search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parenting"

    • மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது.
    • சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது.

    மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை வளர்ப்பு எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

    சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது பெற்றோரின் கடமை. அப்போதுதான், `மகிழ்ச்சியான ஹார்மோன்கள்' மூளையில் உருவாகும்.

    செரோடோனின், டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடோசின்... இவை நான்கும் தான் மகிழ்ச்சியான ஹார்மோன் என அறியப்படுகின்றன. இவை மூளையில் உற்பத்தியாகும் அளவை பொறுத்துதான், குழந்தைகளின் மனநிலையும், உணர்ச்சியும் வெளிப்படும். அவை குழந்தைகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இயங்க வழிவகுக்கும். அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும்.

     செரோடோனின்: மனநிலை, தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. (சூரிய ஒளியில் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, பருப்பு வகைகளை உண்பதன் மூலம் இதை அதிகரிக்கலாம்.)

    டோபமைன்: இன்பம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. (ஆழ்ந்து தூங்குவது, பரிசுப்போட்டிகளில் கலந்துகொள்வது, மீன், முட்டை, பால் உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம்)

    எண்டோர்பின்: இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றன. (சிரிப்பு, சுவாச பயிற்சி, இசை, கார உணவுகள் மூலம் அதிகமாக்கலாம்.)

    ஆக்ஸிடோசின்: இது பிணைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கிறது. (அரவணைப்பு, பிணைப்புக்கு உதவும்)

    இந்த செயல்பாடுகளை பெற்றோர் தங்களது தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகளின் `மகிழ்ச்சியான ஹார்மோன்' அளவை அதிகரிக்கலாம். அது குழந்தைகளின் ஒட்டுமொத்த மனநிலையையும், நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு பெற்றோர் தங்களது வீட்டை குழந்தைகளின் மகிழ்ச்சியான இடமாக மாற்றும்போது, அவர்களது மூளை மேம்படும். திறமைகளுடன் தனித்துவமாக வளர்வார்கள். கல்வி, விளையாட்டு, பரிசுப்போட்டிகள் என எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பார்கள்.

    • அறிவு திறன் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள் உள்ளது. உங்கள் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையின் திறனையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

     விளையாட்டுகள்:

    ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு வேடிக்கையான மற்றும் சவாலான பிரைன் கேம்கள் தேவைப்படுகின்றன. இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும். அத்துடன் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தை வழங்க வேண்டும், மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. எனவே உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பள்ளிப் பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    தூக்கம்:

    குழந்தைகளின் நினைவாற்றலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்கள் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம், மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெற்றிருப்பார்கள்.

    நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் ப்ரோசீடிங்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர்.

     பச்சை காய்கறிகள்:

    பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சிறந்த காய்கறிகளாகும். உங்கள் குழந்தை தினமும் இவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான குழம்புகளிலும் பயன்படுத்தலாம்.

     நட்ஸ்:

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

    முட்டை:

    நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது. இவை பெரும்பாலும் முட்டை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
    • மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர்.

    தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு.

    இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம். உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

    அம்மாக்களின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்சினைகளை சந்திக்கும்போது தற்கொலை முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இளம்வயதினரின் தற்கொலை முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது தாய்மார்களின் எண்ணங்களை சார்ந்தது.

    தற்கொலை எண்ணங்களுக்கு மரபியல் அல்லது பிற காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பெரும்பாலாக இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் இளைஞர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள்.

    இந்தியாவை பொறுத்தவரை ஒரு நாளில் 36 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் 13 வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணங்களுக்கு பெற்றோர்களின் மனநிலை காரணமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

    தற்கொலை எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது?

    * சில குழந்தைகள் சிறு விஷயத்திற்கு கூட கோபப்படுவது, காரணமே இல்லாமல் கோபமாக இருப்பது, எதற்கெடுத்தாலும் எரிந்து

    விழுவது என்று அவர்கள் காணப்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.

    * முடிவெடுக்க முடியாமல் திணறுவது, குழம்பிப்போவது போன்ற காரணங்களாலும் ஏற்படும்.

    * முன்யோசனையின்றி முடிவுகளை எடுப்பது, ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பே அதன் முடிவை கணித்து வருந்துவது.

    * எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளத்தெரியாது.

    * குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்துகொண்டால் அதாவது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ முறைகேடாக நடந்துகொண்டாலும் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளும் அதாவது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்திருந்தால் அதில் இருந்து மீண்டுவரமுடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் மற்றும் தாய்-தந்தை கருத்துவேறுபாடு, பிரிதல் போன்றவையும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    * படிப்பில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது படிப்பு விஷயத்தில் ஆர்வமின்மை. அதனால் ஏற்படும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட தற்கொலை எண்ணத்துக்கு வழிவகுக்கின்றன.

    இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் தற்கொலைகளுக்கு கல்வி சார்ந்த தோல்வி பயம், காதல் தோல்வி போன்றவை தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன. சில சமயங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கூட காத்திராமல் தற்கொலை செய்து கொள்வது போன்ற மிகவும் வேதனையான செயல்களும் நிகழ்வதுண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் தற்கொலைப் பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாகவும் தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    மனச்சோர்வினால் தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும். மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தோள் சாய. தோள் தந்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.




    • பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள்.
    • 20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள்

    படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள். ஆனால் பாடங்களை படிக்கும்போது ஒரு சில நுட்பங்களை கையாண்டால் அவற்றை எளிதாக மனதில் பதிய வைக்க முடியும். இவ்வாறு நினைவாற்றல் நுணுக்கங்களை கடைப்பிடிக்கும் மாணவர்கள், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...

    நீங்கள் படிக்கும் பாடங்களை ஒலிப்பதிவு (ரெக் கார்டு) செய்து வைத்துக் கொண்டு, அதை ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது ஒலிக்கச் செய்து கேளுங்கள். உங்களுடைய குரலில் பதிவு செய்யப்படும் தகவல்களை முளை சீக்கிரமாகவே உள்வாங்கிக்கொள்ளும்.

    20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள். முதல் இருபது நிமிடங்கள் படித்த பாடத்திற்கும். அடுத்த 20 நிமிடங்கள் படிக்கப்போகும் பாடங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் புதிய பாடங்கள் எளிதாக மனதில் பதியும்.

    படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது, அவற்றை மனதில் நிறுத்துவதற்கான வழி என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 'மைண்ட் மேப் எனப்படும் மன வரைபடம் செய்யும் முறையும் அதிக பலன் தரும். ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் 'மைண்ட் மேப்' செய்யுங்கள்.

    தூங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் படித்த பாடங்களை ஒரு கதை போல நினைவுபடுத்துங்கள்.

    முக்கியமான வினாக்கள் அல்லது மறந்து போகக்கூடிய வினாக்களை அடிக்கடி படியுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அவற்றை திரும்பத்திரும்ப சொல்லிப் பாருங்கள்.

    பாடங்களை சில பொருட்கள் அல்லது சூழ் நிலைகளுடன் தொடர்புப்படுத்தி மனப்பாடம் செய்யுங்கள். உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள்.

    படித்த பாடங்களில் உள்ள தகவல்களை 'மைண்ட் மேப்' செய்யும் முறை:

    முதலில் மனதுக்குள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதன் நடுவில் ஒரு சிறிய வட்டம் வரையுங்கள். அதற்கு நீங்கள் படிக்கப்போகும் பாடத்தின் முதன்மை தலைப்பை வையுங்கள். அதைச் சுற்றிலும் பல வட்டங்களை வரைந்து, அவற்றில் எல்லா துணை தலைப்புகளையும் அடுக்குங்கள். அவற்றின் கீழ் அந்த தலைப்புகளுக்கான இதர தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். இவ்வாறு கற்பனை செய்து படிக்கும்போது நீங்கள் படித்தது எளிதாக மனதில் பதியும்.

    நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரையாடுங்கள். நீங்கள் படிக்கும் பாடத்தின் பொருள் புரியவில்லை என்றால். அதை புரிந்து கொண்ட பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

    பாடங்களை உணர்ந்து படியுங்கள். உதாரணமாக உடற்கூறியல் தேர்வுக்கு படிக்கும்போது, உடற் கூறு மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, அவற்றின் பெயர்களை உரக்கச் சொல்லி படியுங்கள், உங்களுக்கு பிடித்த பாடல்களின் ராகத்தில், பாடங்களை அமைத்துப் பாடிய படி படியுங்கள். இவ்வாறு செய்யும்பொது பாடங்கள் நினைவில் பதியும். உலகம் முழுவதும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

    • தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோர்கள் பிசியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

    குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெற்றோருக்கு முதன்மை பொறுப்பு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆளுமையின் முழுமையான இணக்கமான வளர்ச்சிக்கு, அவர்கள் ஒரு குடும்ப சூழலிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் கொண்ட சூழ்நிலையிலும் வளர வேண்டும்

    * ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் என்றால் என்ன? தவறான தொடுதல் என்றால் என்ன? என்பதை பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * மேலாடை இன்றியோ, ஆடை இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாக தெரியலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    * குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடுநேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனமாக இருக்க வேண்டும்.

    * பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால் அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர் வீட்டு முகவரி உள்பட வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    * தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    * நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

    • குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
    • குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை.

    குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை. அதனால் குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பெற்றோர் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குளிரை சமாளிப்பதற்கு ஏதுவான ஆடைகளை வாங்கி கொடுப்பார்கள். குளிரை விரட்டும் கவசத்தை தலைக்கு அணிவிப்பார்கள்.

    ஆனால் நார்வே நாட்டில் இதற்கு தலைகீழாக நடக்கிறது. அங்கு பனி காலம் தொடங்கிவிட்டால் சக்கர தள்ளுவண்டியில் குழந்தைகளை ஏற்றிவிடுகிறார்கள். விளையாடுவதற்குத்தான் குழந்தைகளை அதில் வைக்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.

    அதுதான் குளிர்காலத்தில் குழந்தைகளின் வசிப்பிடம். ஆம்! குளிர்காலத்தில் குழந்தைகள் வீட்டு படுக்கை அறைக்குள் சொகுசாக தூங்குவதில்லை. இந்த தள்ளுவண்டியில்தான் தூங்கவைக்கப்படுகிறார்கள். அதுவும் வீட்டுக்கு வெளியேதான். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.

    கடுமையான குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய அப்பகுதியின் குளிர் காலநிலைக்கு குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக பெற்றோர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் உறங்குவதை விடவும், வெளியில் அதிக நேரம் உறங்குவதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

    குழந்தைகளை இப்படி குளிரில் நடுங்க விடுவது புதிய நடைமுறை அல்ல. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றப்படும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது.

    • குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
    • உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதிலேயே எண்ணி பார்க்க முடியாத சாதனைகளை அசாத்தியமாக படைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை உலக சாதனை படைத்து 'கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு', 'இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு' ஆகிய சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது.

    அந்த குழந்தையின் பெயர் சாய் ஈஷா. தந்தை சக்தீந்திரன், தாய் முத்தம்மாள். புலியூர்குறிச்சி கிராமத்தில் வசிக்கிறார்கள். சக்தீந்திரன் டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இல்லத்தரசியான முத்தம்மாள் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே பி.ஏ. படித்து வருகிறார்.

    120 பொருட்கள் மற்றும் காட்சிகளை சரியாக அடையாளம் காட்டும் புத்திக் கூர்மை தான் இவர்களின் மகளான சாய் ஈஷாவை சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வைத்துள்ளது. குழந்தையின் திறமை பற்றி தாயார் முத்தம்மாள் பகிர்ந்து கொண்டவை...

    ''சாய் ஈஷா 9 மாத குழந்தையாக இருந்தபோது, மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பார்க்கும் பொருட்களை சரியாக அடையாளம் காட்டத் தொடங்கினாள். அதை நான் கவனித்தேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்தால் அதை அவள் அப்படியே திருப்பி செய்து காட்டுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி, விருந்தினர்கள் வீட்டுக்கு வரும் போதும் சரி வணக்கம் சொல்வாள். இதையெல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுக்காமலேயே செய்தாள்.

    இதை வைத்து நாம் செய்வதை எல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு செயல்படுகிறாள், அதனால் அவளிடம் எளிதாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம்.

    எந்த வகையில் பயிற்சி அளித்தீர்கள்?

    ஒவ்வொரு பொருளாக கொடுத்து பயிற்சி அளித்தோம். எந்த பொருளையும் மறக்காமல் நினைவில் வைத்து சொல்ல தொடங்கினாள். இப்படி 120 பொருட்களை 10-வது மாதத்தில் சரியாக அடையாளம் காட்டினாள். ஆரம்பத்தில் காலையில் எழுந்ததும் அவள் பார்க்கும் சூரியன், இரவில் பார்க்கும் நிலவு ஆகியவற்றை காட்டிக்கொடுத்து பயிற்சி அளித்தோம். இதை பிளாஷ் கார்டில் காண்பித்து கேட்கும்போதும் அதை அவள் சரியாக அடையாளம் காட்டினாள்.

