search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shivan temple"

    • காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இரவில் குருபூர்ணிமா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில், தெரிசை அய்யப்பன், தங்கமணி, மோகன், கார்த்திகேயன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு பூஞ்ச பழத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, திருஞானசம்பந்தர் சமணர்களை வாதத்தில் வென்று திருக்கழு ஏற்றுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது.

    தினசரி காலையிலும், மாலையிலும் சப்பரபவனி நடக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 6-வது நாளான இன்று காலையில் உமையம்மை எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சப்பரபவனி நடைபெற்றது. இதில் மண்டகபடிதாரர் தவமணி, தெரிசை அய்யப்பன், குலசை இல்லங்குடி, தங்கமணி, இளையபெருமாள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியின் மண்டகப்படிதாரர்களான ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர். இன்று இரவு பூஞ்ச பழத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, திருஞானசம்பந்தர் சமணர்களை வாதத்தில் வென்று திருக்கழு ஏற்றுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் சிவன்கோவில் என அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    தேரோட்டம்

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. மறுநாள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு வருசாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள்.

    தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, பகுதி செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மண்டல சேர்மன் மாதவன், நிர்வாகிகள் பள்ளமடை பாலமுருகன், போர்வெல் மணி, பாக்யராஜ், வேல்முருகன், தாழை மீரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைந்தது.

    • ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.
    • பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    பல்லடம்:

    பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள நவகிரக நாயகா் கோளறுபதி சிவன் ஆலயத்தில் சோபகிருது வருட குருப்பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா மகாயாகம், 1008 தீா்த்த கலச அபிஷேகம் ஆகியன நடைபெற்றன.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.

    யாக சாலை வேள்வியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட கங்கா தீா்த்த கலசத்தை பக்தா்கள் பெற்று நவகிரக கோட்டையினுள் அமைந்துள்ள தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானின் பொற்பாதங்களுக்கு தாங்களே தீா்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சாத்தான்குளம் அருகே அழகியகூத்தர் கோவிலில் மாசி மாத சனிபிரதோஷ பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நட ராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமாக விளங்கி வரும் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தர் கோவிலில் மாசி மாத சனிபிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிமுதல் கோவில் வளாகத்தில் உள்ள நந்தியம் பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • செங்கோட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
    • அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு, அன்னதான கூடத்தில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை புஷ்பாஞ்லி வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.
    ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன. அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.

    ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு வலது புறம் அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஒரு முறை மருங்கபள்ளம் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும், அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும், ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது.

    தீராத வியாதியால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி மருந்தீஸ்வரரையும், பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார். அத்துடன் அங்கு இருந்த சித்த வைத்தியர் ஆலோசனைப்படி பச்சிலைகளையும் உட்கொண்டு வந்தார். மன்னரின் நோய் படிப்படியாக குணமாகி சில நாட்களில் முற்றிலும் குணமடைந்தார்.

    மனம் மகிழ்ந்த மன்னர், தற்போது மருங்கப்பள்ளம் பகுதியை ஆலயத்திற்குத் தானமாக வழங்கினார். அதுவரை ‘மருந்து பள்ளம்’ என்று இருந்த, அந்த ஊர் பெயர் மருவி தற்போது ‘மருங்கப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.

    தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மேற்கிலும், கிழக்கில் சனி பகவான், பைரவர், லட்சுமி நாராயணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சனி பகவானுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரி பூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம். 
    சைவசமய குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருவேட்டக்குடி. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    10-6-2018 கோவில் கும்பாபிஷேகம்

    சிறப்பான ஆலயங்கள் கொண்ட ஊரினை ‘புண்ணியதலங்கள்’ என்பர் சமயச் சான்றோர். அத்தலங்களில் சமய குரவர்களின் பாடல் பெற்ற தலங்களை ‘பாடல்பெற்ற தலங்கள்’ என்பர். சைவசமய குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருவேட்டக்குடி.

    இறைவனின் பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணீற்றுக் கோலத்தைக் கண்ட சம்பந்தர் ‘சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக்குடியாரே’ என அவரது திருமேனி அழகில் லயித்து திளைத்துப் போகிறார். ஞான சம்பந்த பெருமானே இறைவன் பால் நாட்டம் கொண்டதால் இத்தல இறைவன் ‘திருமேனியழகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் சாந்தநாயகி என்பதாகும். சவுந்திர நாயகி என்ற திருநாமமும் உண்டு.

    தலவரலாறு :

    சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். உயிர்கள் யாவும் தத்தம் இனத்தைப் பெருக்கி வாழ்ந்தன. இப்படி அவரவர் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்வதை பார்த்த சிவபெருமான், கயிலை மலைக்குச் சென்று யோகநிஷ்டையில் அமர்ந்தார். ஒருகட்டத்தில் அவரது உடலும் உணர்வும் அசைவற்றுப்போக உலகில் வாழ்ந்த அனைத்து உயிர்களும் செயலற்றுப் போயின. இதனால் அதிர்ச்சியுற்ற பிரம்மாவும், திருமாலும் சிவனிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு மீளவேண்டுமென வேண்டினர்.

    பெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள் புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின.

    சிவனின் அற்புதத்தை அருகிலிருந்து கண்டு வியந்த அன்னை பார்வதிதேவி ‘அண்ட சராசரத்திலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மூச்சாக இருப்பது யார்?’ என்று கேட்டார்.

    அதற்கு ஈசன், ‘அதிலென்ன சந்தேகம் சாட்சாத் யாமேதாம்’ என்றார்.

    இதை ஏற்காத பார்வதிதேவி ‘இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள் பார்க்கலாம்’ என்று கேட்க, இறைவனும் அவ்வாறே மீண்டும் மூச்சை அடக்க அனைத்து உயிர்களும் மூச்சற்றுப் போயின. உயிர்கள் யாவும் மூச்சற்று முழு துயரில் இருப்பதை உணர்ந்த இறைவன், தான் அடக்கிய மூச்சை வெளியே விட, உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று வாழத் தொடங்கின.

    தம்மை சோதித்து உயிர்கள் யாவற்றிற்கும் துன்பத்தை விளைவித்த பார்வதியிடம், ‘நீ எம்மை சோதித்து உயிர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்து விட்டாய். எனவே மீனவர் மரபில் பிறந்து அருந்தவம் செய்து எம்மை மீண்டும் வந்தடைவாயாக’ என்று அருளினார்.

    அதன்படி அம்மை புன்னை வனமாக இருந்த இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்க்கலானார். அப்பெண் சிறுமியாக வளர்ந்து உரிய நிலையை எய்திய பின்பு, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜித்து வந்தார்.

    இந்த நிலையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தியதுடன், வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து பிரம்மனும், தேவர்களும் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு பகவான் மச்ச (மீன்) அவதாரம் எடுத்து சோமுகனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அதன்பின்னரும் விஷ்ணுவின் சினம் அடங்காமல் போகவே, கடலை கலக்கினார். இதனால் உலகமே நடுங்கிற்று. உயிர்கள் தவித்தன. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் கயிலாயம் சென்று, சிவனிடம் பணிந்து முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன் மீனவர் வடிவம் தாங்கி பூலோகம் வந்து, கடலை கலக்கிய பெரியமீனை பிடித்து தரைமீது கொண்டுவந்து போட்டார். அவ்வளவில் மீன்வடிவம் நீங்கிய பெருமாள் வைகுந்தம் சென்றருளினார்.

    பின்னர் மீனவர் வடிவில் வந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த உமைய வளைக் கண்டு, தன் சுய வடிவம் காட்டியருள அம்மையும் ஐயனை வணங்கி நின்றாள். பின்னர் ஈசன் வேண்டுகோளுக்கிணங்கி கடலாடி சுய உருவைப் பெற்ற அன்னையிடம், ‘வேண்டிய வரம் கேள்’ என்றார் ஈசன்.

    உமைதேவி, ‘இறைவா! நான் ஸ்தாபித்து வழிபட்ட இந்த லிங்கத்தில் தாங்கள் இருந்து பக்தர் களுக்கு அருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    கோவில் அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலை களுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாசல் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான முன் மண்டபம், அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கிய பூரணை - புஷ்கலை உடனுறை ஐயனார், தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இந்த ஆலயத்தில் உள்ளன.

    புன்னைவனநாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை "சாந்தநாயகி" என அழைக்கின்றனர். அம்பாள் சன்னிதியின் அருகில் பள்ளியறை இடம் பெற்றுள்ளது.

    தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது. பொறையாறு - காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேட்டக்குடி. இங்கு செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. 
    வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்தல வரலாறு :

    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    காயத்துடன் சிவலிங்கம் :


    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

    அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

    ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கோவில் அமைப்பு :

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

    மேற்கூரையில் நவக்கிரகங்கள்:

    ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    கிழக்கு நோக்கி நந்தி :

    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

    இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

    அபூர்வ நடராஜர் :

    இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

    அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:

    ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தீர்த்தம் :

    உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

    இதற்கு சான்றாக ராஜராஜசோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர்.

    தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    சக்தி வாய்ந்த காலபைரவர் :

    இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

    சந்தன காப்பு அலங்காரம் :

    மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.
    சிவபெருமானுக்கு, கேரளாவின் வடக்குப் பகுதியில் நிறைய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்கள் மலையாள மொழியில் வேட்டக்கொரு மகன் (வேட்டைக்கொரு மகன்) கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    கருமையான நிறத்தில் இரு கைகளிலும் வில்லம்புகளுடன் கிராதன் (வேடுவன்) உருவத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு, கேரளாவின் வடக்குப் பகுதியில் நிறைய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்கள் மலையாள மொழியில் வேட்டக்கொரு மகன் (வேட்டைக்கொரு மகன்) கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    வேடுவமூர்த்தி :

    சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெற விரும்பிய அர்ச்சுனன், அடர்ந்த காட்டுக்குள் சிவபெருமானை நினைத்து கடுமையான தவம் இயற்றினான். அவனது தவத்தைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பிய சிவபெருமான் வேடுவனாகவும், பார்வதிதேவி வேடுவப் பெண்ணாகவும் உருவ மாற்றம் கொண்டு அங்கு வந்தனர்.

