search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyber crime police"

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார்.
    • கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பெல்லந்தூரில் இயங்கி வரும் கால் சென்டர் நிறுவனத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

    இப்பெண் தன்னுடன் பணிபுரிந்த ஆதித்யா சந்தோஷ் (25) என்பவரை 4 மாதங்களாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார். அப்போது தன் நிர்வாண புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேற்கொண்டு கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. ஒட்டுமொத்தமாக பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் கேலரிக்குள் இருந்தன.

    இது குறித்து கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு இளம்பெண் கொண்டு சென்றார். அவர்கள் ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஆதித்யா சந்தோஷ் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் புகைப்படங்கள் எடுத்து இளம்பெண்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கால் சென்டர் பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
    • வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் உறவினர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    பின்னர் முருகன் தான் செய்த தவறை உணர்ந்து நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து குற்றவாளிகளுக்கான நன்னடத்தை கால சட்டம் 1958-ன் கீழ் தண்டனையை ரத்து செய்து முருகனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
    • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

    பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆன்லைன் மூலம் பணத்தை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் சிக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 34). இவர் நேருவீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர் முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பிட்காயின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை.

    இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .

    இதுபோல் புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும்.
    • வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் நமது பயன்பாட்டுக்காக செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் ஏராளமான 'ஆப்'கள் வந்துள்ளன.

    அந்த வகையில் நமக்கு தகவல்கள் பரிமாற்றத்துக்கு பேரூதவியாக இருப்பது வாட்ஸ்அப் ஆகும்.

    இந்த வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலம் தற்போது நமது தனிபட்ட தகவல்களையும், வங்கி கணக்குகளையும் திருடி நமது பணத்தை அபகரித்து விடுகின்றனர்.

    வாட்ஸ்அப் குழுக்களில் செல்போனில் வாட்ஸ்அப் பிங்க் எனும் பெயரில் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

    தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும். முதலில் வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் லிங்கை அனுப்பி பதிவிறக்கத்திற்கு இணைப்பை கிளிக் செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யும் போது லிங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான வைரசும் சேர்ந்து பதிவிறக்கம் ஆகிவிடும்.

    கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக மொபைலில் முழுமையாக பரவி வாட்ஸ்அப் குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ்அப் அப்டேட் என்று தானாகவே பதிவாகிறது.

    இந்த லிங்கை யாராவது தொட்டால் வாட்ஸ்அப் முழுவதும் ஹேக் செய்து வங்கி கணக்குகள் முதல் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும். இது மட்டுமல்லாமல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் உள்பட பல தகவல்கள் திருடப்படுகின்றன.

    இந்த வைரசை தடுப்பதற்கான முதல் வழிமுறை இந்த லிங்கை யாரும் தொடக்கூடாது. உடனடியாக லிங்கை கிளியர்சாட் கொடுத்து விலக்கி விடுவதே சிறந்த வழி முறையாகும்.

    எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும். வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    போலீசார் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.

    • வாலிபரிடம் மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர்.
    • ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர். அதனை நம்பி முருகன் ரூ.1.20 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

    பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடம் இருந்து பணம் பெற்றதை அறிந்து கொண்ட முருகன் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்த ரூ.1.20 லட்சத்தை மீட்டனர். இதை யடுத்து அந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கினார்.

    • மர்மபெண் ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    அவர் சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகிறார். அப்பெண் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வருகிறார்.

    அந்த சமூக வலைதளங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே மர்மபெண் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.

    அந்த கணக்கில் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் போன்ற பதிவும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரது புகைப்படங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
    • ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (50). சொந்தமாக தொழில் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு கடன் வேண்டுமா? ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று தருகிறோம் என்று இருந்தது. இதை உண்மை என்று நம்பிய சதீஷ் அவர்கள் கூறிய செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சதீசுக்கு அனுப்பி வைத்தனர். அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறும் கூறியுள்ளனர். சதீஷும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.

    விண்ணப்ப கட்டணம் ரூ. 5 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினர். பின்னர் ஜி.எஸ்.டி.க்கு பணம் வேண்டும் என்று கூறி 20 ஆயிரம், 50 ஆயிரம் என கொஞ்சம் கொஞ்சமாக சதீஷிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டனர். சதீஷும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினார்.

    பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்தினர் சதீஷிடம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ் ஏன் அடிக்கடி பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.

    அதன் பின்னர் அந்த நிறுவனத்தினர் போன் செய்வதை நிறுத்தி விட்டனர். பின்னர் அவர்கள் கூறியது போன்று சதீசுக்கு கடன் கொடுக்காமல் இழுத்து அடித்தனர்.

    இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதீஷ் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொலைபேசி எண்ணை வைத்து அவர்களின் வங்கி கணக்கை முடக்கினர்.

    விசாரணையில் போலியான ஒரு நிறுவனத்தை தொடங்கி அவர்கள் சதீஷிடம் மோசடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வங்கி கணக்கை முடக்கி பணத்தை அதிலிருந்து மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்தக் குறுந்தகவலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அதில் வங்கி முகவரி குறித்த தகவலை அந்த பெண் பரிமாறி உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 77 ஆயிரத்து 950 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கு வங்கத்தில் இருந்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு அந்த வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் அந்த பெண்ணின் பணம் ரூ.77,950 மீட்டு அந்த பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.

    ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது.
    • இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார்.

    அதன்பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார்.

    போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசி காதலை வளர்த்தனர். வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார்.

    ஒருகட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான்.

    இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகினார். அதன்பிறகு மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

    சிறுவன் பொய் சொல்வதாக நினைத்த சிறுமி, என்னிடம் இதுபோல் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேசினார்.

    அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் போலீஸ்நிலையத்திலும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி உள்ளார். அதனால் அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவிகளை எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

    தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

    பள்ளி-கல்லூரி மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை தர கூடாது.

    மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் தயக்கம் இன்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் குழப்பத்தில் இருந்தால் விசாரித்து அவர்களை தைரியப்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு தருபவர்களை காப்பாற்ற முயற்சி செய்ய கூடாது. போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என கூறி வருகிறார்கள்.

    போலீசாரின் எச்சரிக்கையை மீறி கோவை மாணவியை போல் ஏமாற்றும் நபர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே இனிமேலாவது மற்ற மாணவிகள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    ×