    அதேபோல் வீட்டில் உள்ள பொருட்களை காட்டி பயிற்சி அளித்து விட்டு, மறுநாள் கேட்கும் போது சரியாக அடையாளம் காட்டினாள். இவ்வாறு அவளுக்கு தினமும் பயிற்சி அளித்தோம். மேலும் உடலின் பாகங்களை பட அட்டைகள் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். அதையும் அவள் சரியாக அடையாளம் காட்டினாள். சில படக்காட்சிகளை லேப்டாப் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். இவ்வாறு 80 படங்களை சரியாக அடையாளம் காட்டினாள்.

    சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது பற்றி?

    கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய 2 உலக சாதனை புத்தகத்துக்கும் நாங்கள் விண்ணப்பித்தோம். அப்போது உலக சாதனை புத்தக நிர்வாகிகள், 'சாதாரணமாக குழந்தைகள் 50 பொருட்களை அடையாளம் காட்டுவார்கள். அதிக நினைவாற்றல், புத்திக்கூர்மை உள்ள குழந்தையாக சாதனை படைக்க வேண்டும் என்றால் 100-க்கும் மேலான பொருட்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்கு' என்றனர்.

    10 மாதத்தில் இதுவரை எந்தக் குழந்தையும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களை அடையாளம் காட்டி சாதனை படைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

    இந்த சாதனையை படைக்க குழந்தைக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தோம். இந்த பயிற்சியின் தாக்கம் 120 பொருட்கள் வரை அடையாளம் காட்டினாள். அதுதொடர்பான வீடியோ காட்சிகளை உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பியிருந்தோம்.

    அதைப்பார்த்துவிட்டு, வீடியோ கால் மூலம் குழந்தையை பரிசோதித்து உலக சாதனை புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். அதற்கான விழா சென்னையில் நடந்தது. அதற்கு எங்களை அழைத்திருந்தார்கள். உடல்நலக்குறைவு காரணமாக எங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் விருதை எங்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

    இந்த ஆண்டு வெளியாகும் அவர்களுடைய சாதனை புத்தகத்தில் 'எக்ஸ்டிராடினரி கிராஸ்பிங் பவர்' பிரிவில் எனது குழந்தையின் பெயரும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்தனர். விருது கிடைத்ததாக எனக்கு தகவல் வந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    இந்த சாதனை புத்தகத்துக்கு நானாகத்தான் விண்ணப்பித்தேன். குழந்தை விருது பெற்றது தொடர்பாக எனது கணவரிடம் நான் சொன்னபோது அவர் நம்பவில்லை. விருது வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அவரும் நம்பியதோடு எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷம் அடைந்தனர்.

    எதிர்கால லட்சியம்?

    எதிர்காலத்தில் அவள் என்ன ஆக விரும்புகிறாளோ அதற்கு நான் உதவியாக இருப்பேன். அவள் வளரும்போதுதான் லட்சியம், நோக்கம் எல்லாம் தெரியவரும். எதில் ஆர்வம் காட்டுகிறாளோ அது தொடர்பாக படிக்க வைக்க எண்ணியிருக்கிறேன். எனது குழந்தை டாக்டராக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதை அவளிடம் திணிக்க விரும்பவில்லை. அவளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பாக படிக்க வைப்பேன்.

    அவளுக்கு இருக்கிற நினைவாற்றல், புத்திக்கூர்மையை பயன்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் அவளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அதிலும் அவள் சாதனை படைப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என பெருமிதத்துடன் கூறுகிறார், முத்தம்மாள்.

    • எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும்.
    • என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம்.

    அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும், அதற்கு இப்போது என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம் என வழிகாட்டுகிறது இந்த பதிவு.

    அனிமேஷன் சார்ந்த படிப்புகள்

    திரைப்படங்கள் முதல் மொபைல் செயலிகள் வரை பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அனிமேஷன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கண்டுபிடிக்கப்போகும் பொருள்களுக்கு முன்வடிவம் கொடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனிமேஷன் உதவுகிறது.

    நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ்

    மருத்துவப் படிப்பு என்றால் எம்.பி.பி.எஸ் என்று மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அதைத் தாண்டியும் பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்தான் எம்.பி.பி.எஸ்-க்கு அடுத்தபடியாகப் பலரும் கால்பதிக்கும் இடமாக இருக்கிறது. இதற்கும் அடுத்தபடியாக இருப்பது, நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ். இந்தப் படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    வர்த்தக கலை படிப்புகள்

    கடந்த கால் நூற்றாண்டாக அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இப்போது அந்தப் படிப்புகளுக்கான வரவேற்பு சற்றுக் குறைந்து, வர்த்தகப் படிப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கித் துறை, இன்சூரன்ஸ் துறை, மியூச்சுவல் பண்ட் துறை எனப் பல துறைகள் கணினி மயமாகிவிட்டன. இதனால் அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை வழங்கப்படுவது சாத்தியமாகி இருக்கிறது.

