search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadhambam"

    • நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
    • துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.

    துபாயை இன்றைய நிலைக்கு கொண்டு வந்த ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிடம் துபாயின் எதிர்காலம் குறித்து கேட்டபோது அவர் கூறிய வார்த்தைகள்...

    "எனது அப்பாவும், அப்பாவின் அப்பாவும் ஒட்டகங்களில் பயணம் செய்தவர்கள்.

    இன்று நான் பென்ஸிலும், எனது மகன்கள் மற்றும் பேரன்கள் லேண்ட் ரோவரிலும் பயணம் செய்கிறோம்.

    ஆனால் என் பேரன்களின் குழந்தைகள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

    ஏன் என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதிலளித்தார்...

    நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.. அந்த அறிவே என்னை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது...

    ஆனால் என் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அந்த கஷ்டங்களை பார்த்ததில்லை..

    துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.. அது எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனை அவனுக்கு ஏற்படுத்துகிறது.

    ஆனால் என் பேரக்குழந்தைகள் போன்ற இன்பத்தை மட்டும் அனுபவிப்பவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது கடினம். அவர்கள் விரைவில் சோர்வடைவார்கள்.

    துன்பம் வரும்போது இன்ப உலகில் வாழ்ந்தவன் பலவீனமடைகிறான். என் பேரப்பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அவர்கள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்…"

    என்ன அழகான பதில்...

    • மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும்.
    • கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    நீராகாரம், பழைய சோறு பற்றி நிறைய தகவல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மலச்சிக்கலை நீக்கும் தன்மை நீராகாரத்துக்கு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவில் சோற்றில் நீர் ஊற்றும்போதே பச்சை மிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் வெட்டிப்போட்டு விட வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் ஆகாரமாக என்று சொல்வதைவிட நீர் அருந்துவதற்குப்பதில் நீராகாரத்தை அருந்திப் பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த தகவல் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், வழக்கமாக நாம் காலை உணவாக பழைய சோறு சாப்பிடும்போது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்வோம். ஆனால், முந்தினநாள் இரவே வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து காலையில் எழுந்ததும் குடித்தால் அதன் பிரதிபலிப்பே வேறு.

    `கடுக்காய் சாப்பிடுறேன், திரிபலா சாப்பிடுறேன், பழம் சாப்பிடுறேன், நிறைய தண்ணி குடிக்கிறேன்... ஆனாலும் சரியா மலம் போகல...'ன்னு சொன்ன ஒருவரிடம் இந்த வழிமுறையை பின்பற்றச் சொன்னேன். இதை முயற்சித்த முதல்நாளே பலன் கிடைத்ததாக சொன்னார். எத்தனையோ பேர் மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித பக்கவிளைவும் இல்லாத இந்த வழிமுறையை பின்பற்றலாமே? மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும். கோடை தொடங்கிவிட்டதால் தாராளமாக முயற்சிக்கலாம்.

    கோடை தொடங்கிவிட்டதால் சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, போண்டா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடவே காரம் அதிகமான உணவுகளையும், சிக்கன், நண்டு போன்ற சூட்டினை கிளப்பும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டவருக்கு மூலம் வெளிப்பட்டதாகச் சொல்லி ஆதங்கப்பட்டது தனிக்கதை. கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    - எம்.மரிய பெல்சின்

    • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.
    • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.

    'சோ' சொல்கிறார்...

    ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் நானும் பங்கேற்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அந்த ஷாட்டில் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் நீளமான வசனம். எனக்கு ஒரே ஒரு வார்த்தை - 'சரி' என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.

    ஷாட் முடிந்தது. டைரக்டர் நீலகண்டன் 'இன்னொரு டேக்' என்று சொல்லிவிட்டு என்னிடம் "நீங்க உங்க வசனத்தை எப்படி சொன்னீங்க?" என்று கேட்டார்.

    நான், "சரி என்று சொன்னேன் சார்" என்றேன்.

    "அப்படிச் சொல்லாதீங்க. அந்த 'சரி' கரெக்டா வரணும். அதுக்காகத்தான் இன்னொரு டேக், 'ச...ரி' என்று கொஞ்சம் இழுத்துச் சொல்லுங்க" என்றார் நீலகண்டன்.

    இன்னொரு டேக் முடிந்தது. டைரக்டருக்குத் திருப்தி இல்லை. மூன்றாவது டேக்கிற்கு உத்திரவிட்ட டைரக்டர், "சோ! அந்த டயலாக்கை நீங்க இன்னும் சரியாச் சொல்லணும்" என்றார்.