    அப்போது, அர்ச்சுனனின் தவத்தைக் கலைத்து, அவனைக் கொல்லும் நோக்கத்தில் மூகன் எனும் அரக்கன் பன்றி உருவமெடுத்து அங்கு வந்தான். அதனையறிந்த அர்ச்சுனன் அந்தப் பன்றியைக் கொல்வதற்காக அம்பு எய்தான். அதே வேளையில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமானும் அந்தப் பன்றியைக் கொல்ல அம்பு எய்தார். இரு அம்புகளும் பாய்ந்த நிலையில் அந்தப் பன்றி இறந்து விழுந்தது.

    இந்நிலையில், அந்தப் பன்றியை யாருடைய அம்பு முதலில் குத்திக் கொன்றது என்பதில் அர்ச்சுனனுக்கும் வேடுவனாக இருந்த ஈசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அர்ச்சுனன் வேடுவனை நோக்கித் தன் அம்பைச் செலுத்தினான். வேடுவன் அந்த அம்பைத் தனது அம்பால் எளிதில் வீழ்த்தினான். இப்படியே, அர்ச்சுனனிடம் இருந்து வந்த அம்புகள் அனைத்தும் வேடுவனால் வீழ்த்தப்பட்டன.

    தன்னிடம் அம்புகள் எதுவுமில்லாமல் போனதால் கவலையடைந்த அர்ச்சுனன், அங்கிருந்த மலர்களை எடுத்துச் சிவலிங்கத்தின் மேல் தூவி, வேடுவனை எதிர்க்கத் தேவையான ஆயுதத்தை வழங்கிட வேண்டினான். அப்போது, அவன் சிவலிங்கத்தின் மேல் தூவிய மலர்கள் அனைத்தும் வேடுவனின் காலடியில் சென்று விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

    அதன் பிறகுதான் அவனுக்கு வேடுவன் உருவத்தில் இருப்பது இறைவன் சிவபெருமான் என்பது தெரிந்தது. உடனே அவன், இறைவன் என அறியாமல் எதிர்த்துச் சண்டையிட்டதற்காக வருந்தி மன்னிப்பு வேண்டினான். அவனை மன்னித்த இறைவன், அவன் விரும்பிய பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

    அர்ச்சுனனுக்கு இறைவன் வேடுவன் உருவில் காட்சியளித்த தோற்றமே கிராதன் (வேடுவன்) தோற்றம் என்றும், இவ்வடிவில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி) என்றும், பாசுபதமூர்த்தி என்றும் சொல்லி வழிபடுகின்றனர் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.

    வேட்டைக்கொரு மகன் :

    கேரளாவில் வேடுவன் உருவத்தில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி), பாசுபதமூர்த்தி என்ற பெயர்களில் அல்லாமல், ‘வேட்டக்கொருமகன்’ (வேட்டைக்கொரு மகன்) என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்குக் காரணமாக, அங்கு முந்தைய புராணக்கதையின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அர்ச்சுனனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கிய சிவபெருமானும், பார்வதிதேவியும் அந்தக்காட்டில் வேடுவர்களாகத் தொடர்ந்து சில காலம் இருந்தனர். அப்போது அவர்களுக்குப் பிறந்த ஒரு ஆண் குழந்தையை அந்தக் காட்டிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். வேடர்களின் தலைவன் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான்.

    வேடர்களின் தலைவன் பராமரிப்பில் வளர்ந்த அந்தக் குழந்தை சிறுவனாக இருந்த போதே, அம்பு எய்தல், எதிரிகளை வீழ்த்துதல் என்று பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் குறும்புகளையும் அதிகமாகச் செய்யத் தொடங்கியது.

    அவன் செய்த குறும்புகளால் அந்தக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த முனிவர்கள் தவமியற்ற முடியாமல் தவித்தனர். அவனது தொல்லைகளால் பெரும் பாதிப்படைந்தனர். அதனால் கவலையடைந்த முனிவர்கள், அந்தச் சிறுவனால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றிப் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட பிரம்மா, சிவபெருமானிடம் சென்று தெரிவிக்கும்படிச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

    முனிவர்கள் அனைவரும் சிவபெருமானைச் சென்று பார்த்தனர். அவர், சிறுவன் விளையாட்டாகச் செய்வதைப் பெரிதுபடுத்த வேண்டாம். அவன் பெரியவனாக வளர்ந்ததும் சரியாகிவிடுவான் என்று சொன்னார். அவர்களுக்கும் சிவபெருமான் சொல்வது சரிஎன்று தோன்றியதால், அங்கிருந்து மீண்டும் அந்தக் காட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர்.

    அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனான பின்பும் தனது குறும்புகளை நிறுத்திக் கொள்ளவில்லை, அங்கிருந்த முனிவர்கள், அவர்களைத் தேடி வருபவர்கள் என்று அனைவருக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனுடையத் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள், இம்முறை விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட விஷ்ணு, அவனுடைய தொல்லை இனி இருக்காது என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.



