search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child game"

    • குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.
    • குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை.

    குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள். பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

    முதல் மூன்று மாதங்கள் : முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான்.

    உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

    மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை : இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான். இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து. காற்றடித்த வண்ண பொம்மைகள்.

    ஓராண்டு வரை : இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும் மேலும் இப்பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான். இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான்.

    அவர்களை கவரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள்... சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக்கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

    ஒன்று முதல் இரண்டு வயது வரை : இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக். பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி.யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும். இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதேவேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.

    • உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும்.
    • பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    * பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

    * ஆண் குழந்தைகள் பார் என்று சொல்லப்படுகிற ஹேங்கிங் செய்யலாம். இது உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

    * கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம்.

    * அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அதிக தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    * சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி செய்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்...

    * நேராக நின்று கொண்டு பின் குனிந்து கால் பெருவிரல் தொடும் பயிற்சி உதவும். இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

    குழந்தைகளை வெயிலில் விளையாட செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். கால்சியம் நிறைந்த உணவு பொருள்களை உடல் எடுத்துகொண்டாலும் அதை உடல் உறிஞ்சுகொள்ள வைட்டமின் டியின் உதவி தேவை.

    எதுவாக இருந்தாலும் உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும். இதெல்லாம் ஒரு முயற்சிக்காக.

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    • குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் அளவுக்கு இடவசதியும் இல்லை.
    • வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி மொபைல் போன் மற்றும் கணினியில் தன்னந்தனியாக விளையாடுகின்றனர்.

    பாரம்பரியமான விஷயங்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் நாள் 'உலக பாரம்பரிய தினம்' கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில், பாரம்பரிய சிறப்புமிக்க நமது விளையாட்டுகளை அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது முக்கியமானது.

    சில தலைமுறைகள் முன்பு வரை, அருகருகே உள்ள வீடுகளில் வசித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஒன்றாக விளையாடினர். வீட்டின் திண்ணைகளும், தெருக்களும் அவர்களின் விளையாட்டு இடங்களாக அமைந்தன. விளையாட்டு அவர்களுக்கு ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, குழு உணர்வு, விடாமுயற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது. உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் வளர்ந்தனர்.

    தற்போதைய காலத்தில், அடுத்த வீட்டில் இருக்கும் நபர்களையே அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைமுறை மாறி இருக்கிறது. குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் அளவுக்கு இடவசதியும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி மொபைல் போன் மற்றும் கணினியில் தன்னந்தனியாக விளையாடுகின்றனர்.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள் குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கண் பார்வை பாதிப்பு, உடல் உழைப்பு இல்லாமை, பசியின்மை, அதீத கோவம், குணாதிசய சிக்கல்கள் என ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது மூளையின் எல்லா பகுதியும் சமமாக வேலை செய்யும். உதாரணத்துக்கு, 'பல்லாங்குழி' விளையாட்டு கணிதத் திறனை வளர்க்கும். சிறு கற்களைக் கொண்டு விளையாடும் 'சுங்கரக்காய்' விளையாட்டு கண் மற்றும் கைகளின் செயல்திறனை மேம்படுத்தும். 'கோலி குண்டு' விளையாட்டு, கண் பார்வையை கூர்மையாக்கவும், மணிக்கட்டு நரம்புகள் புத்துயிர் பெறவும் உதவும். 'உறியடி' போன்ற விளையாட்டுகள், மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும். குழந்தைகள் கூடி விளையாடும் 'சொப்புச்சாமான்' விளையாட்டுகள் ஒற்றுமை உணர்வு, சிக்கனம், சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பண்புகளை அவர்களிடம் வளர்க்க உதவும்.

    களிமண் கொண்டு சிற்பங்கள் போன்ற கலைப்படைப்புகளை தயாரிக்கையில் குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். 'பாண்டி ஆட்டம்' கால்களின் செயல்திறனை மேம்படுத்தும். பம்பரம் விளையாடுகையில் நுண்திறன் மேம்படும். பச்ச குதிரை தாண்டும் விளையாட்டில் சிறந்தவர்கள் நீளம் தாண்டுதல் - உயரம் தாண்டுதலில் சாதிக்கலாம். ஆடுபுலி ஆட்டம் விளையாடுவோர், ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கலாம். ஓடி ஆடி விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளை மனதளவில் உற்சாகப்படுத்தும்.

