search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut trees"

    • தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்
    • போதிய தண்ணீர் கிடைக்காததால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு தக்காளி, வெண்டைக்காய், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக ெதன்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க போராடியும் வருகின்றனர். பயிரிடப்படும் காய்கறிகள், தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான தென்னந்ேதாப்புகள் பிளாட்டுகளாக மாறிவிட்டன.

    மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தாலும் இப்பகுதியில் வறட்சியான சூழலே நிலவுகிறது. மேலும் தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் சிறியஅளவு தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதைபார்க்கும் போது விவசாயிகளின் நிலைமை கண்ணீர் வரவழைக்கும் சூழ்நிலையில் உள்ளது தெரியவருகிறது.

    எனவே அரசு இவர்களுக்கு உதவவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர்.
    • தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    பணகுடி:

    ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    இதற்கு பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோய்கள் குணமாவதில்லை. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கூறியும் அதற்கான விளக்கம் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த மர்ம நோய்களுக்கு ராதாபுரம் பகுதிகளில் உள்ள பல தென்னைமர விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு அதற்கான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தால் தென்னை மரங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • 7 யானைகள், 2 குட்டிகளுடன் சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது.
    • விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய யானை கூட்டம் விளைநிலங்களுக்கு புகுந்து பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தியது.

    விளைநிலங்களுக்குள் புகுந்த 7 யானைகள், 2 குட்டிகளுடன் பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது. மேலும் அருகிலுள்ள இளங்கோவன் என்பவரது தோட்டத்தில் 25 தென்னை மரங்களையும், கனகராஜ் என்பவரது தோட்டத்தில் 16 தென்னை மரங்களையும், வெள்ளிங்கிரி தோட்டத்தில் 5 தென்னை மரங்களையும் வேரோடு சாய்த்து தள்ளியது.

    மேலும் அருகில் இருந்த துறை என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டின் கேட்டின் மதில் சுவரை இடித்து தள்ளி மஞ்சள் மூட்டைகளை எடுத்து சூறையாடியது. தொடர்ந்து இந்த பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி மலைப்பகுதிகளுக்கு அனுப்பி விட்டாலும், மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் சேதாரமான பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

    அவர்களிடம் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் யானைகள் வருவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
    • 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இது தவிர பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. பாலாற்றில் பல இடங்களில் விவசாயிகள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பொதுப்பணித்துறை வருவாய்த்துறை, போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் அகற்றினர். மேலும் விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை . இதையடுத்து திருமூர்த்தி அணையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றில் நடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். தொடர்ந்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை அகற்றியபோது மரம் முறிந்து மன்னார்குடி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தம்பி தினேஷ் (28).

    இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்ததால் அதனை சக தொழிலாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னை மரம் முறிந்து ரமேஷ் மீது விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதுபற்றிய புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான ரமேசுக்கு பிரேமலத (32) என்ற மனைவியும், சாதனா (3) என்ற மகளும் உள்ளனர்.

    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench
    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டானது. தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம் வரும்.



    ஆனால் சேதமடைந்த தென்னை ஒன்றுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ. 1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது போதுமானதாக இல்லை. எனவே தென்னை ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும், தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #GajaCyclone #MaduraiHCBench
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Nallakannu
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு சென்றும் 15 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக 353 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தங்களிடம் இருந்த பொருட்களையும் இழந்து விட்டனர். இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது. மீனவர்கள் ஏராளமான படகுகளை இழந்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வக்கீல் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.  #GajaCyclone
    ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #prpandian #gajacycloneeffected

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;

    காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் கிராமப்புறங்களில் விழுந்த மரங்கள், கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுகளால் மாசடைந்து மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் அமைந்துள்ளதால் இதனால் தொற்றுநோய் பரவி வருகிறது. காய்ச்சல், வயிற்றுப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக மன்னார்குடி வட்டம் கோட்டூர் நடுத்தெரு கிராமத்தில் காத்தான் மகன் பாண்டியன் (வயது 50) என்பவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவரது மனைவி, மகன் வயிற்று போக்கு நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.