    அதன் பிறகு விஷ்ணு, அவனுக்கு முன்பாக அந்தணர் உருவில் தோன்றித் தன்னிடமிருந்த தங்கத்திலான உடைவாள் ஒன்றைக் காட்டினார். அதன் அழகிய வேலைப்பாடுகளில் மயங்கிய அவன் விஷ்ணுவிடம், தனக்கு அந்த உடைவாளைத் தரும்படி கேட்டான். உடனே விஷ்ணு, ‘உடைவாளை எப்போதும் வலது கையிலும், வில் அம்பை இடது கையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி வழங்கினார்.

    அதனைப் பெற்றுக் கொண்ட அவன், அந்த உடைவாளை வலது கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இடது கையில் இருக்கும் வில், அம்பைப் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால், அவன் செய்து வந்த குறும்புகள் அனைத்தும் குறைந்து போனது மட்டுமின்றி, அவனால் பிறருக்கு ஏற்பட்டு வந்த தொல்லைகளும் இல்லாமல் போனது.

    இந்நிலையில் அவன் முன்பு தோன்றிய சிவபெருமான், அவனைத் தென்பகுதிக்குச் சென்று, அவனை ஏற்குமிடத்தில் காவல் தெய்வமாக இருக்கும்படி அனுப்பி வைத்தார். அங்கிருந்து கிளம்பிய அவன், பல்வேறு பகுதிகளைக் கடந்து கேரள மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்தவர்கள் அவனுக்கு வரவேற்பளித்தது மட்டுமின்றி, அவனைத் தங்கள் காக்கும் கடவுளாக இருக்கவும் வேண்டினர். அவனும் அதற்குச் சம்மதித்தான். அவர்கள் அவனுக்கு அங்கு கோவில் அமைத்து ‘வேட்டக்கொருமகன்’ எனும் பெயரில் வழிபடத் தொடங்கினர்.

    வழிபாடு :

    வேட்டக்கொருமகன் கோவில்களிலும் பிற கோவில்களைப் போன்றே வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பகவதி கோவில்களில் நடத்தப்பெறும் ‘களமெழுத்துப் பாட்டு’ போன்று இக்கோவிலிலும் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது தேங்காய் எறிச்சல், வெளிச்சப்பாடு துள்ளல் போன்றவை நடத்தப்பெறுகின்றன.

    ஐயப்பனின் மண்டல பூஜை காலத்தினையொட்டி வேட்டக்கொருமகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நாற்பத்தி ஒன்றாம் நாளில் வேட்டக்கொருமகன் உருவம் தரையில் சித்திரமாக வரையப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூஜை செய்யப்படுகிறது. சில கோவில்களில் இவ்வுருவம் இருபது அடி நீளம், பன்னிரண்டு அடி அகலம் வரை வரையப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்பு களமெழுதிய வேட்டைக்கொருமகன் சித்திரம் அழிக்கப்பட்டு, அந்த வண்ணக்கலவைப் பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பந்தீராயிரம் விழா :


    இந்தக் களமெழுத்துப் பூஜையின் போது இங்குள்ள இறைவனை மகிழ்விக்கச் செய்யும் சடங்காக ‘வேட்டக்கொருமகன் பாட்டு’ இடம் பெறுகிறது. இப்பாட்டு ஒலிக்கும் போது தேங்காய் எறிச்சல் நடத்தப் பெறுகிறது. அதாவது, இப்பாட்டு ஒலிக்கும் வேளையில் பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் பாட்டு ஒலிப்பிற்கேற்ப உடைக்கப்படுகிறது.

    கேரள மக்களிடையே இந்த வேட்டக்கொருமகனை வணங்கினால், பயம் அகன்று, நல்ல தெளிவு பிறக்கும் என்றும், திருமணப்பேறு, குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    ஆலயம் அமைந்த இடங்கள் :

    வேட்டைக்கென்றே பிறந்த ஒரு மகன் என்று பொருள் கொள்ளக்கூடிய வேட்டக்கொருமகன் கோவில், பாலுசேரி எனுமிடத்தில் தான் முதன்முதலாக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே மற்ற ஊர்களில் இக்கோவில்கள் அமைக்கப்பட்டதாக சொல்கின்றனர். கேரளாவின் வடக்குப் பகுதியில் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான வேட்டக்கொருமகன் கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் பாலுசேரி, நீலாம்பூர், காயங்குளம் கிருஷ்ணாபுரம், எருவட்டிக்காவு, ஆலப்படம்பா, நீலேஸ்வரம், கோட்டக்கல், கோழா, ஒலசா படிஞ்சாரேப்பட்டு போன்ற இடங்களில் அமைந்திருக்கும் கோவில்கள் இவற்றில் சிறப்பு பெற்றதாக இருக்கின்றன.

    வேட்டக்கொரு மகன் உருவம் :

    பெ்ரும்பான்மையான கோவில்களில் இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மீசையுடன் வேடன் உருவில், வலது தோளின் பின்புறம் அம்புறாத்தூணி, வலக்கையில் உடைவாள், இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்த நிலையில் காட்சி தரும் வேட்டைக்கொரு மகன் படங்களே வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில கோவில்களில் மட்டும் மேற்காணும் உருவிலான சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவருடைய உருவம் ஐயப்பன் உருவத்தைப் போன்றிருப்பதால், இவரை ஐயப்பனின் மறு தோற்றம் என்றும் சொல்வதுண்டு.

