search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aavin"

    • ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.
    • வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இருவர் மீதும் அவதூறாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது.
    • அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆவினில் உள்ள எந்தவொரு அலுவலகம், பண்ணைகளில் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. சிறுவர்கள் தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆவின் நிறுவன வளர்ச்சியில் குந்தகம் விளைவிக்கும் விதமாக இவ்வாறு வதந்தி பரப்பி வருகிறார்கள். வேலூர் ஆவினில் ஒரே எண்ணில் 2 வண்டிகள் இயங்கியதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த தவறுகளையும் செய்வதற்கு ஆவின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது.

    ஒரு தனிநபர் தன்னுடைய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு சில நபர்களை அழைத்து வந்துள்ளார். அந்த நபருக்கும் அவரை பணியமர்த்திய நிறுவனத்துக்கும் சம்பளம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது தவறான செய்தி என்பதையும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நானும் அதிகாரிகளும் அங்கு சென்று உடனடியாக விசாரணை மேற்கொண்டோம். எங்களுடைய விசாரணையிலும், அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    எனவே, இந்தத் திட்டமிட்ட செயல், ஆவினுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நிலையிலும், எங்களுடைய வளர்ச்சிக்கு ஒரு குந்தகம் விளைவிக்கின்ற விதத்திலும் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவதற்கான பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு எதிராக போராடுவது போன்று திட்டமிட்டு நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

    • வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

    ஆவின் அலுவலகத்தில் பால் திருட்டு அடிக்கடி அரங்கேறி வந்தது. இதனை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

    இதில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு அருகே உள்ள திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில் பால் திருடிச்செல்வது தெரியவந்தது.

    இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

    இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்ததில், ஆவினில் பால் திருட்டு தொடர் கதையாகி வருவது அம்பலமாகி உள்ளது.

    பால் திருட்டை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபோது வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    நேற்று அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது டி.என்.23 ஏ.சி. 1352 என்ற ஒரே எண்ணில் 2 வேன்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 2 வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் உடனடியாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவின் அலுவலகத்தில் இருந்த 2 வேன்களுக்கும் சீல் வைத்தனர்.

    தொடர்ந்து இன்று ஆவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வேன்களை ஆய்வு செய்தனர். இதில் பொய்யான பதிவெண் கொண்ட வேன் எது என்பது கண்டுபிடிக்கப்படும். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.

    வேலூர் ஆவினில் பால் அளவு குறைந்தபடியே இருந்தது. இதனால் அனைத்து பால் வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில் நேற்று வேலூர் ஆவினில் இருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்குவது தெரியவந்தது.

    இதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வரையில் பால் திருடியிருப்பதும். இப்படி பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது வட்டார போக்குவரத்து துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரே பதிவெண்ணில் இயங்கிய வாகனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணி அமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆவின் பால்பண்ணையில் பல மாதங்களாக வேலை வாங்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆவின் பால்பண்ணை முன் நேற்று போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆவின் நிறுவனமும் மறுக்கவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குத்தகைத் தொழிலாளர் முறை தான். ஒரு நிறுவனத்திற்கோ, ஓர் அலுவலகத்திற்கோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்பட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நேரடியாக நியமிக்காமல், மனிதவள நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட மனிதவள நிறுவனத்திற்கு வழங்குவது தான் குத்தகைத் தொழிலாளர் முறை. ஆவின் நிறுவனத்திலும் அப்படித்தான் பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை மனிதவள நிறுவனத்திடமிருந்து ஆவின் அம்பத்தூர் பால்பண்ணை பெற்றுள்ளது.

    மனிதவள நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பிய போதும், அதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களிடமிருந்து ஆவின் நிறுவனம் வேலைவாங்கி உள்ளது.

    குழந்தை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்கிய மனிதவள நிறுவனம், அதை உழைத்த குழந்தைகளுக்கு வழங்கவும் இல்லை; அதையும் ஆவின் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டும்.

    குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் சட்ட விரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    நாட்டின் நலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ‘ஆவின்’ நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது.
    • சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது.

    சென்னை:

    'ஆவின்' நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது. பால் உற்பத்தியாளர்கள், தனியார் மற்றும் அமுலுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதால், ஆவின் கொள்முதல் சுமார் 35 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக, பால் பவுடர், உப்பு கலந்த வெண்ணை, நெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது.

    சென்னை, அம்பத்துார் கிடங்கில் கையிருப்பில் உள்ள நெய், வெண்ணை மட்டுமே, ஆவின் நேரடி விற்பனை நிலையங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டு உள்ளன. இதனால், பல இடங்களில் நெய், வெண்ணை கிடைக்கவில்லை.

    • பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு பெற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

    அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.

    இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது.
    • தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் விவசாயத்து க்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது. இதுவரை அதே விலை தான் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.எனவே பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குகிறது. எனவே அரசு பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 12 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும்.