    உடல் பருமன் அடைவதைத் தடுக்கும். பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆழ்ந்து தூங்கச் செய்யும். குழுவாக இணைந்து விளையாடுகையில், நட்புணர்வு பலப்படும். குழந்தைகளிடம் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் அதேசமயம், சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, 'கபடி' போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். கண்ணாமூச்சி விளையாடுகையில், குழந்தைகள் ஆபத்தான இடங்களில் ஒளிந்துகொள்வதைத் தடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும்போது யாரேனும் பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிப்பது நல்லது.

    • குழந்தைகள் பொம்மைகளுடன் பேசுவார்கள், சிரிப்பார்கள்,
    • குழந்தைககளின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை.

    குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் வெறும் தோழர்கள் மட்டும் அல்ல. பொம்மைகளை தம்பியாகவும், தங்கையாகவும், ஹீரோவாகவும், வில்லனாகவும் கருதுவர். அந்த பொம்மைகளுடன் பேசுவார்கள், சிரிப்பார்கள், விளையாடுவார்கள், உணவூட்டி மகிழ்வார்கள், தூங்குவார்கள், குளிப்பாட்டுவார்கள், அழகுபடுத்துவார்கள் மற்றும் சண்டை போடுவார்கள். நீங்கள் வாங்கிக்கொடுக்கும் பொம்மைகளை சுற்றியே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சுழலும். முழுநேரமும் இந்த பொம்மைகளையே குழந்தைகள் கையாளுவதால், அவர்களின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை. அதுபற்றி அலசுகிறது, இந்த கட்டுரை...

    * பொம்மை வகைகள்

    நூல் இழை வகை பொம்மைகள், மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், மண் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், சிலிக்கான் பொம்மைகள்... இப்படி நிறைய பொருட்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, பொம்மை தேர்வில் கவனம் செலுத்தி, தரமான பொம்மைகளை வாங்க வேண்டும்.

    * வயதும், பொம்மைத் தேர்வும்

    3 மாத குழந்தைகளுக்கு வண்ணமயமான, சுழலக்கூடிய, இசை எழுப்பும் பொம்மைகளை வாங்கிக்கொடுக்கலாம். இக்காலங்களில் அவர்களின் தொட்டிலின் மேல் இந்த பொம்மை சுழன்று கொண்டே இருக்கும். அவர்கள் அழுதாலும், இந்த பொம்மைகளை கொண்டு விளையாட்டு காட்டி, அவர்களை சமாதானப்படுத்தலாம்.

    3 முதல் 6 மாத குழந்தைகள் குப்புறப்படுத்துக்கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனிப்பார்கள். ஆதலால் அவர்களுக்கு ஒலி எழுப்பிக் கொண்டு நகரும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கைகளைத் தட்டி ஒலி எழுப்பக் கூடிய பொம்மைகளையும், கையால் பிடிக்க முடிகிற மென்மையான பொம்மைகளையும் வாங்கலாம்.

    6 முதல் 9 மாதங்களில் குழந்தைகள் தவழவும், உட்காரவும் முயற்சிப்பார்கள். அவர்கள் எழுந்து நிற்கவும் முயற்சி எடுப்பார்கள். இக்கால அப்போது அவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எடுப்பது, தள்ளுவது மற்றும் எறிவது போன்ற செயல்களைச் செய்வார்கள். எனவே நகரும் பொம்மைகளை வாங்கித் தரலாம். பலவண்ண விளக்கு கொண்ட கார், பஸ், ரெயில், ஆட்டம் போடும் கோழி, நாய், பூனை போன்ற பொம்மைகளையும் வாங்கலாம். இவை நகரும்போது அதை பிடிக்க, அவர்களும் நகருவதால், எளிதாக நடை பயில உதவும். இந்த பொம்மைகள் அவர்களின் வாயில் நுழையாத அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    9 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டு பொருட்களை கொடுக்கலாம். அதேபோல, சிறிய சைக்கிள் அல்லது சிறிய கார் வாங்கிக்கொடுக்கலாம். அப்போது அவர் கள்வண்டியோட்டவும் ஆரம்பித்து இருப்பார்கள்.

    ஒரு வயதிற்கு மேலான குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கவும். பால், பேட் மற்றும் பிளாக்ஸ் அடுக்கும் பொம்மை வகைகளை கொடுப்பது நல்லது.

    * எந்த பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்?