    கிராத மூர்த்தி :


    சிவபெருமானின் அறுபத்து நான்கு சிவ வடிவங்களில் ஒன்றாகவும், இருபத்தைந்து சிவமூர்த்தங்களில் ஒன்றாகவும் இருப்பது கிராதன் (வேட்டுவன்) உருவமாகும். சில சிவாலயங்களின் கோபுரங்களிலும், தூண்களிலும் சிவபெருமானை வேடுவனாகவும், அர்ச்சுனனைத் தவம் செய்யும் கோலத்திலும் சுதை மற்றும் வண்ணச் சிற்பங்களாக வடிவமைத்திருப்பதைக் காணலாம்.

    தமிழ்நாட்டில் கும்பகோணம் தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கிராத கோலத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுதக்கும்பம் ஒரு மேடான இடத்தில் தங்கிய போது, சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வந்து, ஓர் அம்பால் அந்த அமுதக் கலசத்தை உடைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. 
    அகத்தியர் வழிபட்ட மணல் லிங்கம் அமைந்திருக்கும் கோவிலே ‘மதுநாத சுவாமி திருக்கோவில்’ ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முன்னொரு சமயம் உலக முதல்வனாம் சிவபெருமானுக்கும், உலக நாயகியாம் பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த வேளையில் இறைவன்- இறைவியின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், கிருடர்கள், கிம்புருவர், காந்தர்வர்கள் என அனைவரும் கயிலாயத்தில் குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து பூமி நிலைகுலைந்தது.

    இதனையறிந்த சிவபெருமான் சப்தரிஷிகளுள் முதல்வரான அகத்திய முனிவரை தென்திசை சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி வந்தார் அகத்திய மாமுனிவர். அப்போது சந்தியா வேளை. அருகில் ஓடிய அனுமன் ஆற்றில் மூழ்கி அருகில் இருந்த புளியமர நிழலில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தார். அச்சமயம் புளிய மரக்கிளையில் கூடு கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து மணல் லிங்கம்மீது தேன் சொட்டியது. (மதுரமான) தேனில் இறுகி தேன்லிங்கமாக மாறியது. பூஜை முடித்தபின் இதனை கவனித்த அகத்தியர் சிவலிங்கத்தை ‘தேனீஸ்வரர்’ (மதுநாதர்) என்று அழைத்து ஆனந்தம் கொண்டார். தேனீஸ்வரா என்று அழைக்கப்பட்ட மணல் லிங்கமானது, பின்னர் மதுநாதா என்று அழைக்கப்பட்டது.

    இவ்வாறு அகத்தியர் வழிபட்ட மணல் லிங்கம் அமைந்திருக்கும் கோவிலே ‘மதுநாத சுவாமி திருக்கோவில்’ ஆகும்.

    இவ்வூரின் வழியே ஆதியில் ஓடிய நதி ‘அனுமன் நதி’ ஆகும். ராம- லட்சுமணர்கள் வானர சேனையோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே, ‘அனுமன்’ ராம நாமம் சொல்லி பாறையில் அடிக்க, அப்பாறை வழியே ஆகாய கங்கை பெருகி ஓடிவந்து, ராம- லட்சுமணர் மற்றும் வானர சேனைகளின் தாகம் தீர்த்ததாக ஐதீகம். அந்நதியே அனுமன் நதியாகும். அனுமன் நதிக்கரையில் அமைந்த ஊரே இலத்தூர் ஆகும்.

    ‘மூர்த்தி தலம், தீர்த்தம் முறையாகத் தொழுவோருக்கு ஈசன் திருவடி எளிதில் கிட்டுமே’ என்ற முதுமொழிக்கிணங்க தொன்முனி அகத்தியரால் உருவாக்கப்பட்ட மதுநாதர், வாயு குமாரனால் உருவாக்கப்பட்ட அனுமன் நதி நீர் பாயும் திருக்குளம், ‘தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்குரியராம்’ தன்மையுடைய சான்றோர் வாழும் திருப்பதியாக இலத்தூர் திகழ்கிறது.

    இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. அகத்திய மாமுனிவர் காலத்திற்குப் பின்பு தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் அன்னபூரணி மாதாவிற்கு தனிக்கோவில் உள்ளது என்பது சிறப்பு அம்சமாகும். சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும். பக்தர்கள் வலம்வரும் வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் மத்தியில் ஆறுமுக நயினார் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ளது.



    மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

    அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

    குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது. 
    இந்த ஆலயம் பூரம் நட்சத்திற்குரிய கோவிலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர பிறந்த நாள், மாதாந்திர நட்சத்திரநாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கே வந்து வழிபடலாம்.
    சோழ நாட்டில் வாழ்ந்த கைவல்யன் எனும் அந்தணன் தரும சிந்தனை மிக்கவன். சுமதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்த கைவல்யன், நற்குணங்களின் இருப்பிடம். சகல சாஸ்திரங்களையும் நீக்கமறக் கற்றவன். அவனுக்கு புத்திரப்பேறு இல்லாததால் மனம் வருந்தினான். ஒரு முறை அவன் தன் மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். வழியில் அரன் குளம் என்ற இடத்தை அடைந்த அந்த தம்பதியர், அங்குள்ள ஹரதீர்த்தத்தில் நீராடினர். பிறகு கைவல்யன், சிவபெருமானை தியானித்து தவம் புரிந்தான். கடுமையான அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், நேரில் காட்சி தந்தருளி அவன் வேண்டிய வண்ணம் புத்திரப் பாக்கியம் உண்டாக அருள்பாலித்தார்.