    கடந்த ஆண்டு வரை அமுல் மற்றும் வேறு மாநில மார்க்கெட்டிங் பெடரேசன்களில் இருந்து கலப்பு தீவனம், 50 கிலோ மூட்டையை 925 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மானியம் போக 725 ரூபாய்க்கு வினியோகிக்க ப்பட்டது.ஆவின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவன மூட்டை விலை 1,070 ரூபாயாகும். இதற்கு மானியம் போக 770 ரூபாய்க்கு வினியோகிக்கப்ப ட்டது. கடந்த ஆண்டு ஒன்றியங்களில் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலப்பு தீவன மானியமாக கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்கி 820 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

    ஆவின் ஒன்றியம், பிற மாநில கூட்டுறவு இணைய ங்களில் இருந்து பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கலப்புத்தீவன விலையை விட ஆவின் இணையத்தின் கலப்பு தீவன விலை கிலோவுக்கு 2.90 ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும்.ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத்தொ கையாக அந்தந்த ஆண்டு வழங்கிய பாலுக்கு லிட்டருக்கு 50 பைசா முதல் 1.50 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. ஆனால் கடந்த 7 ஆண்டு களாக ஊக்கத்தொகை வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் இணையம், மாவட்ட ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நுகர்வோருக்கு குறைத்து வழங்கிய 3 ரூபாயை மானியமாக வழங்க வேண்டும்.அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைக ளுக்கு ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் இணையம், ஆவின் மாவட்ட ஒன்றியங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல 1999 - 2000ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாட்ச் டாக் கமிட்டி அமைத்து இரு அனுபவம் வாய்ந்த நபர்களை நியமனம் செய்தனர்.அதே போன்று மீண்டும் கமிட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நகரின் முக்கிய இடங்களில் ஏசி வசதியுடன் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு ஆவின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஆவின் பாலகங்களில் அமர்ந்து சாப்பிடவும் டேபிள், மேஜை, சோபா போட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் பல்வேறு புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது.

    அந்த வகையில் நகரின் முக்கிய இடங்களில் ஏசி வசதியுடன் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு ஆவின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அங்கேயே அமர்ந்து சாப்பிடவும் டேபிள், மேஜை, சோபா போட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

    இப்போது சென்னையில் முக்கிய ஆவின் பாலகங்களில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் 'கேக்' வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் வாங்கினால் அந்த வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளிக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அம்பத்தூர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் 'கேக்' வாங்கி அதே வளாகத்தில் பிறந்தநாளை நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடலாம் என அறிவித்துள்ளனர்.

    • திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
    • பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    சென்னை:

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில், தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழக மக்கள் குடிக்க பால் இல்லாமல் அல்லலுறும் அவல நிலையை இந்த நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர்.

    தாய்ப் பாலுக்கு நிகராக ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்தது என்ற பாராட்டை தமிழக தாய்மார்களிடமிருந்து பெற்றது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஆவின் பால் நிறுவனமும், பால் கூட்டுறவு சங்கங்களும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மூன்று வகையான தரமான பாலை வழங்கி வந்தது. அதே நேரத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உடனுக்குடன் அவர்கள் வழங்கிய பாலுக்கான விலையைக் கொடுத்து வந்தது. இதனால் அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்குத் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல், தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டிபோட்டு குறைந்த விலைக்கு தரமான விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தன.

    பாலை தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. பாலின் தரத்தைக் குறைத்தது. அதிக அளவு விற்கும் பாலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. இரண்டாம் ரகப் பாலின் கொழுப்புச் சத்தை 1 சதவீதம் குறைத்தது. ஆவின் பொருட்களில் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயனடைய வழிவகை செய்தது. 50 சதவீதத்திற்கும் மேல் முகவர்களுக்கு பால் சப்ளையைக் குறைத்தது. முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது.. இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்கத் தொடங்கினார்கள்.

    மேற்கண்ட காரணங்களால் இன்று, தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு சீர்குலைந்து போயுள்ளதால், மக்கள் அநியாய விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முறையாக, தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பாலை சப்ளை செய்யாத அரசை கண்டிக்கிறேன்.

    எங்கும் எதிலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சி செய்யும் திமுக ஆட்சியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆவின் நிறுவனத்தை சீரழித்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போக்கை இந்த ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இல்லையெனில் ஆவின் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் கண்ணீர் இந்த ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் சுட்டெரிக்கும்.

    உடனடியாக பால் கொள்முதலை அதிகரித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களையும் அம்மா ஆட்சியில் இருந்தது போல் மீண்டும் சிறப்பாக செயல்படத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் பிஞ்சு குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் என, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் தரமான ஆவின் பாலை தட்டுப்பாடின்றி வழங்க இயலாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து பொதுமக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை மேம்படுத்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது.

    சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் பச்சைநிற பால் பாக்கெட் (4½ சதவீத கொழுப்பு சத்து), அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் இப்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

    கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்ற பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் தற்போது கொழுப்பு சத்து குறைத்து பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என கொண்டு வந்துள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் வினியோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் ஆவின் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர் தலைமையிலான விசாரணை கமிட்டியிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விசாரணை மதுரை ஆவின் நிறுவனத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் பட்சத்தில் பணி நியமன முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. எனவே புதிதாக ஆவினில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    விசாரணையில் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பணி நியமனம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பதிலை பெற்று வருகிறார். இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் கிலி ஏற்பட்டு உள்ளது.
    ×