search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Metro"

    • தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு.
    • இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வர். இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

    அதன்படி, ஆயுத பூஜை தினமான 23.10.2023 (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை தினமான 24.10.2023 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 20.10.2023 மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) என இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

    இதனிடையே போட்டி காரணமாக சென்னையில் நாளை (அக்டோபர் 13) மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
    • கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக இன்று காலை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

    பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

    கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர் சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ் டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.

    கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போர் சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். #ChennaiMetro #CMRL
    சென்னை:

    சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மின்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு - அசோக்நகர் இடையே மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோளாறை சரிசெய்யும் பணிகள் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் குறைந்த வேகத்துடன் ஒரு பாதையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.



    முன்னதாக சிக்னல் காரணமாக நேற்றும் மெட்ரா ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiMetro #CMRL

    மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை நெரிசல் நேரங்களில் இருமடங்கு அதிகரித்து உள்ளது. விமான நிலையத்துக்கு அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    நெரிசல் நேரங்களில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக இருமடங்கு அதிகரித்து உள்ளது.

    மேலும் புதிய 6 சுரங்க ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது 26 ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் செல்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் அனைத்து வழித்தடங்களிலும் சராசரியாக 80 சதவீதம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்து வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயிலில் தினமும் 55 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். நெரிசல் நேரங்களான காலை 8 மணி முதல் 10 மணி வரைக்கும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரைக்கும் விமான நிலையம், திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் சராசரியாக பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. நெரிசல் நேரங்களில் கூடுதலாக 5 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


    தற்போது 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு தயாரான மெட்ரோ ரெயிலில் தினமும் 5 லட்சம் பேர் பயணம் செய்ய வைப்பது மெட்ரோ ரெயில் திட்டத்தின் இலக்கு ஆகும். முதல்கட்ட திட்ட பணியில் 45 கிலோ மீட்டர் தூர வழித்தட பணிகள் நிறைவடைந்ததும் 7.76 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள்.

    விமான நிலையத்துக்கு எளிதில் செல்ல விமான பயணிகள் பெரும்பாலானோர் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள்.

    மாலை நேரங்களில் உள் நாடு, வெளிநாடுகளுக்கு அதிகப்படியான விமானங்கள் சென்று வருகின்றன. விமான பயணிகளுக்கு விமானங்களை பிடிக்க மெட்ரோ ரெயில் பயணம் எளிதாக அமைகின்றது.

    விமான நிலையத்துக்கு நேரடியாக விமான பயணிகள் செல்ல மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘வால்கலேட்டர்’ (நடைபாதை) பெரிதும் பயன்படுகிறது.

    மெட்ரோ ரெயில் சேவையை கல்லூரி, அலுவலகம் செல்வோருக்கு நெரிசல் நேரங்களில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #ChennaiMetro
    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 25-ம் தேதி முதல் வழங்கப்பட்ட இலவச சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, நாளையும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் சென்டிரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்கள் கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, மூன்று நாட்களுக்கு சென்டிரல் - விமான நிலையம், டிஎம்எஸ் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் பொதுமக்கல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    நேற்றுடன் லட்சக்கணக்கான மக்கள் இலவசமாக பயணித்த நிலையில், இன்றும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் வரவேற்பை அடுத்து நாளையும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetro 
    சென்னை சென்ட்ரல் - நேருபூங்கா, சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetro
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரெயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் - சின்னமலை மற்றும் பரங்கிமலை - நேருபூங்கா ஆகிய வழித்தடங்களில் தற்போது ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேருபூங்கா - சென்டிரல், சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த புதிய வழித்தடத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில் சேவை தொடங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரெயில் சேவையை தொடங்கி வைக்கின்றனர். 
    ஷெனாய்நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். #Metrotrain

    சென்னை:

    சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்து வந்த நிலையில் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து சேவை தொடங்கினால்தான் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்.

    தற்போது விமான நிலையம்- நேரு பூங்கா, விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே இரு வழியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே ஒரு வழியில்தான் சேவை உள்ளது. மற்றொரு பாதை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    அதேபோல நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே நடந்த ஒரு வழி சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த 2 வழித்தடங்களிலும் அனைத்து பணிகளும் நிறை வடைந்ததை தொடர்ந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி பெங்களூரில் இருந்து பாதுகாப்பு கமி ஷனர் கே.ஆர்.மனோகரன் தலைமையிலான குழுவினர் இன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

    ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆய்வு பணி தொடங்கியது.

    முன்னதாக பாதுகாப்பு கமி‌ஷனர் கே.ஆர்.மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே மற்றொரு வழித்தடம் தயாராகி உள்ளது. 4.3 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்த பாதையிலும், நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே ஒரு பாதையிலும் ஆய்வு பணி இன்றும், நாளையும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் உள்ள 7 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் 2 கட்டமாக ஆய்வு நடைபெறு கிறது.

    இதையடுத்து வருகிற 18 மற்றும் 19-ந்தேதியில் சின்னமலை- டி.எம்.எஸ். ஏ.ஜி. ஆபீஸ் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பணிகளும் நிறைவு அடைந்துள்ளதையொட்டி அங்கு ஆய்வு பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வின்போது பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது ஆராயப்படும். விபத்து காலத்தில் பயணிகள் வெளியே செல்ல வசதி, பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எதுவும் குறை உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தரப்படும். நாளை மாலைக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.

    போக்குவரத்து உள்ள நேரத்தில் டிராலி மூலமாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரெயிலை இயக்கியும் சோதனை நடத்தப்படும். பாதுகாப்பு சோதனை முடிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை கொடுத்து விடுவோம். இந்த ஆய்வின்போது குறைகள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே சேவை தொடங்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், சுரங்கப் பாதை பணிக்கான பொது மேலாளர் வி.கே.சிங், அதிகாரி நரசிம்மபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×