search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby murder"

    கள்ளக்குறிச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து 2 வயது பெண் குழந்தையை தந்தை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்தில் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இந்த கிணற்றில் நேற்று மதியம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கீழ்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்த குழந்தை யாருடையது? குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருந்தலாகுறிச்சி பகுதியை சேர்ந்த அருள்மணி-அஞ்சலை தம்பதியரின் குழந்தை என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் கருந்தலாகுறிச்சியில் உள்ள அருள்மணி வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து அருள் மணி மற்றும் அவரது மனைவி அஞ்சலையை தேடி வந்தனர். இந்த நிலையில் அருள்மணி வீ.கிருஷ்ணாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த அருள்மணியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. போலீசாரிடம் அருள்மணி கூறியதாவது:-

    எனக்கும், திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டைபுதூரை சேர்ந்த அஞ்சலைக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் அனுசியா என்ற பெண் குழந்தை இருந்தது. திருமணம் ஆனதில் இருந்து என் மனைவி அஞ்சலையின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதனால் எங்களுக்கிடையே பலமுறை தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னுடன் அஞ்சலை கோபித்து கொண்டு குழந்தையை தனியாக வீட்டில் விட்டு அவளது தாய் வீடான கோட்டைபுதூருக்கு சென்று விட்டாள்.

    இதையடுத்து அவளை வீட்டுக்கு அழைத்து வர நான் கோட்டைபுதூருக்கு சென்றேன். அங்கு அஞ்சலையிடம் சமாதானம் பேசினேன். ஆனால் அவள் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லி விட்டாள். என்னுடன் வர மறுத்து விட்டாள். இதனால் வீட்டுக்கு தனியாக வந்தேன். என் மனைவியின் நடத்தை சரியில்லாததால் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் இது எனக்கு பிறந்த குழந்தையாக இருக்காது என சந்தேகப்பட்டேன்.

    இதனால் மனைவியின் மீது உள்ள ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்துக்கு குழந்தையை தூக்கி சென்றேன். அங்குள்ள விவசாய கிணற்றில் குழந்தையை தூக்கி வீசினேன். இதில் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டது. பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டேன். ஆனால் போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அருள் மணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×