்து கல்வியாளர்களை கலந்தாலோசிக்க உள்ளோம். என்ஜினீயரிங் கல்வியில் சேர்ந்துவிட்டு, பின்னர் 'நீட்' தேர்வை எழுதி பல மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு சென்று விடுகின்றனர். எனவே 'நீட்' தேர்வுக்குப் பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்துவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பது, கவுன்சிலிங் ஆகியவை ஆன்லைன் மூலம் நடத்தப்படும். அதை உறுதி செய்வதற்கான முடிவை அதற்கான குழு எடுக்கும். அதில் முன்பு நடந்ததுபோல முறைகேடு நடக்காத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் இருந்து விண்ணப்பிக்கும் வசதிகள் செய்து தரப்படும். இது தவிர விண்ணப்பிப்பதற்காக 100 இடங்களையும் ஏற்பாடு செய்து தருவோம். நேரடியாக மாணவர்களும், பெற்றோரும் வருவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுபற்றி கேட்டாலும் பரிசீலிக்கலாம். ஆனால் இதுவரை வந்துள்ள கோரிக்கை ஆன்லைன் என்பதுதான்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான தேதியை தமிழக கவர்னர் கொடுப்பார். அதன் பிறகு ஏற்பாடுகள் செய்யப்படும். திறந்தவெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 30-ந் தேதி நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்