search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brothers drowned"

    திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன் - தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருடைய மனைவி முருகவேணி (30). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் திண்டிவனம் அருகே உள்ள ஆரணியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

    2-வது மகன் பிரசாந்த் (11). இவர் ஆவனிப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். 3-வது மகன் பிரதாப் (9). சேந்தமங்கலம் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் குமார் சென்னையில் தங்கி கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் முருகவேணி தன் மகன்களான பிரசாந்த் மற்றும் பிரதாப் ஆகியோருடன் சேந்தமங்கலத்தில் வசித்து வருகிறார்.

    முருகவேணி வயல்வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் நேற்று வழக்கம் போல் வயல்வேலைக்கு சென்றார். அப்போது தன்னுடைய 2 மகன்களையும் அழைத்து கொண்டு சென்றார்.

    வயலுக்கு சென்ற பின் மாடுகளை பார்த்து கொள்ளுங்கள் என்று மகன்களிடம் கூறிவிட்டு வயலில் இறங்கி வேலை செய்வதற்கு முருகவேணி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் வேலை முடிந்து திரும்பி வந்தபோது பிரசாந்த் மற்றும் பிரதாப் ஆகியோரை காணவில்லை. மாடுகள் மட்டும் தனியாக மேய்ந்து கொண்டிருந்தது. இதை பார்த்து முருகவேணி அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கணவர் குமாருக்கு தகவல் கொடுத்தார். குமாரும் சேந்தமங்கலம் விரைந்து வந்து மனைவியுடன் சேர்ந்து மகன்களை தேடி பார்த்தார்.

    ஆனால் 2 பேரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து ஒலக்கூர் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் அண்ணன் தம்பியான பிரசாந்த், பிரதாப் ஆகியோர் பிணமாக மிதந்தனர்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து குமாருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் ஏரியில் இருந்து மீட்டனர்.

    மேலும் குமாரும், முருகவேணியும் மகன்கள் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். ஒரே சமயத்தில் 2 மகன்களையும் பறிகொடுத்து விட்டேனே என்று கண்ணீர் விட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதைத் தொடர்ந்து பிரசாந்த் மற்றும் பிரதாப் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஏரியில் குளிக்க சென்றபோது 2 பேரும் கால் தவறி உள்ளே விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரியில் மூழ்கி அண்ணன் - தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×