    "சரியை இதுக்கு மேலே எப்படி ஸார் சரியாச் சொல்றது? என்று கேட்ட நான், எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்னேன்,

    " ஸார்! என் டயலாக் 'சரி'.அதை இதுக்கு மலே சரியா சொல்லமுடியாது. டைரக்டர் அதுக்காக ரீடேக் எடுக்கலை. உங்க டயலாக்கை நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார். அதை உங்ககிட்ட சொல்ல மனமில்லாம, என்னை தப்பு சொல்றார். இந்த ரீடேக்கெல்லாம் உங்களுக்காகத்தான். எனக்காக இல்லை!

    உங்க டயலாக்கை நீங்க சரியா சொல்ற வரைக்கும் என் 'சரி' டயலாக் சரியில்லைன்னு சொல்லி, டேக் மேலே டேக் போகப்போகுது" என்றேன்.

    எம்.ஜி.ஆர் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். நீலகண்டன் நெளிய, எம்.ஜி.ஆரின் வசனம் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டு ஷாட் ஒழுங்காக முடிந்தது.

    பிறகு நீலகண்டன் என்னிடம், "எதையுமே இப்படிப் போட்டு உடைச்சுடறதா? சிலதைக் கண்டுக்காம விடறது நல்லதில்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர, கோபப்படவில்லை. எம்.ஜி.ஆரும் அந்த நிலைமையை மிகவும் ரசித்தாரே தவிர, தவறாக நினைக்கவேயில்லை!

    -பரதன் வெங்கட்

    • மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன.
    • சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

    போட்ஸ்வானா.. சிங்கங்கள் மிகுதியாக உள்ள நாடு. 3000 சிங்கங்கள் உள்ளன. மாடுகள் வளர்ப்பும் மிகுதியாக உள்ள நாடு.

    அரிய மிருகமான சிங்கத்தை கொல்ல சட்டபூர்வமான தடை உள்ளது.

    ஆனால் மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன. வேலி போட்டு எல்லாம் கட்டுபடி ஆகாத ஏழைகள் ஏராளமாக உள்ள நாடு.

    மாடுகளை புல்வெளிகளில் தான் மேய்த்தாக வேண்டும்...என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.

    அதன்பின் அங்கே ஒரு மாடு மேய்ப்பவர் ஒரு எளிய விசயத்தை கண்டுபிடித்தார்.

    ஒரு சிங்கம் அவரை தாக்க வந்தபோது சும்மா அதை நேருக்கு நேர் பார்க்கையில் அது பார்வையை தாழ்த்திக்கொண்டு ஓடிவிட்டது.

    சிங்கம் கொன்ற மாடுகள் எல்லாமே பின்னால் பதுங்கி இருந்து தாக்கபட்டவையே

    சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

    அதன்பின் மாடுகளின் முதுகில் இருபுறமும் இரு கண்களை பெயிண்டால் வரைந்தார்கள்.

    நிஜ கண் மாதிரியே இருந்தன அக்கண்கள்.

    அதன்பின் சிங்கங்கள் மாடுகளை தாக்குவது சுத்தமாக நின்றுவிட்டது.

    இப்ப போட்ஸ்வானாவில் எல்லா மாடுகளுக்கும் முதுகில் கண்கள் வரையபட்டுள்ளன.

    - நியாண்டர் செல்வன்

    • நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
    • ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.

    வண்ண மருத்துவம் என்பது வண்ண நீர் பருகுதல், ஜெம்கற்கள், சூரியஒளி மூலமாகவும் மற்றும் மின்சார பல்புகள், வண்ண பில்டர் பேபர்கள் மூலமாகவும் உடம்பில் வண்ண ஒளிக்கற்றைகளை பரவச் செய்யும் பல வழி முறைகளைக் கொண்டது. மேலும் வண்ண உடைகள், வீடுகளில் செய்யும் வண்ண அலங்கார பூச்சுக்களின் மூலமாகவும் நமக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    நவரத்தினங்கள் ஒவ்வொன்றும் வண்ணங்களின் சுரங்கமாக விளங்குகிறது. இதன் ஒளிக்கதிர் வீச்சுக்கள் எப்போதும் வண்ணக் கதிர்களை வெளியேற்றிக் கொண்டுடிருக்கின்றன.

    மாணிக்கம்– சிவப்பு வண்ணம்

    முத்து- ஆரஞ்சு வண்ணம்

    மரகதம்- பச்சை வண்ணம்

    பவளம்- மஞ்சள் வண்ணம்

    கனகபுஷ்பராகம்- நீல வண்ணம்

    வைரம்- இண்டிகோ வண்ணம்

    நீலம்- வயலட் வண்ணம்

    கோமேதகம்- அல்ட்ரா வயலட் வண்ணம்

    வைடூரியம்- இன் ப்ராரெட் வண்ணம்

    அதைப் போல நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.

    ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.

    சூரியன்- சிவப்பு- மாணிக்கம்

    சந்தரன்- ஆரஞ்சு- முத்து

    செவ்வாய்- மஞ்சள்- பவளம்

    புதன்- பச்சை-  மரகதம்

    குரு- நீலம்- புஷ்பராகம்

    சுக்கிரன்- இண்டிகோ- வைரம்

    சனி- வயலட்- நீலம்

    ராகு- அல்ட்ரா வயலட் - கோமேதகம்

    கேது- இன்ப்ரா ரெட்- வைடூரியம்

    உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும், சூட்சும வண்ணங்கள், அதன் கதிர் வீச்சுக்கள் அவைகளுக்கு ஏற்ற உருவத்துடன் இருக்கின்றன.

    ஒவ்வொருவருக்கும் உற்பத்தி ஆகும் எண்ணமும் அதற்குரிய தொனி- வண்ணம் உருவம் இணைந்து தான் செயல்படுகிறது. இது தான் இயற்கையின் நியதி.

    மனிதனது நல்லது- கெட்டது போன்ற எண்ணங்களினால் அவனது சூட்சும சரீரத்தில் வண்ணங்களின் தன்மைகள் மாறுபட்டு விடுகின்றன. ஆகவே எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் சரீரத்தில் தொடர்பு இருக்கின்றது.

    உடல் நிலை கோளாறுகளுக்கு சூட்சும நிற பரிகாரங்கள். உடல் கோளாறுகளுக்கு ஏற்ப உடைகள் மற்றும் போர்வையை பயன் படுத்தவும்.

    சிகப்பு: இருமல், ஜலதோஷம், மஞ்சள்காமாலை, தோலில் வெண் புள்ளி.

    ஆரஞ்சு: கல்லீரல், கிட்னி, மூட்டு வலி, தன்னம்பிக்கை இல்லாமை..

    மஞ்சள்: மலம் சார்ந்த பிரச்னை, மற்றும்வயிறு சார்ந்த பிரச்சனைகள்..

    பச்சை: நெஞ்சு (மார்பு), கண். இரத்தநோய்கள், மற்றும் புற்று நோய்கள்..

    நீலம்: ஆஸ்துமா, மூச்சு சம்பந்த நோய்கள், பல், மூக்கு, காது, மற்றும் நுரையீரல் நோய்கள்.

    வெளிர் நீலம்: வாய், தொண்டை, மற்றும் உயர்இரத்த அழுத்தம், அதிக வியர்வைக்கு.

    ஊதா: இள நரை, முடி உதிர்தல் போன்றவற்றுக்கு

    -சிவசங்கர்

    • வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டும் உண்டு.
    • வாழ்க்கை என்றால் அதில் மரணமும் அடங்கி இருக்கிறது.

    ஒரு காலக் கட்டத்தில் எப்படி வாழ்ந்தோம்.. இப்பொழுது இப்படி துன்பப்படுறோமே..?

    ஏன், எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது.. என்று பலர் சொல்வதைக் கேட்டு இருப்போம்.

    ஏன் நாமே பல நேரத்தில் நமக்கு நாமே எண்ணி இருப்போம்..

    பெரிய செல்வந்தராக இருந்தவர் இன்று கடனில் இருக்கலாம்..

    இவ்வாறு திடீரென்று வாழ்க்கையானது மாறி நம்மை நிம்மதி இல்லாமல் செய்து இருக்கலாம்..

    வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டும் உண்டு.

    நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

    ஏற்றமும். இறக்கமும்

    எழுச்சியும், வீழ்ச்சியும்

    உலகத்தின் இயல்பு..

    அப்படி இல்லை என்று கருதுவது மரணமே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது.

    மரணம் இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருள் அற்றது. வாழ்க்கை என்றால் அதில் மரணமும் அடங்கி இருக்கிறது.

    அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது..

    பரமபதம் என்ற விளையாட்டு வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது என்பதை நமக்கு உணர்த்திய ஒரு அற்புதமான விளையாட்டாகும்.

