search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "artificial intelligence"

    • பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
    • செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

    "விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

    செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

    "செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

    ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

    பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

    • பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்று 65% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.

    சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைபயன்படுத்தி, பல துறைகளில் பல வேலைகளை துரிதமாகவும், திறம்படவும் செய்வது வழக்கமாகி வருவதுடன், செயற்கை நுண்ணறிவு வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

    கட்டுரைகளை எழுதுதல், மோசடியைக் கண்டறிதல், கற்பித்தல் மற்றும் மாசுபாட்டைக் கண்காணித்தல் ஆகியவை இதன் ஏராளமான பயன்பாடுகளில் அடங்கும்.

    இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, வேலைக்கான நேர்காணல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    வேலை தேடுபவர்களுக்கான பிரபல இணைய தளமான, "ரெஸ்யூம் பில்டர்" நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 43% நிறுவனங்கள், 2024ம் ஆண்டிற்குள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

    கணக்கெடுப்பின் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களிலும், 15% நிறுவனங்கள் தங்களின் அனைத்து பணியமர்த்தல் முடிவுகளுக்கும் "தொடக்கத்தில் இருந்து இறுதி வரை" (start-to-finish) இனி செயற்கை நுண்ணறிவின் பயன்படுத்தலை நாடப்போவதாக கூறியுள்ளன. 32% நிறுவனங்கள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளன.

    செயற்கை நுண்ணறிவு மூலமாக செய்யப்படும் நேர்காணல்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு கேட்டபோது, 65% பேர் பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்றும், 14% பேர் பணியமர்த்தல் திறனைக் குறைக்கும் என்றும், மற்றும் 21% பேர் இது செயல்பாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் நம்புகின்றனர்.

    ரெஸ்யூம் பில்டர் நடத்திய ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர். வேலைக்கு ஆட்களை நியமிக்கும் மேலாளர்கள் அல்லது ஆட்களை தேர்வு செய்யும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

    வேலை தேடுபவர்களில் 46% பேர் இப்போது தங்கள் பயோடேட்டா மற்றும் முகப்பு கடிதங்களை (covering letter) எழுதுவதற்கு தற்போது மிகவும் பிரபலமாகவுள்ள சாட்ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    மேலும், மிக அதிக சதவீதமாக (அதாவது 78% பேர்) வேலைக்கான விண்ணப்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உடனே பதிலை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    • வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும்.
    • இந்த தொழில் நுட்பத்தில் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக பெற முடியும்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் பெண் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ்.பி. தொடங்கி வைத்தார்

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி தானியங்கி சிக்னல்களை இயக்கி வைத்தார். அதன்படி தென்காசி- மதுரை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவிகள் செல்வதற்கு வசதியாக பாதசாரிகள் சிக்னல் மற்றும் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலை பகுதியில் இரு புறமும் சிக்னல்கள் இயக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறியதாவது:-

    இந்த சிக்னல்களில் தானியங்கி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் சிக்னலை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள், மூன்று பேருடன் செல்லும் வாகனங்களை சரி பார்த்து அபராதம் விதிப்பர்.

    போக்குவரத்து விதிமீறல்

    அது போல் காவல்துறை யினர் இல்லாமலேயே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கான அபராதத்தையும் குறுஞ்செய்தி யாக இத்தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.

    ஐடிஎம்எஸ். தொழில் நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி காமிராக்கள் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும். இதன் மூலம் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அது குறித்த எச்சரிக்கை செய்தியை காவல்துறைக்கு இந்த தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.

    இந்த தொழில் நுட்பம் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக காவல்துறையினர் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் 2 இடங்களில் இது போன்ற செயற்கை நுண்ணறியுடன் கூடிய தானியங்கி காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி காமிராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, தென்காசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கிருஷ்ணன், தொழிலதிபர்கள் அமானுல்லா, செல்வம், ரவிச்சந்திரன், பகதூர்ஷா, தானியங்கி சிக்னல் டெக்னிக்கல் பிரிவு என்ஜினீ யர்கள் அஜீஸ், ஜீவிதா, ராமலிங்கம் சண்முகம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm



    குவால்காம் நிறுவனம் புதிய வகை மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி என அழைக்கப்படுகின்றன.

    புதிய ஸ்னாப்டிராகன் மொபைல் பிராசஸர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கேமரா மற்றும் கேமிங் உள்ளிட்ட அம்சங்களில் அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்னாப்டிராகன் 665 மற்றும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்கள் அதிகளவு பயன்பாட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. 



