search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector review"

    பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை ஆய்வு செய்தார். #PoondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று அதிகாலை முதல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை ஆய்வு செய்தார்.

    முதலில் அவர் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். பின்னர் இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும் ‌ஷட்டர்களின் உறுதி தன்மை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாயை ஆய்வு செய்து பூண்டி ஏரியின் நீர் மட்டம் மற்றும் நீர் இருப்பு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    அப்போது, பலத்த மழை தொடர்ந்து பெய்து பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட 16 ‌ஷட்டர்களை தயாராக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஏரியில் நீர்இருப்பு குறைந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி ஏரியில் 363 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    இதனால் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு நேற்று இரவு நிறுத்தப்பட்டது.

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு மட்டும் 18 கன அடி வீதம் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது. #PoondiLake

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் டெங்கு போன்ற விஷ காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மாடவீதியில் டெங்கு கொசு புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது மாட வீதியில் உள்ள கடைகள், காலி இடங்களில் இருந்த தேவையற்ற டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

    பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கோ சாலையை பார்வையிட்டார். அங்கு இருந்த பழைய டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தினார். மேலும் அங்கிருந்த காலி நெய் டின்களில் தேங்கியிருந்த மழைநீரில் கொசு புழுக்கள் இருந்தது தெரியவந்தது. அதனை அகற்றவும், கோவில் வளாகத்தில் கொசு மருந்து அடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அங்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    மேலும் கோவிலில் இருந்து வெளியே வரும்போது அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இருப்பதை பார்த்தார். இதையடுத்து, இங்கு சக்கர நாற்காலி இருப்பது யாருக்கும் தெரியாது. அதனால் கோவிலில் மக்கள் வரும் வழியில் சக்கர நாற்காலி உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்க கோவில் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    ×