search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar"

    • "…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
    • விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.

    பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா, என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்சொன்னார்.

    ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார் ஜீவா.

    "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.

    உடனே ஜீவா, நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

    நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.

    காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க,

    அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப்போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார், காமராஜர்.

    அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.

    கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர்.

    விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

    "…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

    உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணு தாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

    உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

    விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.

    அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

    ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்..

    காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்..

    ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்...? என்றார்.

    கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

    உடனே காமராஜர், ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான்.

    அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...

    ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

    காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

    நோய் வாய்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

    தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...என்பது தான்.

    இனி எங்கே காண முடியும்..? இது போன்ற தலைவர்களை..

    -எச்.கே. சாம்

    • இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
    • காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள்.

    காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்
    • காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாள் பொழுதும் ஒரு பொற்காலமாய் தெரிந்தது தந்தை பெரியாருக்கு... காமராஜர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்பேர்பட்ட நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு காமராஜரே தமிழக முதல்வராக இருந்துகொண்டு ஆண்டால், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்து விடுவார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்... அவருடைய நேர்மையே காரணம்... தன்னலமற்ற சேவை மனப்பான்மையே காரணம்... நிர்வாகத் திறமையை காரணம்... எந்தவிதமான பந்தாக்கள் எதுவுமில்லாத எளிமையே காரணம்...

    இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனிமேல் கிடைப்பாரா? என்ற அளவுக்கு பெரியாரின் சிந்தனை இருந்தது... காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஆனால் காமராஜருடைய சிந்தனை தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க பரந்தும் விரிந்தும் இருந்தது... தமிழகத்திற்கு தம்மால் முடிந்ததை ஓரளவுக்கு செய்திருந்த திருப்தி இருந்தாலும் அகில இந்திய அளவில் நாடு அத்தனை செழிப்பாக இல்லையே.. பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவ்வளவு நிம்மதியாக இல்லையே என்ற கவலை காமராஜர் நெஞ்சிலே நிரம்பி இருந்தது. 1962-ம் ஆண்டு நடைபெற்று முடிந்திருந்த சீன போரிலே இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் நேரு மனமடைந்து போயிருந்தார். மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்கிக்கொண்டிருந்த நேருவின் உடல்நிலையில் அது ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கிற தலைவனது உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். அவர் சார்ந்திருந்த கட்சியின் கட்டுக்கோப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் சீர்தூக்கி பார்த்து சிந்தித்தார் காமராஜர்.

    எனவே நேருவைப் பற்றியும் அவரது உடல் நிலையை சீராக்குவதிலும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதிலும் கவனம் செலுத்தியாக வேண்டியது தனது கடமையாகும் என்று உணர்ந்திருந்தார் காமராஜர்.

    ஐதராபாத்திற்கு வந்திருந்த நேருவை போய் சந்தித்து நாட்டின் நிலை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தார் காமராஜர்... அப்போது உருவானது தான் "கே" பிளான் திட்டம்... அந்த திட்டத்தின்படி மூத்த தலைவர்கள் பலர் தாங்கள் வகிக்கும் முதல்வர் பதவியில் இருந்து விலகி இளைஞர்களை பொறுப்பிலே அமர்த்திவிட்டு கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதே காமராஜரின் திட்டமாகும்... அதுதான் பின்னர் "கே" பிளான் என்று அழைக்கப்பட்டது.

    நேருவும்... இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இது ஒரு நல்ல ஆலோசனை என்றும் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை கலந்து அவர்களுடைய இசைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தார். முதற்கட்டமாக நானே பதவியை விட்டு விலகுகின்றேன் என்று முன்வந்தார் நேரு. ஆனால்... காமராஜர் உட்பட மூத்த தலைவர்கள் யாரும் நேரு பதவி விலகுவதை விரும்பவில்லை.

    இந்தத் திட்டத்தில் நேருவுக்கு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லி பதவி விலக முன்வந்த நேருவை சமாதானப்படுத்தி விட்டனர். ஏனென்றால் நேருவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் உலகளவில் இருந்த மதிப்பும் மரியாதையும் வேறு எவருக்கும் இல்லை. அவரது ஆளுமைக்கு ஈடு சொல்ல எவரும் இல்லை என்ற எண்ணமே தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

    இப்படி இந்த "கே" பிளான் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிக்கையில் வெளிவந்து அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜரும் இந்த "கே" பிளான் மூலம் பதவியை துறப்பார் என்ற செய்திகள் அடிபட தொடங்கியது.