    ஸ்னாப்டிராகன் 730ஜி கேமிங் வசதியை வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 770 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவற்றில் ஏ.ஐ. வசதி குவால்காம் ஏ.ஐ. என்ஜின் வேரியன்ட் மற்றும் ஹெக்சகன் வெக்டார் எக்ஸ்டென்ஷன்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பிராசஸர்களில் குவால்காம் நிறுவனம் மல்டி-கேமரா வசதி மற்றும் பல்வேறு இதர கேமரா ஆப்ஷன்களும் சேர்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவை ஏற்கனவே வணிக ரீதியில் தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய குவால்காம் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019 அரையாண்டு காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence



    கம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடி) விலைக்கு ஏலம் போனதாக பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டி அறிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.3.17 கோடி விலையில் ஏலம் போகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த முதல் போர்டிரெயிட் ஓவியம் எட்மான்ட் டி பெலாமி (Edmond De Belamy) என அழைக்கப்படுகிறது. இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்தவரின் போர்டிரெயிட் ஆகும். இந்த போர்டிரெயிட்டில் இருக்கும் நபர் கருப்பு வெள்ளை நிற சூட் அணிந்திருக்கும் படி, தங்க நிற ஃபிரேம் கொண்டுள்ளது.

    போர்டிரெயிட்டில் உள்ள முகம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கமான ஓவியங்களில் ஓவியரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த ஓவியத்தில் கணித கோட்பாடு அச்சிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Obvious

    ஆப்வியஸ் எனும் ஃபிரென்ச் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஓவியத்திற்கென பியரி ஃபாட்ரெல் மொத்தம் 15,000 போர்டிரெயிட்களை கம்ப்யூட்டர் மென்பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். 

    போர்டிரெயிட் வரைவதற்கான வழிமுறைகளை மென்பொருள் புரிந்து கொண்டால், அதுவாகவே போர்டிரெயிட் வரைய துவங்கிடும். இதற்கென கூகுள் ஆய்வாளரான குட்ஃபெல்லோ உருவாக்கிய புதிய அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது. இதனை பிரென்ச் குழுமம் பெலாமி ஃபேமிலி என அழைக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கிய ஓவியம் ஏலத்தில் 7000 முதல் 10,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெலாமி ஃபேமிலி உருவாக்கிய முதல் போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.
    சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஒரு வாரம் முன்னதாகவே கண்டறிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. #ArtificialIntelligence



    சென்னையில் 2015 டிசம்பர் கனமழையின் போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெருமளவு சேதத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. 

    இந்நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

    சென்னை வெள்ள அபாய அமைப்பு (C-Flows அல்லது Chennai Flood Warning System) என அழைக்கப்படும் புதிய வழிமுறையை கொண்டு வெள்ள அபாயங்களை அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிந்து கொள்ள முடியும். கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த வழிமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அதற்கு ஏற்றவாரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்து கொள்ள முடியும். எண்ணியல் அடிப்படையில் புவியியல் தகவல் முறைமை எனும் அமைப்பு மூலம் இயங்கும் இந்த வழிமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை பகுதி, தெரு மற்றும் குறிப்பிட்ட கட்டிடம் வரை மிகத்துல்லியமாக கணிப்பதோடு, அங்கிருந்து வெளியேறுவதற்கான வழியையும் காண்பிக்கும்.


    கோப்பு படம்

    இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு வானிலை, கடல் சீற்ற கணிப்பு உள்பட பல்வேறு இதர விவரங்களை கொண்டு வெள்ள பாதிப்புகளை கணிக்கின்றனர். தேவையான விவரங்களை வழங்கிய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கிவிடும். 

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பது குறித்த முடிவுகள் மேப்கள், எழுத்துக்கள் அல்லது நம்பர்கள் வடிவிலோ அல்லது 3D எனப்படும் முப்பறிமான முறையிலும் வழங்கப்படும். இதனால் வெள்ள பாதிப்பு சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

     "இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது, வரவிருக்கும் வடகிழக்கு பருவத்தில் இத்திட்டம் சோதனை செய்யப்படும்," என கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தின் தலைவர் எம்.வி. ரமனமூர்த்தி தெரிவித்தார்.
    நோயாளிகளுக்கு இதய நோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அப்பல்லோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. #microsoftai #ApolloHospitals


    உலக தொழில்நுட்ப சந்தையில் வெளிவரும் ஒவ்வொரு சிறுசிறு அறிவிப்பும் என்றோ ஒருநாள் மிகப்பெரும் மாற்றத்தையும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சிறு அறிவிப்புகள் இன்று பல்வேறு முக்கிய திருப்பங்களுக்கான செய்திகளாகி வருகின்றன. 

    செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி போன்ற சொற்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை நமக்கு புதிதாய் இருந்த நிலையில், இன்று நமது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சமீபத்திய திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் முக்கிய அங்கமாகியுள்ளன.
     


    இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து உடல்நலம் சார்ந்த ஏ.ஐ. நெட்வொர்க் எனும் திட்டத்தின் கீழ் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய மென்பொருள் இதயம் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியும். மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது. மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது. #microsoftai #ApolloHospitals
    கூகுள் டூப்லெக்ஸ் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் கால் சென்டர் மையங்களில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள்  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.

    மென்பொருளின் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருள் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    பெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருளை சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் பணியை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும். 

    கூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஃபேஸ்புக் கைப்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. (Bloomsbury AI) நிறுவனத்தை கைப்பற்றுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் ஃபேஸ்புக்கின் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை ஃபேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. ஃபேஸ்புக்கின் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது FAIR அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள், இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த பிரிவுக்கென ஃபேஸ்புக் அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது. இதை கொண்டு சமூக வலைத்தளம் மற்றும் அதன் இதர பண்புகளை மொத்தமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



    தற்சமயம் ஃபேஸ்புக் தரவுகளை கூர்ந்து கவனிக்க பல்வேறு பணியாளர்களை வெளிநாடுகளில் ஃபேஸ்புக் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த பணியாளர்கள் ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச தரவுகள் என பயனர்கள் குறிப்பிடும் தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்கின்றனர். மேலும் அவை ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறுகிறதா என்ற வகையிலும் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்காலத்தில் அல்காரிதம்களை பயன்படுத்த ஃபேஸ்புக் தி்ட்டமிட்டுள்ளது. எனினும், இதனை வெற்றிகரமாக செயல்படுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளும் மென்பொருளை ஃபேஸ்புக் கண்டறிய வேண்டும். இந்த மென்பொருள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதோடு மிகவும் சிக்கலான பிரச்சனைகளையும் கண்டறியும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
    கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கூகுள் அசிஸ்டண்ட் அப்டேட் இருந்தது.
    கலிஃபோர்னியா:

    கூகுளின் I/O 2018  நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கூகுள் அசிஸ்டண்ட் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்தது.

    டூப்லெக்ஸ் என அழைக்கப்படும் புதிய சேவை அறிமுகமானது முதல் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. விரைவில் டர்னிங் டெஸ்ட் தேர்ச்சி பெற இருக்கும் டூப்லெக்ஸ் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். டர்னிங் டெஸ்ட் என்பது இயந்திரங்கள் மனிதர்களுக்கு இணையாக அவர்களுடன் பேசும் திறனை பெற்றிருப்பதை சோதனை செய்வதாகும்.

    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்த டூப்லெக்ஸ் அம்சம் மருத்துவமனை, முடி திருத்தும் நிலையம் போன்ற இடங்களுக்கு உங்கள் சார்பில் அழைப்புகளை மேற்கொண்டு முன்பதிவுகளை உறுதி செய்யும் வசதியை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த அம்சம் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போன்றே கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.



    முன்பதிவுகளுக்கு நீங்கள் பேச வேண்டிய இடத்தில் உங்களுக்கு பதில் உங்களின் குரலாக செயற்கை நுண்ணறிவு அம்சம் இயங்குகிறது. மறுமுனையில் பேசுவோர் டூப்லெக்ஸ் தானாக அறிவிக்கும் வரை மனிதர்கள் தான் பேசுகின்றனர் என்று எண்ணும் வகையில் மிக நேர்த்தியாக இந்த அம்சம் வேலை செய்கிறது.

    கூகுள் I/O விழாவில் அறிமுகமானதும், இந்தளவு நேர்த்தியாக பேசும் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு சில சூழல்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்ற வகையில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் அம்சம் வழங்கப்படும் போது, அழைப்பை மேற்கொள்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் என்பதை டூப்லெக்ஸ் தெரியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    "கூகுள் டூப்லெக்ஸ் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று - தொழில்நுட்பத்தில் வெளிப்படத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் இயந்திரம் தான் பேசுகிறது என்பதை தெரியப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டு, அனைவரும் மிக எளிமையாக இதனை அறிந்து கொள்ளும் வகையில் இது இருக்கும். கூகுள் I/O 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது முதற்கட்ட டெமோ தான், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் முறையான பதில் வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்படும்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    இயந்திரங்கள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வரும் அப்டேட்களில் மனித குரலில் இருந்து இயந்திர குரல் முற்றிலும் வித்தியாசப்படுத்தப்படும் என்றும் டூப்லெக்ஸ் சிஸ்டம் மூலம் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் கூகுள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கூகுள் I/O 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட டூப்லெக்ஸ் அம்சம் துவக்க நிலையில் தான் இருக்கிறது. பெருமளவு அம்சங்கள் சேர்க்கப்பட்டும், மாற்றப்பட்டு முதற்கட்டமாக டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின் தான் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் வழங்கப்படும்.

    கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் கீநோட் வீடியோவை கீழே காணலாம்..,


    ×