search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Assassination case"

    • திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
    • திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை.
    • முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் நெதர்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் சிறையில் நடத்தப்படுவது போன்று நடத்தப்படுவதாகவும், தங்களை விடுவிக்க கோரியும் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-

    4 பேரின் விபரங்கள், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், அவர்கள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்பட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேலும் நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக (எப்.ஆர்.ஆர். ஓ.) தலைமை இடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த உத்தரவுகளும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் எப்.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுகளின் அடிப்படையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் வெளியே அனுப்ப இயலும்.

    அந்த 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை. முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போன்று அவர்களும் நடத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
    • முதலமைச்சர், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறை தண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களது விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள்.

    6 பேரும் விடுதலை பெற்று விட்டார்கள் எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்கு உள்ளாகவே, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தந்தது.

    வெளியுலகத்திற்கும், சட்டத்தின் பார்வையில் அவர்கள் 4 பேரும் விடுதலை பெற்றதாகக் கொண்டாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றுமொரு கொடுஞ்சிறையாகவே இருக்கும்.

    தங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கக்கோரி ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

    அதுமட்டுமின்றி, தமிழக அரசு அளித்த நீண்ட சிறை விடுப்பில் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த நாட்களில் சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிக அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே, முதலமைச்சர், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
    • மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருந்தது. அதேபோல் சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் நீதிமன்றம் மத்திய அரசை விசாரித்திருக்க வேண்டும் என மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அல்லது விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

    • ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார்.
    • கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று நளினி பதில் அளித்தார்.

    திருச்சி:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இந்த சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஒட்டியுள்ள தனித்தனி அறைகளில் அவர்கள் 4 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே மேலும் வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்ய பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர்.

    பின்னர் நளினி நிருபர்களிடம் கூறுகையில், கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.

    • விடுதலையாகும் 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.
    • 4 பேரில் சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    ராஜீவ்காந்தியுடன் 15 பேரும் உயிரிழந்தனர். விடுதலைப்புலிகள் அமைப்பினரே ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    ராஜீவ் கொலை வழக்கில் 41 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு நடத்திய இந்த விசாரணையில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் படிப்படியாக பலரது தண்டனை குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன் உள்பட 7 பேரின் தூக்கு தண்டனை குறைக்கப்படாமல் இருந்தது.

    தூக்கு தண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன்பிறகு நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை காரணம் காட்டி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்தது.

    இதனை தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

    இதன்மூலம் 31 ஆண்டுகளாக சிறையில் வாடிய 6 பேரும் சிறை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய சட்ட போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. 6 பேரும் விடுதலை செய்யப்பட்டதை பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகலை 6 பேரின் வழக்கறிஞர்களும் இன்று பெற்றுக்கொள்கிறார்கள். இதன் பின்னர் 6 பேரையும் விடுதலை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதைத் தொடர்ந்து இன்று மாலையில் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும், வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை ஆகிறார்கள். நளினியும், ரவிச்சந்திரனும் பரோலில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

    நளினி வேலூரில் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் மதுரை அருப்புக்கோட்டையில் வசித்து வந்தார். இவர் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்ப நாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. விடுதலைக்கான உத்தரவு வந்த பின்னர் இவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும். மற்ற 4 பேரும் சிறையில் இருந்து வெளியில் வருகிறார்கள்.

    விடுதலையாகும் 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் இலங்கைக்கு செல்வார்களா? இங்கேயே தங்கி இருப்பார்களா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.

    ஆனால் இவர்கள் 4 பேரில் சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். மற்ற 3 பேரும் தமிழகத்திலேயே தங்கி இருக்க முடிவு செய்து உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் தங்கப்போகும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு தங்கி கொள்ளலாம் என்கிற விதி உள்ளது. இதன்படி தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நாட்டின் மனசாட்சியை உலுக்கி உள்ளது.
    • இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக விமர்சிக்கிறது.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு முற்றிலும் ஏற்க முடியாதது. முற்றிலும் தவறானது.

    இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக விமர்சிக்கிறது. முற்றிலும் ஏற்க முடியாதது என்று கருதுகிறது.

    இப்பிரச்சினையில், இந்தியாவின் மனநிலைக்கு ஏற்ப சுப்ரீம் கோர்ட்டு செயல்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    6 பேர் விடுதலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நாட்டின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. அரசியல் உலகத்தின் அனைத்து தரப்பிலும் பலத்த கவலைகளையும், விமர்சனத்தையும் உண்டாக்கி உள்ளது.

    அவர்கள் மீது சோனியாகாந்தி கருணை காட்டியதாக கேட்கிறீர்கள். சோனியாகாந்தி தனிப்பட்ட கருத்துகள் கொண்டிருப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், கட்சி அதில் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.

    கட்சியின் நிலைப்பாடு தெளிவானது, உறுதியானது. ஒரு பிரதமரின் கொலையில், ஒரு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, அடையாளம் ஆகியவை அடங்கி இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் இப்பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாட்டை முந்தைய மத்திய அரசுகளும், தற்போதைய மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வுடன் முரண்படுவோமா என்று கேட்கிறீர்கள். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியுடனே முரண்படும்போது, கூட்டணி கட்சியுடன் எப்படி உடன்படுவோம்?

