search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanuman jayanti"

    • ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அனுமன் ஜெயந்தியையொட்டி திருப்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பழங்கள் - வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 வடமாலை சாற்றப்பட்டது.மேலும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு மெகா சைஸ் லட்டு படைக்கப்பட்டது. ஆலாங்காடு சித்தி விநாயகர் கோவில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், மானூர் அனுமந்தராயசுவாமி கோவில், கோர்ட் வீதி, ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.
    • எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன.

    ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.

    எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

    எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன், என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான்.

    விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்.

    என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார். தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

    • 11 மணிக்கு மேல் 1008 லிட்டர் பால் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
    • மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.

    நாமக்கல் கோட்டையில் உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லாலான ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று விழாவுக்கு உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய கோட்டை ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பார்க் ரோட்டில் எம்.ஜி.ஆர் வளைவில் இருந்து மதுரைவீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவால் நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு, எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்து வருகிறது.

    • துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
    • இன்று முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம். இப்போது அனுமனுக்கு விரதம் இருக்கும் முறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.

    அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.

    மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம்.

    சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: 'ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

    அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரங்களான லட்டு, பூந்தி, மற்றும் உகந்த மலர்களான துளசி, வெற்றிலை போன்றவற்றை படையலிட்டு வழிபாடு செய்வார்கள். 

    ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார்.

    வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

    ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். இன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    • நாளை அதிகாலை சாமிக்கு 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.
    • காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும்.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை சாமிக்கு 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை சுமார் 90 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று (வியாழக்கிழமை) முடிக்கப்பட்டு, மாலை கோர்க்கும் பணி தொடங்கும் என வடை தயாரிப்பு பணியில் ஈடுபடும் நபர்கள் கூறினர்.

    இதற்கிடையே ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இருந்து கோவில் வரை பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தடுப்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்துள்ளோம். விரைவாக சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.250 கட்டணத்தில் தனிவழி மற்றும் இலவச தரிசனம் செய்யும் வழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும். எனவே அதன் பிறகு வரும் பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தை பார்வையிட அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இணையதளம் மூலமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை கோட்டை சாலையில் வாகனங்கள் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதுதவிர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டிரோன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • ஜனவரி 1-ந்தேதி அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • 2-ந்தேதி சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுதல் நடக்கிறது.

    திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், திண்டிவனத்திலிருந்து 29-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் 23-ந்தேதி (நாளை) அனுமன் ஜெயந்தி மகா உற்சவம் நடக்க உள்ளது. இந்த விழாவிற்குண்டான பூர்வாங்க பூஜைகள் நடந்து வருகிறது.

    லட்சார்ச்சனை, விஷேச யாகசாலை பூஜை காலை மற்றும் மாலை, இருவேளைகளிலும் நடக்கிறது. 23-ந்தேதி (நாளை) காலை 8.30 மணியளவில் மூலவர் ஆஞ்சநேயருக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் ''விஷேச திருமஞ்சனம்'' நடைபெற உள்ளது.

    ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணியிலிருந்து ''அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள்'' நடைபெறும். அதிகாலை முதலே, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுதல். 23-ந்தேதி (நாளை) மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து வைபவங்களுக்கும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் கார்களை நிறுத்த, சத்துவா நிறுவன வளாகத்தில், முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு, அருகாமையில், சாலை ஓரமாக உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆலயத்திற்கு வருகை தரும் தாய்மார்களில், தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டும் தேவையுள்ளவர்களுக்கென தனியறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவல் பஞ்சவாடி நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

    • ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு.
    • ‘அனுமன் ஜெயந்தி’யான நாளை ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

    இறப்பில்லாது வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்று அழைப்பார்கள். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றான் விபீஷணன். பெருமாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தான், மகாபலி சக்கரவர்த்தி. சிவனே கதி என்று சரணாகதியில் பக்தி செலுத்தியதால் எமனையே வென்றார், மார்க்கண்டேயர். படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்களையும் எழுதினார் வியாசர். தாயைக் கொன்று, தந்தையின் சொல்லை செயல்படுத்தியதுடன், மீண்டும் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர். கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தன் வீரத்தை வெளிப்படுத்தினான், துரோணரின் மகன் அஸ்வத்தாமன். இதுபோன்ற செய்கையால் மேற்கண்ட ஆறுபேரும் இறப்பில்லா சிரஞ்சீவி வாழ்வைப் பெற்றனர். ஆனால் யார் என்று தெரியாத ராமனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் சிரஞ்சீவி பட்டியலில் இடமுண்டு.

    ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அவருக்கு உதவிபுரிய அனைத்து ஜீவராசிகளும் முன்வந்தன. ராமருக்கு உதவுவதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், தன்னுடைய சக்தியை, ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அப்போது கிஷ்கிந்தா வனத்தில் அஞ்சனை என்ற வானரப் பெண், தனக்கு குழந்தை வரம் கிடைக்க சிவபெருமானை வேண்டி தவமிருந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியை கொண்டு போய் சேர்த்தார், வாயுதேவன். அதன்மூலமாக அஞ்சனைக்கு பிறந்தவர்தான், அனுமன்.

    கைகேயியால் வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமன், அங்கே தன் மனைவியை பறிகொடுக்கிறார். செய்வதறியாத நின்ற ராமனுக்கு, வழிகாட்டியாக, சிறந்த சேவகனாக தோளோடு தோள் நின்றவர் அனுமன்தான். அவர்தான் சுக்ரீவனிடம் ராமரை அழைத்துச் சென்றார். வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டுவந்தார். சீதையால் 'சிரஞ்சீவியாக இரு' என்று ஆசீர்வதிக்கப்பட்டார். ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றார். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித்தின் அம்பு பட்டு மூச்சையான லட்சுமணனை காப்பாற்ற சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார். 14 ஆண்டு வனவாசம் முடிந்தும் ராமர் திரும்பி வராததால் தீக்குளிக்க முயன்ற பரதனை, காற்றை விட வேகமாகச் சென்று காப்பாற்றினார். மகாபாரத காலத்திலும் கூட, அர்ச்சுனனின் தேரில் கொடியாக இருந்து, அனைத்து ஆபத்துகளையும் தாங்கி நின்றார்.

    மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உரிய பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால்தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு. அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனிச் சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள்பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.

    அனுமன் அவதரித்ததாகக் கூறப்படும் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் தினத்தில் அவரை வழிபடுவது சிறப்பானது. 'அனுமன் ஜெயந்தி'யான நாளை ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும். அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். அனுமனை வெண்ணெய் சாத்தியும், வெற்றிலை, வடை, துளசி, எலுமிச்சைப்பழம் போன்றவற்றால் ஆன மாலைகளை அணிவித்தும் வழிபடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

    ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

    • வருகிற 23-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
    • ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல் :

    நாமக்கலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் நாமக்கல் மட்டுமின்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்வார்கள்.

    இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி, அன்று காலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அதற்காக வடை தயாரிக்கும் பணி 4-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு, தரிசன வசதி உட்பட அனைத்துக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் நகரின் முக்கிய சாலைகளான கோட்டை சாலை, பூங்கா சாலைகளில் போக்குவரத்துக்கு நாளை மறுநாள் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் திருட்டு வழிப்பறி சம்பவங்களை தடுக்க சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஏ.டி.எஸ்.பி மணிமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருச்சிற்றம்பலம் அருகே அலிவலம் மண்ணுமுடைய அய்யனார் கோவில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

    மாலை 3 மணிக்கு வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    பக்தர்கள் மண்ணுமுடைய அய்யனாரையும், பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வழிபாடு ஏற்பாடுகளையும் பக்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

    • கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
    • கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.

    மதுரை

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக திகழ்கிறது.
    • லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம் நடக்கிறது.

    தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலை தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம், வீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • விழாவில் 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடைமலை அலங்காரம் நடைபெறும்.

    தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் மலர் அலங்காரம் செய்யப்படும். இல்லையெனில் வெள்ளிக்கவசம் அல்லது தங்ககவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணெய்காப்பு, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.

    இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனி கோவிலில் காட்சி தருகிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும் பிரமாண்டமாக இந்த சிலை காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.

    ராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.

    அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    "ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெய்ந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஆஞ்ச நேயர் 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் அருள்பாலிப்பது காண கண் கொள்ளா காட்சியாகும்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 23-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.

    காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் வடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ×