search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expectation"

    • நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையேயான சாலை 2 மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.

    கோவில்கள்

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கிறது. மேலும் சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் உள்ளிட்ட வையும் அதிக அளவில் இந்த சாலை வழியாக தான் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், பண்பொழி குமாரசுவாமி கோவில், கேரளாவில் உள்ள அச்சன்கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ.430.71 கோடி

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல், தொழில்நுட்பம், கலை கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இந்த சாலையில் அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது.

    நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.430.71 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முடிப்பதற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விபத்துகள்

    இந்த சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    எனவே போதுமான எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டி பலகைகள், இரவில் எச்சரிக்கை செய்யும் விளக்குகள், வாகனங்கள் செல்லும் பகுதியையும் பணிகள் நடக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் அதிக அளவில் வைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதிவேக பஸ்கள்

    தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் சாலையின் அகலம் குறைவு காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

    சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வதற்கு சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.

    புலம்பல்

    மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 விபத்துகளாவது ஏற்படுகிறது. உயிர் சேதம், பொருள் சேதம் என பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. நேற்று கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் அருகே தென்காசியில் இருந்து நெல்லை சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர்களிடம் கேட்டால், தாமதமாக சென்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும். இதனால் அலுவலக நடவடிக்கைகளுக்கு பயந்து நாங்கள் இவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைய வேண்டியுள்ளது என்று புலம்புகின்றனர்.

    இந்த சாலை விபத்துகள் குறித்து சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.


    • செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.
    • செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் முக்கியமான ெரயில் ஆகும்.

    2 ரெயில்களாக பிரிப்பு

    கொரோனா காலத்திற்கு முன்பாக இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கலில் 2 ெரயிலாக பிரிக்கப்பட்டு ஒரு ெரயில் திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கும், மற்றொரு ரெயில் ஈரோடுக்கும் சென்றது.

    ரெயில்வே வாரியத்தின் உத்தரவின்படி இணைப்பு ரெயில்கள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

    ஈரோடு - நெல்லை

    எனவே தற்போது நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும், திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும் இயக்கப்பட உள்ளது. இதில் ஈரோடு - நெல்லை, மயிலாடுதுறை - திண்டுக்கல் ரெயில்கள் வருகிற 11-ந் தேதி முதலும், திண்டுக்கல்- மயிலாடுதுறை ரெயில் 12-ம் தேதியும், நெல்லை- ஈரோடு ரெயில் 13-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    புதிய எக்ஸ்பிரஸ்

    இந்நிலையில் தென்காசி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயிலை திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயிலோடு இணைத்து செங்கோட்டை -மயிலாடு துறை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.

    இவ்விரு ரெயில்களின் நேரங்களும் இணைப்புக்கு ஒத்துப் போவதால் செங்கோட்டை- மதுரை ரெயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யலாம். அதைப்போல மதியம் 11.25 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலானது, திண்டுக்கல் ரெயில் நிலையத்தை மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    அதைப்போல மதுரை- செங்கோட்டை ரெயில் மதுரையில் இருந்து மாலை 5.10- க்கு புறப்படும் என்பதால் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலை மதுரை- செங்கோட்டை ரெயில் உடன் இணைத்து இயக்குவது எளிது.

    இந்த ரெயில் இயக்கு வதற்கு கூடுதல் ரெயில் பெட்டிகள் தேவை யில்லை. மேலும் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு புதிய பகல்நேர இணைப்பு கிடைக்கும். எனவே செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×