    எனவே தமிழக அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்கும், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை தவிர்ப்பதற்கும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    துணை ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு உடன் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் எந்திரங்களை வரவழைத்து தென்னை விளை நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் வருகிற 4-ந்தேதி பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கத்தில் உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேலு தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #prpandian #gajacycloneeffected

    கஜா புயல் பாதித்த பகுதியில் 6 வயதுக்குட்பட்ட தென்னை மரங்களை மீண்டும் நடலாம் என்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார். #GajaCyclone #CoconutTrees
    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமானது இதுவரை பல்வேறு முக்கிய பயிர்களில் 826 ரகங்கள், 1500 வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் 166 வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.

    வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளின் பயனாக தமிழ்நாடானது மாறி வரும் பருவ காலங்களிலும் 120 லட்சம் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் உற்பத்தி செய்து தன்னிறைவு அடைந்து டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு குழுவின் கிரிஷிகர்மான் விருதினை கடந்த 6 வருடங்களில் 4 முறை பெற்றுள்ளது.

    தென்னை மரங்கள் கஜா புயலால் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கைவசம் உள்ள நெல் விதைகள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை எல்லாம் நேராக நிமிர்த்தி காப்பாற்றுவது கடினம். 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும். புதியதாக 25 லட்சம் தென்னை நாற்றுகள் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவை. இதற்கு 40 லட்சம் தேங்காய் விதைகள் தேவை. 40 லட்சம் தென்னை விதைகளில் இருந்து நாற்றுகள் உற்பத்தி செய்ய ஒரு வருடம் ஆகும்.



    புதியதாக தென்னை நாற்றுகள் வாங்க கர்நாடக அரசுடன் பேசி வருகின்றோம். அங்கிருந்து 5 லட்சம் நாற்றுகள் வரை வாங்க முடியும்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளோம்.

    தென்னை நாற்று உற்பத்தி மையம் தஞ்சாவூர், கோவை பகுதிகளில் மட்டும் இருக்கின்றது. வருங்காலத்தில் இது போன்ற சேதம் ஏற்படாமல் இருக்க நடவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இருக்கின்ற தரமான தென்னங்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆண்டுகள் ஆன தென்னை மரங்களை மீண்டும் காப்பாற்றுவது கடினம். சாய்ந்து போன 40 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை காப்பாற்றுவது கடினம். சாய்ந்த ஒவ்வொரு மரங்களை காப்பாற்ற 500 ரூபாய் வரை செலவாகும்.

    பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு குழு கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கின்றது. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் நர்சரி அமைக்க முடியும் என்பதை நேரில் பார்த்து அங்கு நர்சரி அமைக்க உள்ளோம்.

    10 அல்லது 15 நாட்களில் புதிய தென்னை நாற்று நடவிற்கான பணிகள் தொடங்கும். நெல் பாதிப்பு அதிகளவு இல்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வாழைக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கடல் நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் நிலத்தில் பாதிப்பு ஏற்படும். அதை சரி செய்ய வழிமுறைகள் உள்ளது.

    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னை மரங்கள் மாற்று நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CoconutTrees

    கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    சென்னை:

    கஜா புயல் தாக்கியதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து விட்டன.

    இதனால் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு தினசரி 100 லாரிகளில் தேங்காய் மற்றும் இளநீர் அனுப்பப்படும். ஆனால் இப்போது தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் சாய்ந்து கிடப்பதால் சென்னைக்கு வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தேங்காய் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை தேங்காய் விலை உயர்ந்து விட்டது. 20 ரூபாய்க்கு விற்ற நடுத்தர தேங்காய் இப்போது 25 ரூபாய்க்கு விற்கிறார்கள். 15 ரூபாய்க்கு கிடைத்த சிறிய தேங்காய் 20 ரூபாயாக உயர்ந்து விட்டது. பெரிய தேங்காய் 30 ரூபாய் இருந்து 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், அடையார், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளிலும் தேங்காய் விலை அதிகளவு உயர்ந்து விட்டது.

    இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் தேங்காய் வியாபாரி ராமசாமி கூறியதாவது:-

    சென்னைக்கு தினசரி அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சாவூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, தேனி, நாகர்கோவில், ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் தேங்காய் வரும்,

    இப்போது கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது.

