search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shivakumarமேகதாது அணை"

    கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் இன்று காலை மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். #MekedatuDam
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த மாதம் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கியது. இந்த திட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

    கர்நாடகாவில் ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட சில சிறிய அணைகள் உள்ளன. அந்த அணைகளில் 104 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க வசதி உள்ளது.

    இந்த தண்ணீரில் இருந்தே தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய உரிய பங்கு தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது. இந்த நிலையில் மேகதாதுவில் கட்டப்படும் அணையில் 67 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    அத்தகைய சூழ்நிலையில் மொத்தம் 171 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறண்டுவிடும் அபாயம் உள்ளது.

    காவிரி நதி நீருக்கான சட்டப்போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்று தனக்குரிய பங்கை பெற்ற போதிலும், ஆண்டுதோறும் போதிய தண்ணீர் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக சட்டசபையில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    தமிழக அரசு பல்வேறு வழிகளில் தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்த போதிலும், கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. நேற்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதில் மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக ஆய்வு பணிகளை தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.


    மந்திரி சிவக்குமாருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவினர் சென்றிருந்தனர். அவர்களுடன் மேகதாது அணை எப்படி கட்டப்படும் என்று மந்திரி சிவக்குமார் விவாதித்தார்.

    மேகதாது அணை அருகில் நீர் மின்நிலையம் கட்டப்பட உள்ளது. அந்த பகுதியையும் மந்திரி சிவக்குமார் ஆய்வு செய்தார். மேகதாது அணையை எப்போது கட்ட தொடங்கலாம் என்றும் அதிகாரிகளிடம் மந்திரி சிவக்குமார் கேட்டு அறிந்தார்.

    மேகதாது பகுதியில் சில மணிநேரம் தங்கியிருந்து மந்திரி சிவக்குமார் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வு தகவல்களை அவர் பெங்களூர் சென்றதும் குமாரசாமியிடம் தெரிவிக்க உள்ளார். இதை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அதிரடியாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    கர்நாடக அரசு தீவிரம் காட்டும் மேகதாது அணை காவிரி ஆற்றில் சிவசமுத்திரம் அருவி அருகே அமைய உள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 2 பெரிய மலைகளுக்கு மத்தியில் இந்த அணை கட்டப்பட உள்ளது.

    664 மீட்டர் அகலத்தில் கட்டப்பட இருக்கும் மேகதாது அணையால் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் அதிக நீர்வளம் பெற்று செல்வசெழிப்பாக மாறிவிடும். ஆனால் தமிழகத்தின் டெல்டா ஏற்கனவே காய்ந்து வரும் நிலையில் மேலும் நீர் பாசனப் பகுதிகளை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படும். #MekedatuDam
    ×