    இறைவன் திருவருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு நிம்பாரணியன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தான். நிம்பாரணியனைத் தக்கமுறையில் சீராட்டி வளர்த்த கைவல்யன், உரிய பருவத்தில் அவனுக்கு மணம் முடிக்க நினைத்தான். அதற்காக கலாதர் என்பவரின் மகளான சுயம்பிரயைத் திருமணம் செய்து வைத்தான். நிம்பாரணியனும் சுயம்பிரயையும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இன்புற்று வாழ்ந்தனர். கைவல்யனைப் போலவே, நிம்பாரணியனுக்கும் நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

    இதையடுத்து தந்தையின் அறிவுரைப்படி, நிம்பாரணியன் ஹரத் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை நினைத்து தவம் இயற்றினான். அவனது கடுந்தவம் கண்டு மகிழ்ந்த ஈசன், அரங்குளத்துக் கரையில் இருந்த வேப்பமரத்தின் அடியில் லிங்க வடிவாய் தோன்றினார். நிம்பாரணியன் அகமகிழ்ந்தான். ‘உன் குலத்தைக் கரையேற்றும் சுப குணம் உள்ளவளாகவும், அழகுடையவளாகவும், மானசீக புத்திரியாகவும் எட்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தையை உனக்களித்து அருள்புரிவோம். அந்தப் பெண்ணை உரிய காலத்தில் உரியவருக்கு திருமணம் செய்து வைத்தால், புத்திரப் பாக்கியத்தைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைக்கும்’ என்றார் சிவபெருமான்.

    அது கேட்டு மகிழ்ந்த நிம்பாரணியன், மீண்டும் ஈசனை பணிந்து, ‘இறைவா! தாங்கள் இதே லிங்க வடிவத்தில் எக் காலத்திலும் இங்கே எழுந்தருள வேண்டும். கயிலையில் வீற்றிருப்பது போல, பூர்ணாம்சத்துடன் திருவருள் பொழிய வேண்டும்’ என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார். அது முதல் இந்த திருத்தலம் ‘திருவரங்குளம்’ என்பது போல, ‘நிம்பாரண்யம்’ என்றும் வழங்கப்படலாயிற்று. இத்தல இறைவனுக்கு ஹர தீர்த்தேஸ்வரர், அரன்குளநாதர், நிம்பாரண்யநாதர் என்ற திருநாமங்கள் உண்டு.

    ஒரு முறை திருக்கயிலாயத்தில் ஈசனுடன் வீற்றிருந்த உமாதேவி, ‘சுவாமி! உங்களுக்கு யாரிடத்தில் அதிக அன்பு உண்டு?’ என்று கேட்டார். அதற்கு இறைவன், ‘என் மனையாளாகிய உன்னிடமும், மனோகரமாயுள்ள சந்திரனிடமும், கங்கையிடமும், மிகுந்த அன்பு கொண்ட என் அடியார்களிடமும் எக்காலத்திலும் எனக்கு ஒரு தனியாத அன்பு உண்டு’ என்று கூறினார்.

    அதைக் கேட்ட உமாதேவி, மற்றவர்களுடன் தன்னையும் சமமாக கூறியதை நினைத்து கோபம் கொண்டார். துக்கத்துடன் தரையில் படுத்துக் கொண்டார். அவரை சிவபெருமான் இனிய சொற்களால் ஆறுதல் கூறியும் உமாதேவிக்கு சினம் தணியவில்லை.

    இதனால் சினம் கொண்ட சிவபெருமான், ‘எனது அன்பான சொற்களை மதிக்காமல், தரையில் படுத்த நீ, பாவ-புண்ணியங்களுக்கு இடமாகிய பூமியில் சென்று பிறப்பாய்’ என்று சாபமிட்டார்.

    ஈசனின் சாபத்தைக் கேட்டதும், மனம் தெளிவடைந்த உமாதேவியார், தன்னை மன்னித்தருளும்படி இறைவனை வேண்டினார். இதையடுத்து சிவபெருமான், ‘நீ அஞ்ச வேண்டாம். சாபத்தின் முடிவில் உனக்கு நன்மையே உண்டாகும். நாமே உன்னை மணம்புரிவோம். திருவரன்குளம் என்னும் திருத்தலத்தில் எனது பக்தன் நிம்பாரணியன் மகப்பேறு வேண்டி என்னைத் துதித்துக் கொண்டிருக்கிறான். நீ அவரிடம் சென்று குழந்தையாய் தோன்றுவாய். பின் குழந்தை தன்மையை விட்டு விட்டு, 8 வயது நிரம்பிய சிறுமியாய் மாறி என்னை வணங்கி வா. உரிய காலத்தில் உன்னை நாம் மணம் புரிவோம்’ என்று அருளினார்.