    இதையெல்லாம் ஏடுகளின் மூலமாக அறிந்த தந்தை பெரியார் மிகுந்த கவலைக்குள்ளானார்... தமிழ்நாட்டின் நலன் கருதி இதை எப்படியாவது தடுத்தாக வேண்டுமே... அவரவர் சார்ந்திருக்கும் கட்சியை அவரவர் பலப்படுத்த நினைப்பதில் எந்த தவறும் இல்லை அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால் காமராஜரை போல ஒருவர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பாரா? இதுதான் பெரியாருடைய கேள்வி!

    யோசனையை கூறிவிட்டு நாம் பதவியில் இருப்பது நாகரிகமாகாது என்ற நினைப்பில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவினை காமராஜர் எடுத்து இருப்பார் என்று நினைத்தார் பெரியார். உடல்நலிவு என்று வந்துவிட்டால் நோயாளி தான் மருந்து சாப்பிட வேண்டுமே தவிர டாக்டரே ஏன் சாப்பிட்டு காட்டக்கூடாது என்றெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்று விடுதலை நாளேட்டில் 10.8. 1963-ல் ஒரு தலையங்கத்தையே எழுதினார் பெரியார்.

    மேலும் அந்த தலையங்கத்தில் நெருக்கடியான இந்த நேரத்தில் நீடிக்க வேண்டியது நேருவின் தலைமையே என்று பலர் கருதுவது போல தமிழகத்தை பொறுத்தவரையில் காமராஜரின் தலைமையும் நீடித்தாக வேண்டும் என நினைத்தார் பெரியார்.

    இதை காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணர்ந்திட வேண்டும். ஒரு பிரச்சினையை தீர்க்கப் போய் புதிதாக பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது. கடைசியாக சொல்கிறேன் தமிழ்நாட்டின் நலனையே முதலில் காமராஜர் மனதில் கொள்ள வேண்டும். மூன்றரை கோடி மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதனை கூறுகிறோம். முதலில் நாட்டு நலன். பிறகுதான் கட்சி நலன். ஒளி வீசும் தமிழகம் மீண்டும் இருளுக்கு ஆளாகி விடக்கூடாது அது கேடு மட்டுமல்ல பெருங்கேடு என்று விடுதலையில் எழுதி இருந்தார் பெரியார்.

    இந்த சந்தர்ப்பத்தில் வேறு யாராவது ஆட்சியில் வந்து அமர்ந்தால் அவர்களால் சமாளிக்க முடியாமல் கேரளாவை போல் ஒரு நிலையற்ற ஆட்சி தமிழகத்திலும் ஏற்பட்டுவிடும் .இதனை ஒரு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன் என்றெல்லாம் விடுதலை ஏட்டில் கோடிட்டு காட்டி இருந்தார் பெரியார்.

    மேலும் காமராஜருக்கு ஒரு தந்தியும் கொடுத்தார் பெரியார்...

    Either on your own accord or on the advice of others, your resignation of chiefminister ship will be sucidal to tamilians, Tamilnadu and yourself.

    தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை காரணமாகவோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியில் இருந்து தாங்கள் விலகினால் அது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்... என்பதுதான் பெரியார் கொடுத்திருந்த தந்தியாகும் .

    பெரியாரின் இந்த கணிப்பு பின்னாளில் அப்படியே நடந்தது, பலித்தது. காமராஜரின் இடத்திலே வந்து அமர்ந்து முதல்வராக ஆட்சி செய்த பக்தவச்சலம் அவர்களால் காமராஜரை போல செயல்பட முடியவில்லை. விலைவாசி உயர்வை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நமக்கே அரிசி தேவைப்பட்டிருந்த நேரத்தில் கேரளாவுக்கு அதை அனுப்பி வைத்ததால் இங்கே அரிசி பஞ்சம் ஏற்பட்டு அது ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவானது.

    இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்றதால் ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்றது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று வந்து காமராஜர் இல்லாத தமிழகம் எப்படி இருக்கும் என்று பெரியார் சொன்ன சொற்களை நிரூபித்து காட்டியது.

    இப்படி எல்லாம் நடைபெற்றதற்கு பின்னாலும் காமராஜரை ஆதரிப்பதை பெரியார் கைவிடவில்லை. காந்திஜி சென்னைக்கு வந்த நேரத்தில் காமராஜரை காந்திஜிக்கு அருகிலே செல்லவிடாமல் மாலை கூட போட விடாமல் தடுக்கப்பட்ட காலம் எங்கே... இப்போது காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பீரமாக ஒரு தமிழர் கோலோச்சுகிற காலகட்டம் இங்கே என்றெண்ணி பெருமிதப்பட்டார் தந்தை பெரியார்..