    இந்த பிரச்சினையில், மறுஆய்வு மனு தாக்கல் உள்பட சட்டரீதியான எல்லா பரிகாரங்களையும் மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''பிரதமரும், மத்திய அரசும் இந்திய பிரதமரை கொலை செய்த பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்படுவதை ஆதரிக்கிறார்களா?'' என்று கேள்வி விடுத்தார்.

    • இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன.
    • ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.

    அது, 1991-ம் ஆண்டு

    மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி.

    தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.

    அந்த நாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி பலியானது, உலகையே உலுக்கி விட்டது.

    இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய தலைமுறை வாசகர்களுக்காக அந்த கருப்பு அத்தியாயத்தின் பக்கங்களில் இருந்து சில துளிகளை தூசு தட்டித்தருகிறோம்.

    ராஜீவ் காந்தி மட்டும் அன்றைய நாளில் இந்த மண்ணில் மரணத்தைத் தழுவிவிடவில்லை. அவரோடு சேர்ந்து தர்மன் (போலீஸ்காரர்), சாந்தனி பேகம் (மகளிர் காங்கிரஸ் தலைவர்), ராஜகுரு (போலீஸ் இன்ஸ்பெக்டர்), சந்திரா (போலீஸ்காரர்), எட்வர்டு ஜோசப் (போலீஸ் இன்ஸ்பெக்டர்), கே.எஸ்.முகமது இக்பால் (போலீஸ் சூப்பிரண்டு), லதா கண்ணன் (மகளிர் காங்கிரஸ் தொண்டர்), கோகிலவாணி (லதா கண்ணனின் 10 வயது மகள்), டேரில் ஜூட் பீட்டர் (கூட்டத்துக்காக சென்றவர்), முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி), சரோஜா தேவி (கல்லூரி மாணவி), பிரதீப் குப்தா (ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி), எத்திராஜூ, முருகன் (போலீஸ்காரர்), ரவிச்சந்திரன் (கறுப்பு பூனை கமாண்டோ) என 15 பேர் (மொத்தம் 16 பேர்) உருக்குலைந்து போய் மரணத்தைத் தழுவியது வரலாற்று சோகம்.

    அப்போது மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அரசு, மறு நாளிலேயே (22 மே 1991) ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டி.ஆர்.கார்த்திக்கேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து துப்பு துலக்கப்பட்டது.

    ராஜீவ் கொலையை அரங்கேற்றிய சதிகாரி தாணு, ராஜீவ்காந்தியுடனும், மற்றவர்களுடனும், தான் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் ஒருவர் இருவரலல்ல, முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் உள்பட மொத்தம் 41 பேர். 15 பேர் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டனர்.

    எஞ்சிய 26 பேர் மீதான வழக்கை விசாரிக்க சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தடா கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டில்தான் 26 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ந் தேதி தடா கோர்ட்டு நீதிபதி நவனீதம் தீர்ப்பு அளித்தார்.

    இது இந்தியாவில் பெரும் புயலைக்கிளப்பியது.

    இந்த வழக்கின் விசாரணையானது, மூடப்பட்ட கோர்ட்டு அரங்குக்குள் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் அப்போது போர்க்குரல் உயர்த்தின.

    தடா கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தமட்டில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. தண்டனை பெற்றவர்கள் நேராக சுப்ரீம் கோர்ட்டில்தான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நடந்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.குவாத்ரி ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி இதில் தீர்ப்பு வந்தது.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

    ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், சுபா சுந்தரம், சண்முக வடிவேல், பாக்கியநாதன், பத்மா, கனகசபாபதி, விக்கி என்ற விக்னேஷ்வரன், ஆதிரை, சங்கர், சாந்தி, மகேஷ் என்ற சுசீந்திரன், தனசேகரன், விஜயானந்தன், சிவரூபன், ரங்கநாத், இரும்பொறை, விஜயன், ராஜசூர்யா என்ற ரங்கன், செல்வலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் ஆவார்கள்.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரும் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிப்பதற்காக இதுவரை யாரும் நடத்தியிராத அளவுக்கு நீண்டதொரு சட்டப்போராட்டம் நடத்தினர்.

    1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ந் தேதி நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு வந்தது.

    3 நீதிபதிகள் அமர்வில் 3 பேரும் தனித்தனி தீர்ப்பு அளித்தார்கள். நீதிபதிகள் வாத்வாவும், காதரியும் 4 பேரது மறு ஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். நீதிபதி தாமஸ், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்தார். ஆனாலும் 3 பேரில் 2 பேர் பெரும்பான்மை தீர்ப்பு உறுதியானது. 4 பேரின் தூக்கும் உறுதியானது.

    1999 நவம்பர் 5-ந் தேதி 4 பேரையும் தூக்கில் போட முதல்முறையாக ஏற்பாடு ஆனது. அதற்கான உத்தரவும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றது.

    ஆனால் 4 பேரும் கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவர்களது கருணை மனுவை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இதனால் தூக்கு நிறுத்தப்பட்டது.

    மரண நிழலில் இருந்து சற்றே அவர்கள் அப்போது தப்பித்தனர்.