    வாக்களித்தபடியே இறைவியான பெரிய நாயகியை, வைகாசி மாதம் சுகிலபட்சத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று சிவபெருமான் திருமணம் புரிந்து கொண்டு, பெரியநாயகி சமேத அரன்குளநாதராக அனைவருக்கும் காட்சி தந்தருளினார் என்கிறது தல புராணம்.

    தங்கப் பனம்பழம் :

    ஒரு நாள் கல்மாஷபாதன் என்ற மன்னன், அகத்திய முனிவரது அருளுரைகளால் அரன் குளத்தின் பெருமைகளை நன்கு உணர்ந்து தன் குறை நீங்கிப் புத்திரபாக்கியம் பெறும் விருப்பத்துடன் அத்திருத்தலத்தை அடைந்தான். பல இடங்களில் அலைந்து அரிய சிவலிங்கத்தை தேடினான். ஆற்றல் மிக்க அவ்வரசன் பல நாள் தேடியும் சிவலிங்கம் இருக்குமிடத்தை கண்டறிய முடியவில்லை. இருப்பினும் விடாமல் அந்த சிவலிங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த காட்டின் வழியாக ஒரு வேடன், தலையில் ஒரு பெட்டியைச் சுமந்தடி வந்தான். அவனை நெருங்கிய மன்னன், ‘எங்கிருந்து வருகிறாய்? நீ வைத்திருக்கும் பெட்டியில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.

    அதற்கு அந்த வேடன், ‘ஐயா... இந்தப் பெட்டிக்குள் பனம்பழம் இருக்கிறது. பட்டணத்தில் உள்ள கடையில் விற்பனை செய்வதற்காக அதைக் கொண்டு செல்கிறேன்’ என்றான்.

    அதைக் கேட்ட அரசன், அப்பழத்தைத் தனக்கு தந்தால் தக்கவிலை அளிப்பதாகக் கூறினான். வேடனும் ஒரு குறுணி தானியத்தை விலையாகத் தருமாறு கேட்டுவிட்டு, பெட்டிக்குள் இருந்த பனம்பழத்தை எடுத்து மன்னனிடம் கொடுத்தான். அதைத் தன் கையில் வாங்கிய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில் அந்த பனம் பழம் முழுவதும் தங்கத்தால் பிரகாசித்தது.


    அரங்குளநாதர், பெரியநாயகி

    அரசன் அந்த வேடனிடம், ‘இந்த பழம் பழுக்கும் பனை மரம் எங்குள்ளது? தினமும் எவ்வளவு பழங்கள் பழுக்கும்? இவ்வளவு காலமாய் யாரிடம் இந்தப் பழங்களை விற்று வருகிறாய்? அஞ்சாமல் உண்மையைக் கூறு. உனக்கு வேண்டிய பொருளை நான் தருகிறேன்’ என்றான்.

    ‘அரசே! அந்தப் பனைமரம் இக்காட்டில் அருகில் தான் உள்ளது. அதில் தினமும் ஒரு பழம்தான் பழுக்கும். அதனைக் குறுணி தானியத்துக்கு ஒரு வணிகனிடம் விற்று, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். அம்மரத்தை தங்களுக்கு காட்டுகிறேன்’ என்று கூறி அழைத்துப் போனான்.

    வேடனுடன் சென்ற மன்னன் பிரகாசத்துடன் மின்னிய அதிசயமான அந்தப் பொற்பனை மரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பின்பு நகரில் இருந்த வணிகனை வரவழைத்து, அவன் அதுவரை வேடனிடம் பெற்றிருந்த பனம்பழங்கள் அனைத்தையும் அவனுக்கு உரிய பொருட்களை வேண்டிய மட்டும் தந்து பெற்றுக்கொண்டான். தொடர்ந்த அந்தப் பொற்பனை மரத்துக்கு மன்னனே காவலாய் இருந்தான்.

    ஒரு நாள் அப்பொற்பனை மரத்தில் திவ்ய ஒளி ரூபமாக ஒரு வடிவம் தோன்றி, அரசன் முன்பாக நின்றது. ‘மன்னா! நான் புஸ்பதந்தன் என்னும் கணநாதன். சிவபெருமான் கட்டளையால் கிருதாயுகத்தில் வேம்பாகவும், திரேதாயுகத்தில் காட்டாத்தியாகவும், துபார யுகத்தில் பொற்பனையாகவும் இருக்கின்றேன். கலியுகத்தில் இந்த பொற்பனை மரத்தின் பழங்களால் திரட்டப்படும் திரவியங்களால் அமைக்கப்பட்ட மணி மண்டபங்கள் அமைந்த சிறந்த ஆலயமாக நின்று, இறைவனுக்கு நிழல் தரப்போகிறேன். ஆகையால் எனது இக்கனிகளை விற்றுக் கிடைக்கும் பொருளால் சிவபெருமானுக்கு உகந்த ஆலயம் ஒன்றை விரைவில் கட்டுவாயாக’ என்று கூறி மறைந்தது.