    இன்பமும், துன்பமும்,

    இலாபமும், நட்டமும்,

    வெற்றியும், தோல்வியும்,

    ஏற்றமும், இறக்கமும்

    இயற்கை விதிகள்..

    வெற்றி, இலாபம், ஏற்றம், இன்பம் இவற்றை மட்டுமே மனிதன் எதிர்பார்த்துக் கிடைக்காமல் போனால் ஏமாற்றம் அடைகிறான்..

    வாழ்க்கையில் துன்பம், தோல்வி, நட்டம், இறக்கம் வந்தால் இவற்றை வாழ்வின் நியதி என்று நினைத்துத் துணிவுடன் மனம் தளராமல் எதிர்கொண்டால் வெற்றி அடையலாம்..

    நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான நிகழ்வுகளை பழகக் கற்றுக் கொள்ளுங்கள்.

    ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு.

    ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது.

    -மனோகர் ராஜ்

    • பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

    பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும்.!ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.!

    இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.! அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.!

    உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை சில சமயங்களில் இருக்கும்.. கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது, 'என் பைக் சாவி எங்க.? சாக்ஸ் பாத்தியா.? ஷூவப் பாத்தியா.?'என்று மனைவியைப் போட்டு வதைப்பதும்..

    மனைவியும் "இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க.? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்" என திட்டிக் கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.! இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.!

    பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள்.! காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் மிக துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான்.

    ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

    ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது, பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்! சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்!

    இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.! மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்.! கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான இந்த வித்தியாசங்களை எல்லோரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.!

    -ஸ்ரீராம் கோவிந்த்

    • பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்.
    • உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம்.

    மனிதனின் வாழ்க்கைத் தேடலில் முக்கியமானது "உணவு".

    பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்

    அடுத்த வேளை பசிக்கு உணவை சேமிப்பதும்

    இந்த உணவுக்குத் தேவையான உழைப்பு மற்றும் பொருள் ஈட்டல்..

    இவையே முக்கியமான முதல் விசயங்கள்.

    பசி உணர்வைத் தூண்டும் க்ரெலின் எனும் ஹார்மோன் நமது ஜீரண மண்டலத்தில் சுரக்கப்பட்டு நாம் உணவு சாப்பிடத் துவங்குகிறோம்..

    வயிறு நிரம்பியதும் லெப்டின் எனும் ஹார்மோன் சுரந்து நாம் திருப்தியை அடைகிறோம். உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம். இந்த சுழற்சி தொடர்ந்து மாறி மாறி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒருவர் ஏன் குண்டாகிறார்?

    ஏன் அவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது?

    தனது தேவைக்கு அதிகமாக கார்போஹைட்ரேடஸ் எனும் மாவுச்சத்து உணவுகளை உண்பதால் இன்சுலின் எனும் ஹார்மோன் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இதனால் "ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு" போல ரத்தத்தில் தேவைக்கும் மிகுதியான இன்சுலின் பிரவாகமெடுத்து ஓடுகிறது.

    இதனால் இன்சுலின் எதிர்ப்புநிலை (இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) உருவாகிறது.

    இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உணவு சாப்பிட்டபின் வேலை செய்ய வேண்டிய லெப்டின் அனுப்பும் திருப்திக்கான சமிக்ஞைகள் சரியாக மூளையைச் சென்று அடையாது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி ஏற்படாமல் போகும்.

    தொடர்ந்து க்ரெலின் ஆதிக்கம் செலுத்தும். அதை மட்டுப்படுத்தும் லெப்டின் சரியாக வேலை செய்யாது.

    எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் இன்னும் மேலதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் அதிகமாக உடல் எடை கூடுவார்கள். இதுவும் ஒரு சங்கிலி சுழற்ச்சியாகத் தொடர்ந்து 80 கிலோ இருந்த நபரை 120-140 கிலோவாக்கி விடும்.

    சரி.. இந்த சுழற்சியில் இருந்து ஒருவர் எவ்வாறு விடுபடுவது?

    இதற்கு நாம் உணவுகள் மற்றும் அவற்றில் உள்ள சத்துகள் எவ்வாறு நமக்கு திருப்தியை வழங்குகின்றன என்று புரிந்து கொள்வது நல்லது.

    உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக திருப்தியை வழங்குவது ஒரு பக்கம் என்றால், உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் கழித்தும் திருப்தியுடன் வைத்திருப்பது மற்றொரு பக்கம்.