    மேலும் கவர்னர் தங்கள் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் முறையீடு செய்தனர். அதை நீதிபதி கே.கோவிந்தராஜன் விசாரித்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமல் 4 பேரின் கருணை மனுவை கவர்னர் நிராகரித்தது செல்லாது என 1999 நவம்பர் 5-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி விவாதித்து, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது என பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி கவர்னர் பாத்திமா பீவி உத்தரவிட்டார்.

    இதனால் நளினியின் தலை, தூக்குக்கு தப்பியது.

    ஆனாலும் அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி அப்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்காத நிலையில், அவரது மனுவை ஐகோர்ட்டு 2010 ஏப்ரல் 6-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நிராகரித்து விட்டார் என 2011 ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தகவல் வெளியானது. இதையடுத்து மூவரும் 2011 செப்டம்பர் 9-ந் தேதி வேலூர் சிறையில் தூக்கில் போடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்தது. ஆனால் மூவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க, தூக்கில் போட 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா அமர்வு உத்தரவு போட்டது.

    3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2011 ஆகஸ்டு 30-ந் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 3 பேரும் தூக்கில் போடப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி 2012 மே மாதம் 1-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் அமர்வு விசாரித்து 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    3 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432, 433 தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கலாம் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 3 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது விடுதலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு சென்றது.

    அதை தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமர்வு ஏற்று 3 பேர் விடுதலைக்கு தடை விதித்து 2014 பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த ஒரு வாரத்தில் (2014 பிப்ரவரி 27) உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதைத் தள்ளுபடி செய்து 2014 ஏப்ரல் 1-ந் தேதி உத்தரவிட்டது. (அதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்த நிவாரண மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.)

    7 பேரது விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து அதே ஆண்டின் ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டது.

    அதில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் நீதிபதிகள் லலித்தும், சப்ரேயும் மாநில அரசுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என தீர்ப்பு கூறினர். பெரும்பான்மை தீர்ப்புபடி, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு 2015 டிசம்பர் 2-ந் தேதி வந்தது.

    7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசை தமிழக அரசு நாடியது. ஆனால் மத்திய அரசு மறுத்து விடவே, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

    அதை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்து, இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2018 ஜனவரி 23-ல் உத்தரவிட்டது.

    7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2018 செப்டம்பர் 6-ந் தேதி உத்தரவிட்டது.

    அதன்படி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ல் கூடி, 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தது.

    இதற்கு மத்தியில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் பலியான 3 பேரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு 2019 மே 9-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    7 பேர் விடுதலையில் ஜனாதிபதிக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

    இது 7 பேர் விடுதலையில் சிக்கலாக மாறியது.

    இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது.

    அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே மாதம் 18-ந் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்து உத்தரவிடுமாறு நளினி, ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து நளினி, ரவிச்சந்திரன் மட்டுமல்லாது முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் என 6 பேரையும் விடுதலை செய்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பும், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்திய அரசியல் சாசனம் பிரிவு 142-ஐ பயன்படுத்தித்தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமல்ல, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருந்த 6 பேரை வெளியே கொண்டு வந்துள்ள சுதந்திர தீர்ப்பு!

    • கடந்த 32 நாட்களாக முருகன் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார்.
    • முருகன் உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது.

    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் முருகன். இவரது உடல் நலம் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவரது மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா (வயது 81) மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் நளினியும், அவரது கணவர் முருகனும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றனர். தற்போது என் மகள் நளினி பரோலில் வெளியில் வந்து வேலூரில் என்னுடன் தங்கி உள்ளார்.

    வேலூர் சிறையில் உள்ள என் மருமகன் முருகனை கடந்த 8-ந் தேதி என் வக்கீல்கள் புகழேந்தி, எழிலரசு ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது முருகன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 32 நாட்களாக அவர் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார். அதனால், அவரது உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது. அவரது உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து இருப்பதாக கருதுகிறேன்.

    எனவே, அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், சிறை துறை.டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 9-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். என் மனுவை பரிசீலித்து சிகிச்சையை முருகனுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
    • இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று உணவு சாப்பிட மறுத்தார். மேலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

    இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை. 2-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    • பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது.
    • நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது.

    இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என தெரிவித்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் நளினி சார்பில் வக்கீல்கள் ஆனந்த்செல்வம், ஆனந்த் திலீப் லங்க்டே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளேன். தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளையும், மன உளைச்சல், உடல் சுகவீனம் உள்ளிட்டவற்றையும் அனுபவித்துள்ளேன்.

    வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேரறிவாளனை ஜாமீனில் விடுவித்தது போல, தன்னையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதன்பிறகு தனது மனுவை முழுவதுமாக விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக அரசின் பரிந்துரை பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. எனவே அனைவருக்கும் விடுதலை பெறுவதற்கான உரிமை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது நினைவுகூரத்தக்கது.

    நளினிக்கு 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    நளினிக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்த டிசம்பர் 27-ந்தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

    இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளித்தார். நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. 

    அதன் பின்னர், நளினிக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நாளை சிறைக்கு திரும்ப வேண்டிய நளினி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×