    மன்னன் அப்பொற்பனை மரம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு புதிய நகரை அமைத்தான். பின் அங்கேயே தங்கி சிவலிங்கத்தை நேரில் கண்டு தரிசிக்கும் விருப்பத்துடன் இருந்தான். அரண்மனை அலுவலர்கள் பொற்பனைக் காட்டில் தவமிருக்கும் மன்னனுக்குத் தேவையான பூஜை திரவியங்களையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து இடையர்கள் சிலர் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்படி இடையர்கள் வரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி, அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் பூஜை பொருட்கள் ஒரு கல்லின் மீது விழுவது வழக்கமாகிப்போனது. இந்தச் செய்தி மன்னனுக்கு தெரியவந்தது.

    மன்னன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சித்தான். அப்போது வாள் பட்டு கல்லில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் தான் அது சிவலிங்கம் என்பது தெரியவந்தது. பதறிய மன்னன், தன் தவறுக்காக உயிரை விட முன்வந்தான். அப்போது இறைவன், மன்னனை தடுத்தாட்கொண்டு, அங்கே ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். கல்மாஷபாதன், இறைவன் ஆணைப்படி மிகச்சிறந்த திருக்கோவிலை எழுப்பி, குறித்த நன்னாளில் குடமுழுக்கு விழாவையும் நடத்தினான்.

    மற்றொரு வரலாறு :
     
    இது போல இன்னொரு புராண வரலாறும் உண்டு. இடையர் ஒருவர் தினந்தோறும் பால் கொண்டு வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுமாறி, கலயத்திலிருந்து பால் கொட்டிப் போகும். அதோடு கலயமும் உடைந்துவிடும். இவ்வாறு பால் கொட்டிப் போவதைக் கண்ட பால்காரர், அவ்விடத்தில் கரடு முரடாக இருந்த பகுதியைத் தூய்மை செய்யவேண்டும், ஒழுங்கு படுத்தவேண்டும் என்று மண் வெட்டி, கோடரி போன்ற கருவிகளுடன் வந்தார்.

    அங்கிருந்த கற்களை பெயர்த்த போது, ஒரு கல்லைக் கண்டார். அக்கல்லே தன்னைத் தினமும் தடுக்கிவிழச் செய்து பாலைக் கொட்டும்படி செய்துவிட்டதாக எண்ணிய அவர், கல்லை அடியோடு தோண்டி எடுக்க நினைத்து மண்வெட்டி கொண்டு வெட்டினார். அப்போது மண்வெட்டி பட்டு, கல்லில் இருந்து ரத்தம் பாய்ந்தோடியது. அப்போது அங்கே வந்த ஒருவர், தன்னிடம் இருந்த துண்டை போட்டு ரத்தத்தை தடுத்துள்ளார். பின்னர் அங்கு இறை வனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    ஆதிசேஷன் வழிபட்ட தலம் :

    காசியப்பர் எனும் முனிவருக்கு விநதை, கத்ரு என இரு மனைவியர், கத்ரு மிகப் பயங்கரமான விஷம் பொருந்திய நாகங்களை புதல்வர்களாகப் பெற்றாள். விநதையிடம் அருணன், கருடன் எனும் புதல்வர்கள் மகாவிஷ்ணு அம்சமாய் தோன்றினர். தேவலோகத்தின் உச்சை சிரவஸ் எனும் வெண்குதிரை நிறம் பற்றிய பிரச்சினையால் விநதைக்கும் கத்ருவுக்கும் தீராப் பகை தோன்றியது. அதனால் நாகங்களுக்கும் கருடனுக்கும் கூட பகை மூண்டது. பாம்புகளின் அரசனாக ஒளி பொருந்திய நாகரத்தினங்களை கொண்ட ஆயிரம் முடிகளுடன் விளங்கும் ஆதிசேஷன், தன் குலத்தாருக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தீர்க்க உறுதி கொண்டார்.

    ஆதிசேஷன் அரன் குளத்தை அடைந்து, தென்புறத்தில் மாசில்லாத தீர்த்தம் ஒன்று உண்டாக்கி, அதில் நீராடி அரன்குளநாதரை வழிபாடு செய்தார். அரன்குளநாதர் ஆதிசேஷன் முன் எழுந்தருளி ‘உனது வேண்டுதலை நான் அறிவேன். உன் அன்னையின் சாபமும், கருடனது பகையாகிய பயமும் உனக்கு வேண்டாம். பாம்புகள் எமக்கு அணி ஆவார்கள். நீ எனது ஆணையால் பூமியைச் சுமக்கும் பேறு பெறுவாய்’ என்று அருளினார். அதன்படியே ஆதிசேஷன் தன்னுடைய குறைகள் நீங்கி உயர்வு பெற்றார்.

    அமைவிடம் :

    இந்த ஆலயம் பூரம் நட்சத்திற்குரிய கோவிலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர பிறந்த நாள், மாதாந்திர நட்சத்திரநாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கே வந்து வழிபடலாம். இங்கு அம்பாள் சன்னிதி முன்பாக இருக்கும் சக்கரத்தில் உட்கார்ந்து தங்களது வேண்டுதல்களை வைக்கலாம்.

    புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் உள்ளது. அங்கே இறங்கியவுடன் நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது. 
    ×