search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"

    • நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல்.
    • கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.

    விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம். சதுர்த்தி என்றால் நான்கு. 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம் வீடுபேறு) எளிதாக எட்ட வைப்பவர் விநாயகர், உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிக்கும் தெய்வம் அவர்.

    அவருடைய கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, உலக இன்பத்துக்கு ஆதாரமான பிரபஞ்சத்தை சுட்டிக் காட்டும். பிரபஞ்சத்துக்கு அழிவும் தோற்றமும் உண்டு. அப்படி தோன்றி மறைவதை, 'மாயை' என சாஸ்திரம் வர்ணிக்கிறது.

    அவரது மஸ்தகம் பிரம்மம். இது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதைக் குறிக்கும். மிகப் பெரியது எனும் பொருளுக்கு ஏற்ப, அவரின் யானை முகம் எல்லோருக்கும் புலப்படும் படியாகத் தென்படுகிறது என்று விவரிக்கிறது புராணம்

    (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்மவாசகம்), விநாயகரின் கரத்தில் உள்ள கொழுக்கட்டைக்கு மோதகம் என்றும் பெயர் உண்டு. 'மோதக ஹஸ்தா' எனப் போற்றுகிறது ஒரு செய்யுள். மகிழ்ச்சியைத் தரும் என்பதே மோதகத்தின் தாத்பரியம். ஆக, மகிழ்ச்சியை (மோதகம்) கையில் ஏந்தித் தயாராக வைத்திருக்கிறார் விநாயகர்.

    நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல் அவர். கொழுக்கட்டைக்கு உள்ளே இருப்பது பூரணம்: அதாவது நிறைவு. அது இனிப்பாக இருக்கும். இனிப்பு எல்லா உயிரினங்களுக்கும் பிடிக்கும்' என்கிறது புராணம்.

    பூரணத்தை மறைத்திருக்கும் மாவு வெள்ளை நிறம். அந்த நிறத்தின் குணம் சாத்விகம். மோதகம், உருண்டை வடிவில் இருக்கும் தானே?! அதைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பதன் மூலம், 'உலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன்' என விநாயகர் சொல்லாமல் சொல்கிறார் என்றால், அது மிகையல்ல!

    பிள்ளையாருக்கு மோதகம் படைத்து வழிபடும் இல்லத்தில் நிறைவான மகிழ்ச்சியும் குறையாத செல்வமும் உண்டாகும். 21 உளுந்துமணி அளவு, புருஷனின் உருவம்' என குட்சும புருஷனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். அது, ஆனைமுகனுக்கும் பொருந்தும். ஆகவே, 21 இலைகள், 21 பூக்கள், 21 அருகம்புல் ஆகியவற்றால் விநாயக சதுர்த்தி தினத்தில் சிறப்பாக பூஜிப்பார்கள். அவற்றில், எருக்க இலையும் எருக்கம்பூவும் அடங்கும்!

    பரம்பொருள், தான் படைத்த இலைகளையும் பூக்களையும் ஏற்று மகிழ்கிறார். இயற்கை செல்வமான பொருட்களை, இயற்கைக்குப் படைத்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புதத் தருணம் விநாயக சதுர்த்தி. இந்த நாளில் கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.

    காரடையான் நோன்பு அடை, வருஷப் பிறப்பு வேப்பம்பூ பச்சடி, திருவாதிரைக்களி இப்படி புண்ணிய தினங்களில் சில பொருள்கள் சிறப்புப் பெறுவது போல், விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம்பூ மாலை சிறப்பிடம் பெறுகிறது.

    விநாயகர் எளிமையானவர். அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது மட்டுமன்றி, எருக்கம்பூ சூரிய கிரகத்துக்கு உரியது. இது, சகலவிதமான எதிர்மறை சக்திகளை விலக்கும் வல்லமை கொண்டது. ஆகவே பிள்ளையாருக்கு எருக்கம் பூ சமர்ப்பித்தால் காரியத் தடைகள் நீங்கும். ஜாதகத்தில் சூரியனின் நிலையால் உண்டாகும் பாதிப்புகளும் தோஷமும் விலகும். சூரிய பகவானின் அனுக்ரஹம் வாய்ப்பதால், ஆத்ம பலமும் ஆரோக்கியமும் உண்டாகும்.

    • கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
    • திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அன்னதானப்பட்டி:

    வருகிற 18- ந் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் மற்றும் போலீசார் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.

    இதில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விழா அமைப்பாளர்கள் மற்றும் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் வழங்கினார். இதில் திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    கடலூர்:

    வடலூரில் நெய்வேலி உட்கோட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் நெய்வேலி டவுன்ஷிப் சாகுல்ஹமீத், தெர்மல் லதா, மந்தாரக்குப்பம் மலர்விழி, ஊமங்கலம் பிருந்தா, குறிஞ்சிப்பாடி வீரசேகரன், வடலூர் ராஜா, குள்ளஞ்சாவடி பாண்டிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதி பெற வேண்டும்.ஒலி பெருக்கி பயன்படுத்தினால் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒலிபெருக்கி டெசிபல் அளவினை குறைத்து பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விழாவின் போது பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் மற்றும் இந்து முன்னணியினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

    • ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி.
    • சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்த வகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.

    டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

    தேவையானவை:

    அரிசி மாவு - ஒரு கப்,

    பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10,

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10,

    திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம்,

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கடாயில் தண்ணீர்,உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்சியில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பூரணம் தயார்.

    கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    ஸ்பிரவுட் கொழுக்கட்டை

    தேவையானவை:

    முளைகட்டிய பயறு - ஒரு கப்,

    பச்சை மிளகாய்- 3 (நறுக்கவும்),

    தேங்காய் துருவல் - கால் கப்,

    அரிசி மாவு - ஒரு கப்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும்.

    ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.

    தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை

    தேவையானவை:

    தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்),

    பனைவெல்லம் - தலா ஒரு கப்,

    தேங்காய் துண்டுகள் - அரை கப்,

    ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தினை மாவை வெறும் கடாயில் வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும்.

    பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து

    சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இத்தகைய சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    • பரணி- சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.
    • ஹஸ்தம்- குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி- வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.

    பரணி- சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.

    கிருத்திகை- வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

    ரோகினி- சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.

    திருவாதிரை- தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.

    புனர்பூசம்- சந்தன அலங்கா ரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    பூசம்- தங்கக் கிரீடத்தால் அழகு படுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்- அருகம்புல் மாலை போதும்.

    மகம்- தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.

    பூரம்- கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சாற்றவும்.

    உத்திரம்- அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்- குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    சித்திரை- வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    சுவாதி- தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    விசாகம்- திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்- கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.

    கேட்டை- தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.

    மூலம்- சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

    பூராடம்- தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்- அருகம்புல் மாலையே போதும்.

    திருவோணம்- சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    அவிட்டம்- வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அலங்காரம் செய்வித்தால் போதும்.

    சதயம்- குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி- தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    உத்திரட்டாதி- ரோஜா மாலை அங்காரமே போதும்.

    ரேவதி- மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.

    • அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்.
    • கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்கு தேவையானபொருள்

    வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

    பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-

    1) முல்லை- அறம்

    2) கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்

    3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்

    4) அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும்

    5) இலந்தை -கல்வி

    6) ஊமத்தை - பெருந்தன்மை

    7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்

    8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு

    9) கண்டங்கத்திரி - வீரம்

    10) அரளி- வெற்றி

    11) எருக்களம்- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு

    12) மருதம் - குழந்தைப்பேறு

    13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு

    14) மாதுளை- பெரும்புகழ்

    15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம்

    16) மருவு - இல்லற சுகம்

    17) அரசு - உயர் பதவி, மதிப்பு

    18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம்

    19) தாழம் இலை - செல்வச்செழிப்பு

    20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை

    21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்

    இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர்.
    • புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

    நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகப் பெருமான், அதனால் தான் விநாயகரை, ''வினை தீர்ப்பவர்' என்கிறோம். எந்த செயலை ஆரம்பிக்கும் முன் அவரைத் தொழுதுவிட்டு செய்தால் கையில் எடுத்த வேலை மங்கலகரமாய் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள்.

    பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில் முதலில் வருபவர் விநாயகர். விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் விநாயகரை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

    பிரம்மாவை வர்த்த புராணத்தில் விநாயகரே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார். அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும்.

    புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர். விநாயகர் வழிபாடு இந்தியாவின் மட்டும் என்று இல்லாமல் தமிழிழம் நோபாள், திபெத், தாய்லாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சீனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது.

    மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் விநாயகர் சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் 'வீரகோசா' அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிசிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின்போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 ஆண்டுகளுக்கு முந்தையது என நிர்ணயித்துள்ளனர்.

    மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச்சிறந்தவராக விநாயகரை கருதுகின்றனர். விநாயகரை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன. தமிழ் ஈழத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் வழிபாட்டு புனித தலங்கள் ஏராளமாக உள்ளன.

    இவரது உருவம் நம்மை புன்முறுவல் பூக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. வேழமுகம், அதற்குக் கீழே மனித உடல், மிகப்பெரிய தொந்தி, இடதுபக்க வாயில் ஆண்மையைக் குறிக்கும் நீண்ட தந்தம், வலதுபுறம் பெண் தன்மையைக் குறிக்கும் முறிந்த சிறிய தந்தம் ஆகியவை வியக்க வைக்கின்றன. பருத்த வயிறு பூதகணங்களை உள்ளடக்கியவர் என்பதைச் சுட்டுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி எனப்படுகிறது. இந்த வளர்பிறைச் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் கூட நிகழும். இந்த வருடம் புரட்டாசி 1 (திங்கட்கிழமை 18.9.2023) சதுர்த்தி திதி நிகழ்கிறது. அன்றே சதுர்த்தி விரதமும், விநாயகர் சதுர்த்தியும் அனுஷ்டிக்க வேண்டும்.

    ஒருமுறை பார்வதி தேவி நீராடச் செல்லும் போது காவலுக்கு யாருமில்லாததால் தான் குளிக்க வைத்திருந்த சந்தனக்குழம்பினால் ஓர் உருவம் உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்க அதுவே அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்ற தேவியின் ஆணைப்படி அப்பிள்ளை ஈசனையும் தடுத்ததால் சினமடைந்தவர் அதன் சிரசை துண்டித்துவிட்டார்.

    அதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று, காளியாக மாறி எல்லாவற்றையும் அழிக்கலானார். அவரைச் சாந்தப்படுத்த ஈசனின் ஆணைப்படி தங்கள் பார்வையில் முதலில் தென்பட்ட யானையின் தலையைப் பூதகணங்கள் கொண்டுவர அதையே பிள்ளையின் முண்டத்தில் இருத்தி உயிர்ப்பித்தார்.

    அன்னையும் சமாதானமுற்று 'பிள்ளையாரை' அணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு நடந்த தினமே பாத்ரபத வளர்பிறை சதுர்த்தியாகி அவரது ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது. விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.

    களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாகச் சேர்த்துப்பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி அவருக்கு உபச்சரங்களான ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும். பூஜையில் வைத்த பிள்ளையார் சிலையை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    • கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது.
    • அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.

    1. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.

    2. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. துதிக்கையில் தண்ணீர்க்குடம். பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். முன் கைகளில் வலதுகையில் தந்தம், இடது கையில் மோதகம்.

    3. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.

    4. அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.

    5. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.

    6. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியை தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.

    7. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.

    8. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.

    9. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.

    10. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    11. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

    12. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.

    13. இப்பூவுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

    14. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

    15. விநாயகருக்கு தேங்காய் எண்ணை காப்புதான் மிகவும் பிரியமானது. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.

    16. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசுரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

    17. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

    18. சக்தியையும், சிவனையும் வேண்டிக்கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.

    19. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

    20. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

    21. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.

    22. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

    23. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    24. விநாயகர் என்றால் அவரைவிட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    25. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    26. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    27. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப் படுகின்றார்.

    28. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    29. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    30. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
    • சதுர்த்தி விரதம் அன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி பாராயணம் செய்வது சிறப்பு.

    விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்த வரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டம் நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    • பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×