search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car fire"

    • காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது வேலை நிமித்தமாக காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென அவரது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்ததும் சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு அவருக்கு தெரிவித்தனர். உடனே காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் திருமண மண்டபம் அருகே நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது.
    • நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 52).

    இவர் இன்று அதிகாலை மோகனூருக்கு தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கியாஸ் நிரப்பி விட்டு இயக்க முயன்றபோது, கார் இயங்கவில்லை.

    இதனால் அவரது குடும்பத்தினர் காரை தள்ளிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து குபுகுபுவென தீப்பிடித்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ பரவியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரை அங்கு நிறுத்தி விட்டு, அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் தொலைவில் நின்று கொண்டு இது பற்றி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இருப்பினும் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை. வாகன ஓட்டிகள், தங்களது கார்களை சற்று தொலைவிலேயே நிறுத்திக் கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    போரூர்:

    சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு சாலையோரம் கார்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அங்கிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    இது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை.

    மதுரை:

    மதுரை புதூரைச் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து 11 மணி அளிவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து நிர்மல் குமார் சமயோஜிதமாக முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.

    இதற்கிடையே சொகுசு கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் கார் முற்றிலும் சேதமானது. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காட்டுமன்னார்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.

    வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.

    இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.

    கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    தேனி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கார் தீ பிடித்து எரிந்து நாசமானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே போடி மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனது மனைவி ஜெயந்தி, மகன்கள் தினேஷ், ரித்திஷ் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னமனூர் வழியாக கம்பம் சென்றனர். அப்போது சீலையம்பட்டி அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.

    அதில் இருந்து புகை வெளியானது. இதைபார்த்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர்.

    சிறிது நேரத்தில் கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருந்த போதும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்த 5 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கருங்கல் அருகே நள்ளிரவில் போலீஸ் ஏட்டின் காருக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவு அவர் தனது காரை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். மேலும் பிளாஸ்டிக் கவரால் அந்த காரை மூடி இருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸ் ஏட்டு வாசு தேவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ அந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    உடனே பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. இது பற்றி வாசுதேவனின் மகன் தீபன்ரஞ்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் எரிந்தது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திண்டுக்கல்லில் திடீரென நடுரோட்டில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் சக்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இன்று காலை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆர்த்திதியேட்டர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்தது.

    சிறிதுநேரத்தில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காரை நடுரோட்டில் நிறுத்தி இறங்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். மேலும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அருவங்காட்டை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் சின்னபிக்கட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கு சொந்தமான காரை ஓட்டிச் சென்றார்.

    கார் ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு உடனடியாக வெளியேறினார்.

    கண்இமைக்கும் நேரத்தில் கார் தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிந்தது. கரும்புகை வந்த உடனே நந்தகுமார் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கேத்தி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து காரை நடுரோட்டில் இருந்து அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெட்டேரி மேம்பாலம் அருகே இன்று காலை கார் தீப்பிடித்து எரிந்ததில் என்ஜினீயர் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாதவரம்:

    சென்னை வடபழனி குமரன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, சாப்ட்வேர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் தனது காரில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை ரெட்டேரி மேம்பாலம் அருகே கார் வந்தது. அப்போது அங்கு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

    காரில் வேகமாக வந்த தட்சிணாமூர்த்தி தடுப்புகள் இருப்பதை அருகில் வந்த போதுதான் கவனித்தார். இதனால் காரை திருப்பிய போது தடுப்பு மீது மோதி தாறுமாறாக ஓடி பிளாட் பாரத்தில் ஏறி நின்றது.

    மோதிய வேகத்தில் கார் என்ஜினில் தீப்பிடித்து பரவியது. இதனால் தட்சிணாமூர்த்தி வெளியே வர முடியவில்லை. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்க முயற்சித்தனர். ஆனால் கார் கதவுகளை திறக்க முடியவில்லை. அதற்குள் தீ கார் முழுவதும் பரவி தட்சிணாமூர்த்தி கருகி அலறினார். இது குறித்து செம்பியம் தீயணைப்பு நிலையத்துக்குக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். கார் கதவை திறந்து பார்த்த போது தட்சிணாமூர்த்தி கருகி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சிணாமூர்த்தி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    ×