search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage dump"

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • குடியாத்தம் நகர் மன்ற தலைவர் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஒரு பகுதி குடியாத்தம் தரணம் பேட்டை வீரபத்திர மேஸ்திரி தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பஜார் பகுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், எம். எஸ்.குகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்வையிட்டு தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    • குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.
    • இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.

    இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.

    இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.

    குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.

    • நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
    • தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது.

    தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் எழும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை அங்கு திடீரனெ தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் சங்கரன்கோவில் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    உடனே பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். ஆனாலும் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் புகை எழும்பியபடியே உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள புதுக்காலனி, பாலாஜி நகர், சிவாஜி நகர், சத்திரம் புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    வழக்கமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் மீது அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரி பழுது காரணமாக தண்ணீர் ஊற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் திடீரென தீ ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஈரோட்டில் மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    ஈரோடு:

    பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.

    ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
    ×