    ஒரு லாரிக்கு 10 டன் வீதம் தினசரி 60 லாரிகளில் தேங்காய் வருவது நின்று விட்டது. இதனால் தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.

    அதேபோல் இளநீர் விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் 40 வருடத்து மரம் ஆகும். இனி மேல் மரம் வைத்தால் 7 ஆண்டுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும்.

    இதுவரை காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்ற ஊர்களுக்கு தேங்காய் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி அவர்களின் தேவைக்கு மற்ற ஊர்களில் இருந்து தேங்காய் அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கஜா புயலில் சாய்ந்து கீழே முறிந்து கிடக்கும் மரங்களில் இருந்து தேங்காய் பறித்து இப்போது அனுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு இதுவும் நின்று விடும். அப்போது தேங்காய் விலை மேலும் உயரும்.

    இவ்வாறு வியாபாரி ராமசாமி கூறினார்.  #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் 60 லட்சம் தென்னைகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் தென்னையை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    தஞ்சாவூர்:

    கஜா புயல் கடந்த 16-ந் தேதி 110 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

    இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த காற்றினாலும், மழையினாலும் பாதிப்புக்குள்ளாகின. இதில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஏராளமானோர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வாழை, நெல், கரும்பு, வெற்றிலை கொடிகள், தென்னை போன்ற அனைத்தையும் கஜா புயல் சூறையாடி சென்றது.

    மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் அந்த பகுதிகளில் குடிதண்ணீருக்கு வழியில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் காலி குடங்களை எடுத்து கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

    மேலும் புயல் கரையை கடந்து 7 நாட்கள் ஆகியும் முகாம்களிலேயே உள்ளனர்.

    தற்போது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று மின்சாரம், குடிநீர் ஆகியவை ஆகும். இதனால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி வருகின்றனர்.

    மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இதற்காக அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலைமறியல் செய்தும் தங்கள் எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீட்டு தொகை மாநில அரசு அறிவித்துள்ளது. நெல் பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். இந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய செலவில் 40 முதல் 50 வரை மானியம் வழங்கப்படும்.

    முந்திரி பயிர்களுக்கு ரூ.18 ஆயிரமும், தென்னை ஹெக்டேருக்கு ரூ.2.64 லட்சமும், படகு வலைகளுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் மட்டும் கஜா புயலால் 2 கோடி தென்னை மரங்கள் சேதமாகி உள்ளன. இதில் 60 லட்சம் தென்னைகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் தென்னையை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். தென்னை விவசாயிகளின் வாழ்க்கை தற்போது 15 ஆண்டுகளுக்கு பின்னுக்கு சென்று விட்டது.

    தங்களது வாழ்வாதாரமே போய் விட்டதே என்று கண்ணீரில் விட்டு கதறி வருகின்றனர்.

    நாகை, திருவாரூர், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஒரத்தநாடு, திருவோணம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 7 லட்சம் தென்னை விவசாயிகள் மிகவும் வேதனையில் இருந்து வருகின்றனர்.

    ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன்  - வைராம்பாள் - லோகநாதன்


    இதுகுறித்து பட்டுக் கோட்டை அடுத்த பழவேரிக்காடு சிவிக்காடு பகுதியை சேர்ந்த வைராம்பாள் கூறியதாவது:-

    நான் 7 ஏக்கரில் 500 தென்னை மரங்களை பிள்ளை போல் வளர்ந்து வந்தேன். எனக்கு 65 வயதான நிலையில் கால்கள் நடக்க முடியாத நிலையில் தென்னைகளுக்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சு வளர்ந்தேன். தென்னை மட்டை கீற்றுகளை பின்னியும் தேங்காய்களை விற்றும் பிழைத்து வந்தேன். ஆனால் கஜா புயலால் எனது வாழ்க்கை அடியோடு போய் விட்டது. தென்னைகளை இழந்து நிர்கதியாய் தவித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன் கூறியதாவது:-

    தஞ்சையில் நான் வசித்து வந்தாலும் எனது சொந்த கிராமமான ஆவிக்கோட்டையில் 16 ஏக்கர் நிலத்தில் 1200 தென்னை மரங்களுடன் தோப்பை பராமரித்து வருகிறேன். விவசாயம் மீது கொண்ட பற்றால் தென்னந்தோப்பை கவனித்து வந்தேன்.

