search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayalpattinam"

    • காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்
    • வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 62). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    நேற்று அவரது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
    • நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை லெப்ட் இன் கர்னல் சுனில் உத்தம் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.

    இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செயது அகமது தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செயது முகைதீன் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் முகமது காமில் செய்திருந்தார்.

    • உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22).
    • கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22). மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    நேற்று அதிகாலையில் ஜெனோஸ்டன் தனது சகோதரரான எனோஸ்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிராஸ்வின், ரெவஞ்சி ஆகிய 4 பேரும் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர்.

    படகு மோதியது

    பின்னர் மதியம் சிங்கித்துறை கடற்கரைக்கு திரும்பினர். படகை கடலிலிருந்து தரை பகுதிக்கு இழுக்கும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது. இதனால் நெஞ்சில் பலத்த அடிபட்ட நிலையில் வலி தாங்காமல் அவர் அலறி உள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனோஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இந்த விபத்து குறித்து ஜெனோஸ்ட்டனின் தாய் லதா (42) அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் கடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் முகமது லெப்பை, செயற்குழு உறுப்பினர் லெப்பை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செய்யது அகமது வரவேற்று பேசினார்.

    விழாவில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கு 11 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. இப்பகுதி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

    உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே அரசு விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்து முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிறைவில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் நன்றி கூறினார். விழாவில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, வார்டு கவுன்சிலர்கள் அஜ்வாது, ரங்கநாதன் சுகு, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் காஜா முகைதீன். இவரது மகன் சாதிக் (வயது 25).சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.பக்ரீத் விடுமுறையில் காயல்பட்டினத்திற்கு வந்த இவர் தனது நண்பரான குதுத்தின் என்பவரிடம் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை. அதனை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது பற்றி சாதிக் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் 'எனது குப்பை எனது பொறுப்பு' மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நகராட்சி தலைவர் முத்துமுகமது தலைமை தாங்கினார். ஆணையாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கவேண்டும் என்று நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அப்துல் காதர், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியின் பஸ் நிலைய வளாகத்தில் பெரிய அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1955-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 65 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்த குடிநீர் தொட்டி உறுதி குறையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் தற்போது அது பெரும் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

    அதாவது மேல்நிலைத் தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதனால் மரத்து வேர்களின் வளர்ச்சி காரணமாக குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடையகூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த இப்பகுதியில் பெரும் விபத்து ஏதேனும் நடந்து விடாமல் இருக்க உடனடியாக குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்து நிற்கும் மரங்களை அகற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலரான முகமது அலி காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    • காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா 18 இடங்களில் நடைபெற்றது.
    • அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 18 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஹ்மூத் ஹசன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் அபுசாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செய லாளர்பெத்தப்பா சுல்தான், மாவட்ட நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், காதர் சாகிப் மற்றும் முகைதீன் தம்பி, முகமது அலி, லெப்பையப்பா ரஹமத்துல்லா, காயிதே மில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடி ஏற்றினர்.

    அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சித்திக், அப்துல் கரீம், கடலூர் ஜாபர், முகமது முகைதீன், அப்துல் ரகுமான், உமர் அப்துல் காதர், சுகைல் இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×