search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varadaraja perumal temple"

    • வடகலை, தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

    மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.

    வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
    • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

    நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

    ஆரோவில்:

    புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

    பொட்டானிக்கல் கார்டன்:

    புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

    அரிக்கமேடு:

    பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

    இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

    • சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது.
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோ ற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா இன்று 25-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது பட்டாச்சாரி யார்கள் வேத மந்திரம் முழுங்க மங்கள வாத்திய த்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அம்ச வாகனத்திலும் , 2-ம் நாள் திருபல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் ராஜகோபாலன் சேவை, சேஷ வாகனத்திலும், 4 ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 3-ந் தேதி, சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் 5-ந் தேதியும் நடைபெற வுள்ளது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவ டைகிறது.விழா விற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் சாரங்க பாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிஷோர், கமலநாதன், கோவிந்த ராஜலு மற்றும் தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
    • பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
    • வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.

    ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.

    இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.

    திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... நாராயணா.. என கோஷங்கள் இட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை யொட்டி காலையில் மலர் அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். வரதராஜ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருத்தேர் 32 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் 52 தூண்களும், 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் பொலிவுடன் உள்ளன.

    • களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவையும், 7-ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 3-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.

    • மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கோவில் வழியில் பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

    மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் வரதராஜ பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 4-ந் தேதி காலை 8 மணிக்கு வாசுதேவ புண்யாகம், 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5-ந்தேதி திருக்–கல்–யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பெரியமடத்துபாளையம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெரியமடத்து பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலில் மஞ்சள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு பக்தி மற்றும் கிராமிய பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் ஆன்மீக வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி சொற்பொழிவும் நடைபெறுகிறது.

    நாளை காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் மகா தரிசனம் பூஜையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெறுகிறது. கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கலியுக வரதராஜ பெருமாளும், தாயார் மகாலட்சுமியும், தும்பிக்கையாழ்வார், இராமானுஜர், ஆஞ்சநேயர், கருடர், துவார பாலகர்கள் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய மடத்து பாளையம் கோவில் தலைவர் ஆறுமுகம் செய்துள்ளார். பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    • தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.

    விழாவையொட்டி தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை.
    • தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 5-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் திருப்பல்லக்கு மற்றும் வெண்ணெய்தாழி உற்சவமும், வேடுபரி உற்சவமும் நடைபெற்றது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை. தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    ×