search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veda nilayam"

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் வசித்து வந்தார்.

    அவரது மறைவைத் தொடர்ந்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

    இதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றி பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்காக வேதா நிலையம் இல்லத்தை விலைக்கு வாங்கி கையகப்படுத்தவும், நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இதே போல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் வேதா நிலையத்தில் தனக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை கேட்காமல் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகளும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தனியார் அமைப்பான சென்னை சமூக பணி கல்லூரியிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த ஈனாக் தலைமையிலான குழுவினர் தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் போயஸ் கார்டனைச் சுற்றிலும் 5 கி.மீ. பரப்பளவில் வசிக்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி மொத்தம் 120 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 108 குடியிருப்பு வாசிகள் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இது தொடர்பாக ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கார்த்திகா, அருணாசலம் உள்பட 108 பேர் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மறைந்த ஜெயலலிதா எங்கள் பகுதியில் வசித்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர் வசித்த போது பெரிய தலைவர்கள் பலர் இங்கு வந்து சென்றனர். அப்போது இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

    தற்போது நினைவு இல்லமாக மாற்றினால் அதற்கான போக்குவரத்து வசதிகளோ, வாகன நிறுத்தும் இடங்களோ அங்கு இல்லை. எல்லாமே சிறிய சந்துகளாகவும், சிறிய சாலைகளாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் வரும் போது வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் உருவாகும். திடீர் கடைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

    டெல்லி போன்ற இடங்களில் தலைவர்களின் நினைவு இல்லங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொது இடத்தில் அமைந்துள்ளன. அதுபோல் ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம்.

    ஜெயலலிதா மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், பெருமையும் இருந்தாலும், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் போது எங்களின் தனிப்பட்ட சுதந்திரமும், இந்தப் பகுதியின் அமைதியும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    அதே சமயம் இந்தப் பகுதி முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பிரிதிவிராஜன் உள்ளிட்டோர் நினைவு இல்லமாக மாற்ற ஆதரவு தெரிவித்தனர். தலைவர்கள் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் சரி.

    அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

    மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (10-ந்தேதி) வேறொரு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததும் இதுபற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    ×