    கஜா புயலால் இன்று அனைத்தையும் இழந்து விட்டேன். எனது வாழ்க்கை கனவுகள் சிதைந்து விட்டது, கானல்நீராக போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் 1500 தென்னை மரங்கள், 300 தேக்கு மரங்கள், 2000 வாழைகள், 25 மாமரம் ஆகியவை வளர்ந்து வந்தேன்.

    ஒரே நாள் இரவில் வீசிய புயலால் நிலைகுலைந்து போய் விட்டோம். இப்போது நானும் எனது குடும்பமும் தவித்து வருகிறோம். அரசு சார்பில் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று திருவையாறு தென்னை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார். #CycloneGaja #CoconutTree
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தென்னந்தோப்புகளும்தான் நம்மை வரவேற்கும். இந்த பகுதி மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் திகழ்ந்து வந்தது.

    இந்த நிலையில் ‘கஜா’ புயல் இந்த பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கிலான தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. வானில் நிமிர்ந்து நின்ற தென்னை மரங்கள் அனைத்தும் தற்போது நிலத்தில் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பெரும்பாலான தோப்புகள் மொட்டையாக காட்சி அளிக்கின்றன. ஒரு சில தோப்புகளில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

    வாழையடி, வாழையாக தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வந்த தென்னம்பிள்ளைகளை பறிகொடுத்த தென்னை விவசாயிகள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர். அன்றாடம் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கண்ணும், கருத்துமாக கவனிப்பதுபோல் தாங்கள் பெறாத பிள்ளைகளான தென்னம்பிள்ளைகளையும் கவனித்து வந்தனர்.

    இந்தநிலையில் தென்னை மரங்களை பறிகொடுத்த தென்னை விவசாயிகள் சிலர், இனிமேலும் தாங்கள் வாழ வேண்டுமா என்று யோசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாகி விட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற ஏதாவது வழி கிடைக்குமா? கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    புயலால் சாய்ந்த தென்னை மரங்களை நிமிர்த்தி நடும்போது அவை மீண்டும் புத்துயிர் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. 3 வயது முதல் 5 வயது வரை உள்ள தென்னை மரங்களில் 100 வேர்கள் இருந்தால் போதும். அவற்றை பொக்லின் எந்திரம் மூலம் 70 டிகிரி கோணத்தில் அதாவது சற்று சாய்வாக தூக்கி நிறுத்தி, மண் நிரப்ப வேண்டும். அத்துடன் மரங்களின் சாய்வான பகுதியில் மூங்கில் குச்சிகள், சவுக்கு குச்சிகள், கருங்கல் கொண்டு முட்டுக்கொடுக்கலாம்.

    முன்னதாக தென்னை மரங்களில் உள்ள தேங்காய்கள், மட்டைகள், இளநீர் உள்ளிட்டவற்றை வெட்டி எடையை குறைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்தால் 50 முதல் 60 நாட்களில் புது வேர் வந்து விடும். அதன் பிறகு அடுத்தடுத்த அறுவடைகளில் தேங்காய் மகசூல் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.



    பொதுவாக தென்னை மரங்களில் 5,500 வேர்கள் இருக்கும். பெரிய மரங்கள் என்றால் 6,500 வேர்கள் வரை இருக்கும். சாய்ந்த மரங்களை செங்குத்தாக நடக்கூடாது. செங்குத்தாக நட்டால் வேர்கள் மண்ணில் இருந்து முற்றிலுமாக பிடுங்கி விடுவதற்கு வாய்ப்பு உண்டு. புயல் காற்றில் மட்டை ஒடிந்த மரங்கள் நிறைய உள்ளன. இவற்றை காயமடைந்த மரங்கள் என கூறலாம். இந்த காயத்துக்கு மருந்து “வி.எஸ். மிக்ஸ் பவுடர்”. இந்த மருந்தை கலந்து மரத்தின் குருத்து மீது தெளித்தால், வண்டுகள் தாக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #CoconutTree
    ×