    சில பொம்மைகளில் ஸ்க்ரூ (திருகு ஆணி), சின்ன பேட்டரிகள், மணிகள் போன்றவை இருக்கும். ஆதலால், சிறு குழந்தைகளுக்கு அது போன்ற பொம்மைகளை வாங்கித் தருவதை தவிர்க்கலாம். குழந்தைகள் அவற்றை விழுங்கிவிட வாய்ப்பு உண்டு. காயம் ஏற்படுத்தக்கூடிய கூர்மையான பொம்மைகளை தவிர்க்கவும்.

    ஆரம்பத்தில், நூல் இழை பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த வகை பொம்மைகள், சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒரு வயதிற்கு மேல் சைக்கிள் அல்லது கார் வாங்கித் தரும் முன், தன் குழந்தைகளால் உண்மையிலேயே இந்த வாகனங்களை கையாள முடிகிறதா என்பதை பரிசோதித்துவிட்டு, அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள். 6 வயது வரை ரப்பர் பொம்மைகளை வாங்கி தர வேண்டாம். பலூன்களையும் தவிர்க்கவும். அதிக எடையுள்ளது, கயிறு இருப்பது போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    9 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுபொருட்களை கொடுக்கலாம். அதேபோல, சிறிய சைக்கிள் அல்லது சிறிய கார் வாங்கிக்கொடுக்கலாம்.

    • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும்.
    • குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும்.

    தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம் வீடியோக்கள் வடிவில் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் ஓரிடத்தில் முடங்கியபடியே குழந்தைகள் வீடியோ கேம்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதில் இருந்து மீள வைப்பதற்கு உடல் ரீதியான விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடவைப்பதுதான் ஒரே வழி. குழந்தை பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை விதைப்பதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம். அதற்கு விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.

    1. மன - உடல் ஆரோக்கியம்:

    உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு உதவும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சரியான பாதையில் செல்வதற்கு வழி நடத்தும். குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். உடல் பருமன் பிரச்சினையில் இருந்தும் விலக்கி வைக்கும். உடல் சம நிலையை பேணவும் உதவும். மன ரீதியாக தோல்விகளை எவ்வாறு கையாள்வது என் பதையும் கற்றுக்கொடுக்கும். மன அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

    2. குழு செயல்பாடு:

    கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவது குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிய உதவும். ஒவ்வொரு வீரரையும் மதிக்கவும், மரியாதை யுடன் நடத்தவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் கற்றுக்கொடுக்கும். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின்பு அலுவலக பணியில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்க்கவும் உதவும்.

    3. ஒழுக்கத்தை கற்றுத்தரும்:

    குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும். அதிகாலையில் பயிற்சி செய்வதற்கு சீக்கிரமாக எழும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும். உணவு விஷயத்தில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வைக்கும். துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடும் வழக்கம் இயல்பாகவே ஏற்படும். மனரீதியாக வலிமையாக செயல்படுவதற்கும் விளையாட்டு வழிகாட்டும்.

    4. சமூக செயல்பாடு:

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் ஆர்வத்தை குறைத்துவிடுகிறது. நண்பர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மறக்கடித்துவிடுகிறது. நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து விளையாடும்போது தகவல் தொடர்பு திறன் வலுப்படும். சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதற்கும் வித்திடும்.

    5. சுயமரியாதை:

    குழந்தைகளிடத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க விளையாட்டு உதவும். போட்டியில் வெற்றி பெறுவது அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடிப்பது அவர்களின் தனித்திறன்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். பயிற்சியாளரின் ஊக்கமும், சக வீரர்களின் பாராட்டும் சுயமரியாதையை வளர்க்க உதவும். எனவே, குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி விளையாட விடுங்கள். அவர்கள் வளரட்டும்!

    • மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனுக்காக ரூ.3 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த விளையாட்டு பூங்கா பாதுகாப்பான பிசியோ தெரபி மையமாக செயல்படுவதுதான் சிறப்பம்சம்.

    பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும் பூங்காக்கள் முதல் தெரு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பூங்காக்கள் வரை எல்லாவிதமான பூங்காக்களிலும் குழந்தைகளை கவரும் அம்சங்கள் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். அதிலும் குழந்தைகள் விளையாடுவதற்கென்றே பிரத்யேக பகுதி அமைக்கப்பட்டிருக்கும்.