    நாம் உண்ணும் உணவுகளில்

    மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்ஸ்)

    கொழுப்புச் சத்து (ஃபேட்)

    புரதச்சத்து (ப்ரோட்டீன்)

    நார்ச்சத்து (ஃபைபர்)

    ஆகியவை உள்ளன.

    மாவுச்சத்து அடங்கிய தானியங்கள் சார்ந்த உணவு முறை / இனிப்பு சுவை கொண்ட சீனி / சர்க்கரை கலந்த பானங்கள் முதலியவை சாப்பிட்டவுடன் கொஞ்சம் திருப்தியைத் தந்தாலும், சாப்பிட்ட சில மணிநேரங்களில் மீண்டும் அதிகப் பசியைத் தூண்டும்.

    நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே திருப்தியை குறைவாக வழங்கினாலும் நீண்ட நேர திருப்தியை வழங்கவல்லவை.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே வயிற்றை நிரப்பி திருப்தியை வழங்கினாலும் நீண்ட நேர திருப்தி வழங்குவதில் குறைபாடு கொண்டவை.

    புரதச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தியை சிறப்பாக வழங்குகிறது.

    நீங்கள் உணவு மூலம் உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தி அடைய விரும்பினால் உங்களது மூன்று வேளை உணவிலும் மாவுச்சத்தைக் வெகுவாக குறைத்து, புரதச்சத்து உள்ள உணவுகளையும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து வந்தால்..

    அடிக்கடி டீ/காபி, வடை பஜ்ஜி, பர்கர் / கூல்ட்ரிங்க்ஸ் என மனம் கரைகடல் போல அலைபாயாமல் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும். உடல் எடையும் குறையத் துவங்கும்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும்.
    • எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்.

    "மேல் நாட்டிலே கூட இந்தியாவை ஏழை நாடு, ஏழை நாடு என்று கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்த நாடு ஏழைநாடு அல்ல. இந்த நாட்டிலே என்ன குறைவு? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கின்றேன். இயற்கை வளத்திலே குறைவா, மக்களுடைய அறிவிலே குறைவா அல்லது ஞானத்திலே தான் இந்நாடு குறைந்து விட்டதா? எவ்விதக் குறைபாடும் இல்லை.

    இன்று இந்திய நாட்டிலே படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றார்கள். பல நாடுகளை இவர்கள் வளப்படுத்துகின்றார்கள். இத்தகைய முறையிலே இன்று இந்திய நாடு எல்லா நாடுகளுக்கும் விஞ்ஞானிகளை ஏற்றமதி செய்து கொண்டு இருக்கின்றது என்றால் இது தவறல்ல. நான் நேரடியாகச் சென்றுப் பார்த்ததைதான் கூறுகின்றேன்.

    இந்த முறையிலே இந்நாட்டிலே விஞ்ஞான அறிவானது அந்த அளவிற்குத் ததும்பி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு இருந்தும் என்ன குறைபாடு என்று கூறினால் அரசியல் முறையிலே இருக்கக்கூடிய ஊழல்கள் தான் இதற்குக் காரணம்.

    ஒழுங்கான அரசியலை நம்மால் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் அந்நிய நாட்டு ஆட்சியிலே பட்ட பண்பாடானது அப்படியே தொக்கி நிற்கின்றது. இன்னும் நமக்கேற்ற முறையிலே நாம் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவில்லை.

    வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும். அவை:

    1] அறிவு

    2] சுகாதாரம்

    3] பொருளாதாரம்

    4] அரசியல்

    5] விஞ்ஞானம்

    ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்.

    வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்திலேயும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்."

    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    • அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.
    • ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்.

    இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு!

    "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த

    அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு

    பிணியே பிணிக்குமருந்தே அமரர் பெருவிருந்தே

    பணியே னொருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே"

    அபிராமிபட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது !

    மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக சொல்லவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர்.. அப்படியல்ல !

    மணியே - கண்மணியே..

    மணியின் ஒளியே - கண்மணியிலுள்ள ஒளியே..

    ஒளிரும் மணிபுனைந்த அணியே - ஒளிபொருந்திய மணியை உடைய கண்ணே..

    அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே..

    அணுகாதவர்க்கு பிணியே -கண்மணி ஒளியை அணுகாதவர்களுக்கு பிறவிப் பிணியே..

    பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணிதீர மருந்து கண்மணி ஒளியே..

    அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இதுதான்..

    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியே இறைவனின் தாமரை திருவடி என்பது, அதை பணிந்த நான் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.

    இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல்போதும் ஞானம் பெறுவதற்கு!

    அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.

    இதையேதான் வள்ளலாரும்,

    'நல்ல மருந்து இம்மருந்து

    சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து

    அருள்வடிவான மருந்து

    அருட்பெருஞ்ஜோதி மருந்து' என்கிறார்.

    "கண்ணின் மணியை கருத்தின் தெளிவை

    விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

    எண்ணி எண்ணி இரவும் பகலுமே

    நண்ணுகின்றவர் நாந்தொழுந் தெய்வமே"

    என்று தாயுமானசுவாமிகள் ஞானம் உரைக்கிறார் !

    இறைவன், கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார் தாயுமான சுவாமிகள்.

    இதுதான் உன்னதமான ஒப்பற்ற ஞானவழி !

    ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்!

    இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

    - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

    • நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.
    • சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    நமக்கெல்லாம் தெரிந்த அளவில், கிரகம் என்றால் "வாழ்விடம்"அல்லது "வீடு" என்று பொருள். அதன் உண்மையான பொருள் "வேறு வீடு" என்பதே சரியானதாகும்.

    நாம் தங்கியிருக்கும் வீட்டை விட்டு, வேறு வீட்டிற்கு குடிபோவதை "கிரகப்பிரவேசம்" என்று அழைக்கிறோம். அதாவது வேறு வீட்டிற்கு மாறுகிறோம் என்பதை குறித்த பெயர்தான் "கிரகப்பிரவேசம்".

    எனவே கிரகம் என்றால் வேறு இடம், அதாவது மனிதர்கள் வாழும் பூமி அல்லாத "வேறு அகம்" என்பதே மருவி, வேறகம், கேரகம் பிறகு கிரகம் என்றானது.

    இதிலிருந்து என்ன தெரிகிறது. கிரகம் என்பது சூரியனை சுற்றும் கோள்களை மட்டும் குறிக்காது, அது பூமியல்லாத, ஆனால் பூமியில் வாழும் உயிரினங்களின் மீது கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வேறு அகங்களை குறிக்கிறது. இதில் துணைகோளான நிலவு, வீண்மீனான சூரியன் , ஆகியவையும் அடங்கும்.

    சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி), சனி, ராகு (நிழல்கோள்), கேது ( நிழல்கோள்) ஆகிய ஒன்பதும் வேறு அகங்கள் ஆகும்.

    மேற்கண்ட 9 வேறகத்தில் சூரியனை மட்டும் நடுவே நிறுத்தி, சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, நேர்கோட்டில் நிலவு வந்து மறைக்கும் "சூரிய கிரகணத்தை" பாம்பின் உடல் , மனித தலை கொண்ட "ராகு" எனும் நிழல் கிரகமாகவும்,

    சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவே நேர்கோட்டில் பூமி வந்து மறைக்கும் "சந்திர கிரகணத்தை" பாம்பின் தலை, மனித உடல் எனும் "கேது" கிரகமாகவும் உருவகம் செய்தனர்.

    ஏனென்றால் மற்ற பௌதீக கிரகங்களை போலவே , பூமியில் வாழும் உயிரினங்களின் மீது குறிப்பிட்ட தாக்கத்தை, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுத்துகிறது. இதனால்தான் நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.

    -முனைவர் பாண்டியன்

    • பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம்.
    • ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். இதற்கு பொதுவான விளக்கம் சிவன் கோவில் சொத்தை அபகரித்தால் குலம் நாசம் என்பதாகும்.

    இந்து சமயத்தில் பெருமாள், சிவன், என இரு பெரும்தெய்வங்கள் உண்டு. இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள், ஆடை ஆபரணங்கள், நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

    ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தரித்து உடலில் சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசிக்கோலத்தில் இருப்பார்.

    பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர் மீது பக்திகொண்டு மக்கள்வழிபட்டு அவரிடம் கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

    ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவதுதான் நிதர்சனம். அவருடைய அலங்காரம் அப்படி.

    பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம். ஆனால் ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து எனப்படுவது திருநீறும் ருத்ராட்சமுமே. இதை அணிந்தால் அவரது குலம் நாசமாகும். அதாவது அவரது பாவங்கள் அனைத்தும் நாசமாகும். இதனால் அவரது மறுபிறப்பும் நாசமாகும். அவரால் அவரது வம்சமே பிறவிக்கடலில் இருந்து மீண்டு....பிறவாநிலையை அடைவர். இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் பொருளாகும்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    ×