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

     காமராஜர் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஸ்வரம் மாநாட்டிலே அவர் தமிழிலேயே உரையாற்றியதை பெரிதும் வரவேற்று மகிழ்ந்தார். அதுமட்டுமல்ல திராவிட கழக மாநாட்டிலே பேங்குகளை தேசிய மயமாக்க வேண்டும், தொழில்களை தேசிய மயமாக்க வேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளை அரசு எடுத்துக் கொள்வது என்று நாங்கள் போட்ட தீர்மானங்களை எல்லாம் புவனேஸ்வர் மாநாட்டிலே தீர்மானங்களாக கொண்டு வந்ததையும் பாராட்டி மகிழ்ந்தார் பெரியார்.

    இன்று உலகமே வியந்து போற்றுகிற இடத்திலே நமது காமராஜரை அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறார் ஜவஹர்லால் நேரு... இந்த நாட்டில் காமராஜருக்கு விரோதமாக எவனும் செயல்பட்டால் அவன் நாட்டுக்கு துரோகம் செய்கிறான் என்று பொருளாகும். தங்களுடைய சுயநலனுக்காக காமராஜர் காரியம் செய்து உதவவில்லை என்று பணக்காரர்களும் சுயநலவாதிகளும் அவரை ஒழிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்... காமராஜர் திட்டம் வெற்றி பெற்றால் பணக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவரை செல்வ சீமான்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே நமது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று விடுதலை நாளிதழில் 13.2.1964-ந்தேதி எழுதினார் பெரியார்.

    ஜூன் 1963-ல் முதல்-அமைச்சர் பதவியை துறந்து காமராஜர் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே பெரியார் எழுதிய கட்டுரை இது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே காமராஜரின் 63-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. நாமெல்லாம் காமராஜரை முதல்வர் பதவியிலே அமர்த்தி அழகு பார்த்தோம். இப்போது அகில இந்திய காங்கிரசுக்கே தலைவராக ஆகியிருக்கிறார். உலகமே போற்றுகிற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கே ஆலோசனை சொல்லுகிற இடத்திலே காமராஜர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லி நமது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை நகரமே திணறுகிற அளவுக்கு விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றன.

    இதற்கு முன்னாலே நமது தமிழர்கள் அகில இந்திய தலைமை பொறுப்பிலே ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டம் என்பது வேறு. அப்போது மேல் சாதிக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அது கிட்டியது. அதுவே காங்கிரசில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகவும் இருந்தது. ஆனால் ஒரு ஏழை வீட்டிலே பிறந்து தனது கடினமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றி பேரெடுத்த ஒருவரான காமராஜர் இப்பதவிக்கு வந்ததை இந்திய நாடே வரவேற்றது என்பதே உண்மை.

    பெரும்பாலும் வட இந்திய தலைவர்கள் தென்னிந்திய தலைவர்களை அவ்வளவாக வரவேற்பதில்லை. இந்தியாவில் தாங்களே மற்றவர்களை விட மேலோர்கள் என்ற எண்ணம் வட இந்தியத் தலைவர்கள் அடி மனதிலே ஊறியிருந்தது .இப்போதும் அந்த எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. அந்த எண்ணத்தையும் தாண்டி காமராஜரை "காலா காந்தி" என்று அழைத்து வடஇந்திய தலைவர்கள் வரவேற்று பாராட்டி மகிழ்ந்தது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றே சொல்லலாம் .

    தந்தை பெரியாரின் ஒப்புதலோடு காமராஜர் பிறந்தநாளையொட்டி அப்போது விடுதலை நாளேட்டின் ஆசிரியராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாகும்.

    "தமிழகத்தின் பொற்காலத்தை படைத்த தமிழர்களின் இரண்டாம் காவலரான நமது காமராஜர் அவர்களுக்கு இன்று 63-ம் ஆண்டு பிறக்கிறது"

    முல்லைக்கு தேர் கொடுத்தும் மயிலுக்கு போர்வை ஈந்தும் வள்ளலானவர்களுக்கு மத்தியில் கல்வி வள்ளல் என்று பெயர் எடுத்தவர் தான் நமது காமராஜர்... "தனக்கென வாழாப் பிறருக்குறியாளன் " என்ற தலைமைக்கு ஒரு இலக்கணம் வகுத்த, காமராஜர் தனது 50 ஆண்டு கால பொதுவாழ்வில் சேர்த்தது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் புகழ், மங்காத புகழ், மாசில்லா புகழ் ஆகும்.