    அங்கு ஊஞ்சல் முதல் சீசா வரை விதவிதமான விளையாட்டு சாதனங்கள் இடம் பிடித்திருக்கும். ஆனாலும் அவற்றை எல்லா குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகள், மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு சவுகரியமான அம்சங்கள் அதில் இருக்காது. அந்த குறையை போக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் முதல் முறையாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தை களுக்கான பிரத்யேக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    நகரின் மைய பகுதியில் பசுமையான மரங்கள் சூழ்ந்த அடர் வனமாக காட்சி அளிக்கும் கப்பன் பூங்காவில் சிறப்பு திறன், மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனுக்காக ரூ.3 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பூங்கா பாதுகாப்பான பிசியோ தெரபி மையமாக செயல்படுவதுதான் சிறப்பம்சம். பல்வேறு வகையான குறைபாடு கொண்ட குழந்தைகள் இங்கு மகிழ்ச்சியாக விளையாடி பொழுதை போக்கலாம். அவர்களின் உடல் நலன் மட்டுமின்றி மன நலனையும் மீட்டெடுக்கும் வண்ணம் இங்குள்ள விளையாட்டு சாதனங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

    குழந்தைகள் தங்களின் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத்துடன் தங்களை ஒன்றிணைக்கும் திறன் உள்ளிட்ட பன்முக அனுபவங்களை பெறலாம். ஆமை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா உடல், மனம் சார்ந்த தெரபி சிகிச்சைகள், ஓய்வு, தொடுதல் மற்றும் உணரும் செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

    இந்த விளையாட்டு பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரிகள் கூறியதாவது, ''மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சிறு முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த பிரத்யேக பூங்கா அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், தங்களை சுற்றியுள்ள உலகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கும்.

    அவர்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், விளையாட்டு சாதனங்களை பக்குவமாக கையாளும் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டும். சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் குழந்தைப் பருவத்தை பாதுகாப்பான சூழலில் அனுபவிக்க உதவும். பூங்காவில் செலவிடும் நேரம் சிறப்புக் குழந்தை களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நகர மக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்து திறனாளிகளும் பயன்படுத்தினால் மட்டுமே அவை வெற்றி பெறும். இந்த பூங்கா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவும். விளையாடுவது, அங்குள்ள சூழலை ஆராய்வது, நட்பை வளர்ப்பது போன்றவற்றை அனுபவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும். அவர்களை சுற்றியுள்ளவர்கள் புதிய கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கும் வழிவகை செய்யும்'' என்கிறார்கள்.

    • விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
    • வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும்.

    தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    • வீடியோ கேம் விளையாடுவதை திடீரென மொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம்.
    • வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன.

    கடந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்பட ஆரம்பித்தனர். காலச்சூழல் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வீடியோ கேம்சுக்கு அடிமையாகி விட்டனர்.நேரத்தை போக்குவதற்கும், மனசை ரிலாக்ஸ் செய்வதற்குமான பொழுதுபோக்குதான் இது. ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அச்சப்பட வைக்கின்றன.

    வீடியோ கேம் விளையாடும்போது பெரும்பாலும் அதிக அசைவுகள் இன்றித்தான் உட்கார்ந்திருப்போம். கூடவே, நொறுக்குத் தீனிகள், துரித உணவு, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் என தவறான உணவுப் பழக்கமும் ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏதாவது ஒன்றைத் தினமும் சராசரியாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உபயோகப்படுத்துகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் சுடுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். இதன் தாக்கத்தால் சிலர் சரியாகத் தூங்குவதில்லை. அப்படியே தாமதமாக இரவில் தூங்கினாலும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற கனவு வருவதாக கூறுகின்றனர். இத்தகைய உளவியல் ரீதியான சிக்கல்கள் பின்னாளில் பல பாதிப்புகளை உருவாக்கும்.

    வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை திடீரெனமொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

    நீங்கள்தான் உங்கள் குழந்தையின் ரோல்மாடல். ஆகவே, நீங்கள் முதலில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

    உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

    சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கூடுமானவரை வீட்டிலேயே தயார்செய்து கொடுக்க வேண்டும்.

    சாப்பிடும்போது டி.வி., வீடியோ கேம், செல்போன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

    டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

    வெளியே சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடை குறைவதற்கு மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
    இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.

    தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

    நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.

    இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.



    இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.

    ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

    அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
    இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

    இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

    செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

    பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

    முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா...நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.



    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல...கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

    இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

    அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

    அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல... ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

    -முக்கூடற்பாசன். 
    ×