    பதவிகளை தேடி அவர் சென்றது இல்லை அவரை தேடித்தான் பதவிகள் வந்துள்ளன. அப்பதவிகளால் அவர் பொலிவு பெற்றதில்லை, அவரால் தான் பதவிகள் பொலிவு பெற்றன. தர்மம் என்ற பெயரால் கொடிகட்டி பறந்த சாதிக்கு மரண அடி கொடுத்த மாமேதை அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு கிடந்த நம்மவர்களை மேலே கொண்டு வந்த மேன்மையாளர் தான் காமராஜர்.

    "அனுபவம் அவரது படிப்பு, நேர்மை அவரது நெறி, உழைப்பு அவரது பாதை, சம தர்மம் அவரது லட்சியம் "இதுவே அவரைப் பற்றிய நமது மதிப்பீடு ...

    அவரது சீரிய தலைமை இந்திய துணை கண்டத்திற்கு இன்றைய தேவையாகி இருக்கிறது. "வாழ்க காமராஜர், வருக சமதர்ம சமுதாயம்" என்ற சிறப்பு தலையங்கம் 15.7.1965 அன்று விடுதலையில் வெளிவந்து எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பெரியாரின் ஒப்புதலோடு கட்டுரை வெளிவந்தது என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.

    - முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை.
    • பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

     சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

    பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.க. வினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறது.

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்று இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.

    தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துகிறோம்.

    இக்கூட்டத்தில் டி.எஸ்.எஸ். நாடார் சங்கத்தலைவர் மனோகரன், போரூர் நாடார் சங்கத்தலைவர் ஆனந்தராஜ், முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்கத்தலைவர் தேன்ராஜன், நாடார் பாதுகாப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அயனாவரம் சந்திரமோகன், ஆவடி வட்டார நாடார் சங்கம் ராஜன், கோவில்பதாகை முரளி, கிராமணி முன்னேற்ற சங்கத்தலைவர் பச்சையப்பன், மட்டுமேடு அருணாசல மூர்த்தி, திருவல்லிக்கேணி நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜ், மாதவரம் தங்கக்குமார், இருவொற்றியூர் வீரமணி, விருகம்பாக்கம் மணிராஜ், மாங்காடு துரை, கெருகம பாக்கம் பாலமுருகன், உதய குமார், ஓட்டேரி செல்வராஜ், கோயம்பேடு முத்து, பாண்டியநாட்டு நாடார் பேரவை கொளத்தூர் சுவைராஜா, கொளத்தூர் ஜேம்ஸ் நாடார், கோயம்பேடு வைகுண்டராஜா, வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், பாதாவரம் நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்நிகழ்விற்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார்.
    • ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கீழவாசலில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு பரிசு த்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் ராதிகாமைக்கேல் சிறப்புரை யாற்றினார்.

    இந்த ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் ஹேனாஜெர்லின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற கவுரவ தலைவர் பரந்தாமன், செயலாளர் சோலையப்பன், பொருளாளர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் பாண்டித்துரை, பழனிச்சாமி, துணை தலைவர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    விருதுநகர்

    பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ்.

    விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு.
    • அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    அது காமராஜர் ஆட்சி காலம். அப்போதுதான் அந்த பிரச்சனை எழுந்தது. அதிகாரிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, அதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க காமராஜர் அனுமதி கொடுத்ததுதான்..!

    திண்டுக்கல்லை விட்டு வெகு தொலைவில், தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள் ஒரு நிர்வாகத்தினர்.

    ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி தொழிற்சாலைகளை தொடங்க, ஏராளம் பேர் அனுமதி கேட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.

    பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இதுவும் ஒன்றாக பரிசீலனையில் அதை வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

    இந்த விஷயம் காமராஜரின் காதுகளுக்குப் போனது. அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார் காமராஜர்.

    'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

    காமராஜரின் இந்த உத்தரவை கேட்டவுடன் அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

    'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?' அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. உடனடியாக அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

    "என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்!" என்றார்.

    அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

    "அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து கேட்டார் காமராஜர்.

    "திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த தொழிற்சாலைக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?"

    அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காமராஜரே பதில் சொன்னார்:

    "அறுபது கிராமங்கள்.

    அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. காரணம் அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

    அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, அவர்களுக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை நான் போட்டு இருக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?"

    அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

    காமராஜர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்து விட்டார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

    இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இப்ப சொல்லுங்க. திண்டுக்கல் நகரத்தில் இருந்து, அவர்களது தொழிற்சாலை வரை, அந்த தொழிற்சாலைக்காரர்கள், அவர்களது சொந்த செலவிலேயே மின் கம்பங்களை அமைத்து விடுவார்கள். அதற்குப் பின் நமது வேலை சுலபம்.

    மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த இடைப்பட்ட 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அந்த மின்கம்பங்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும். அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா ?"

    ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

    எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

    எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை !

    அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.

    அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

    இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..!

    அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

    என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

    பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் காமராஜர். வெகுநேர மௌனத்துக்குப் பிறகு காமராஜர் சொன்ன வார்த்தைகள்:-

    "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

    இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

    தொடர்ந்து காமராஜர் சொன்னார். "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

    ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

    காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

    அவர் இப்படி சொல்லிய பிறகு, ஏற்கனவே காமராஜரை பாராட்டி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், இன்னும் அதிகமாக அவரை பாராட்டி எழுத ஆரம்பித்தார்கள்.

    இன்றும் கூட பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம் !

    - ஜான்துரை ஆசிர்செல்லையா

    • இன்று காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அவரது சிலைக்கு கலெக்டர்மா, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகர்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த விருதுநகரில் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அங்குள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

    பிறந்தநாளையொட்டி நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்புவேள்வி நடந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகிே்யார் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நினைவு இல்லத்தில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்கள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமணிந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    விருதுநகர் நகராட்சியில் நகரசபை தலைவர் மாதவன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
    • சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்தில் காமராஜரின் பங்களிப்பு மறக்க முடியாதது. அவர் கனிவும், அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். ஏழ்மையை ஒழிக்கவும், பொதுமக்களின் துயரை போக்கவும் அவர் கடினமாக உழைத்தார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

    காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் .

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடிட குடும்பமாக திரளுவோம் என்று சிலுவை கூறி உள்ளார்.
    • தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஐ. சிலுவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ ரின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலர செய்ய அடித்தளமாகவும், காமராஜரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு விளக்கிடவும் த.மா.கா. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை பழங்கா நத்தத்தில் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்கிறார்கள்.

    தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மதுரை மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை புரிந்து பெருந்தலைவர் காமராஜர் புகழ் பாடிட ஒன்று சேர வேண்டும்.

    தமிழகத்தில் நல்ல மாற்றத்திற்கான அரசியலை விதைத்து வரும் மக்கள் தலைவர் ஜி.கே.வாசனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மதுரை பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக நடத்தி காட்டுவோம், அனைவரும் வாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயலாளர் குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    இதை போல் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பெரம்பலூர் தனியார் தொடக்கப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். துறைமங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் சிறப்பு பள்ளியிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவியும், இரு கரங்களையும் கூப்பியும் மரியாதை செலுத்தினர்.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்-அப் களில் நிறைய பேர் காமராஜர் படத்தினை பகிர்ந்தனர். நிறைய பேர் வாட்ஸ்-அப்களில் ஸ்டேட்டஸ்களில் காமராஜர் படங்களையும், அவரை பற்றின வீடியோ காட்சிகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூரில் உள்ள நிறைய தனியார் பள்ளிகளில் நேற்று முன்தினமே காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 
    தனது 15 வயதில் தீரர் சத்திய மூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்ட கர்மவீரர் காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் உண்மை அவருக்கு சிஷியனாக வாழ்ந்தே மறைந்தார். #HBDKamarajar

    மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். 

    சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார். 

    1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். 

    இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார். 

    தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

    தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை. 

    காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார். 

    காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தீரரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வருவார். காமராஜர் அவர்களிடம் ‘என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்' என்று கூறுவார். 

    ஒரு நாள் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் தீரரின் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தார். அவர் தீரரின் மனைவி பாலசுந்தரத்திடம் விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். தீரரின் மனைவி இவ்விஷயத்தை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார்.   

    உடனே காமராஜர், முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்' என்று தீரரின் மனைவியிடம் கூறினார். இதை கேட்ட அவர் மவுனம் ஆகிவிட்டார். 

    இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் தீரரின் மனைவியிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்' என்று கூறினார். 

    இம்முறையும் காமராஜர் தீரர் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தீரரின் மனைவி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார். 

    காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. தீரரின் குடும்பத்தை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். அவர்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை தீரரின் குடும்பத்தினர் காமராசரின் திருமண விழாவாக நினைத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் காமராஜர் தீரர் குடும்பத்தாரின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்.

    முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜரும், தீரரின் குடும்பத்தாரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் தீரரின் பேரன்களான கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார். 

    திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது தீரரின் குடும்பத்தாருக்கு ஆச்சரியம் அளித்தது. 

    தீரர் மீது காமராஜர் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு தன்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால் தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.

    மாநகராட்சி வளாகத்தில் தீரரின் திரு உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் இந்திராவை தீரரின் வீட்டுக்கு அழைத்து வந்து தீரரின் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார். தீரரை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார். 
    ×