    மீன்வளப் பொறியியல்

    மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப் பலரும் அறிந்த பொறியியல் படிப்புகள் ஒருபக்கம் இருக்க, மீன்வளப் பொறியியல் போன்ற பலரும் அறியாத பொறியியல் பாடப்பிரிவுகள் நிறையவே உள்ளன. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கும் பிரிவும் நல்ல கல்லூரியும் அவசியம்.

    மீன்வளத்துறை சார்ந்து மீன்வளப் பொறியியல் நான்காண்டு படிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 35 இடங்கள் சேர்க்கைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    மருத்துவப் படிப்புகள்

    மனிதர்களுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவப் படிப்புக்கு என்றுமே தனி மவுசு உண்டு. காரணம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களின் தேவையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போதைய சூழலில், மருத்துவத்துறையில் தனிப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    ரோபாட்டிக் சர்ஜரி, ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ் முதலிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும்பட்சத்தில் மருத்துவப் படிப்பு படித்தவர்களுக்கு இனி சிறப்பான வரவேற்பு கிடைக்கும். கால்நடைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இனிவரும் காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்

    பொறியியல் துறையை எடுத்துக்கொண்டால், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொறியியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பொறியாளர்களுக்கான தேவை என்றுமே அதிக அளவில் உள்ளன. ஐ.டி தொழில்நுட்பத்தின் தேவை குறிப்பிட்ட சில பிரிவுகள் என்றில்லாமல், இன்று அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுகின்றன.

    தாவரவியல் மற்றும் விலங்கியல்

    இளங்கலை மூன்றாண்டு படிப்பான தாவரவியல் மற்றும் விலங்கியல், பலராலும் கவனம் பெறாத படிப்பாக உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான அடிப்படை, பள்ளிகளில் படிக்கிற தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகள்தாம். இன்று தனியார் கல்லூரிகள் அதிக அளவில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளை வழங்குவதில்லை. இதனால் பள்ளிகளில் இந்தப் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகள் படித்தால் எதிர்காலத்தில் குறைந்தபட்சம் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.

    கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு

    எல்லோருக்கும் தெரிந்த படிப்புதான் கணிதம் என்றாலும் இன்றைக்கு கம்ப்யூட்டர் மற்றும் நிதி சார்ந்த துறை உள்பட பல்வேறு படிப்புகளுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றனர் கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பினைப் படித்த மாணவர்கள். ஆசிரியர் பணி என்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பினைத் தாண்டி, டேட்டா அனாலிட்டிக்ஸ், ஆக்சூவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்பு இருக்கிறது. வெறும் கணிதப் படிப்பு என்பதுடன் நின்றுவிடாமல், பைதான், ஆர் லாங்குவேஜ் ஆகிய படிப்புகளையும் கற்று வைத்திருந்தால், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இளங்கலை கணிதப்படிப்பு படித்தாலே நல்ல வேலை கிடைக்கும் என்கிறபோது, முதுகலை கணிதப் படிப்பினைப் படித்தால் எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

    • சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது.
    • நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும்.

    இந்த காலத்து குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். கற்றுக்கொடுக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கும், சில ஸ்மார்ட்டான பயிற்சிகள் தேவை.

    குறிப்பாக, கவனம் சிதறாமல் இருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யவும் ஒருசில மன பயிற்சிகள் தேவைப்படுகிறது'' என்று பக்குவமாக பேச ஆரம்பிக்கிறார், திரேசா.

    சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்.சி. சைகாலஜி படித்திருக்கிறார். கூடவே, குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது குறித்தும், கவனிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறார். இதுசம்பந்தமான ஆய்வுகளில் கடந்த 10 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பதோடு, இதற்காக தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

    அந்த அனுபவத்தின் அடிப்படையில், நினைவாற்றல் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மீது அதீத அக்கறை காட்டுவதோடு, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கிறார்.

    ''சாதாரண மனிதர்கள், சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள்'' என்று கூறுபவர், சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கிறார்.

    ''5 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. பல வருடங்களாக, குழந்தைகளுடன் பேசி பழகி ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான், இதை உறுதிப்படுத்தினோம்.

    நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மை பயக்கும் பயிற்சிகளைத்தான், நான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்'' என்பவர், இத்தகைய பயிற்சிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றி, அதை சுலபமான வழிகளில் கொண்டு சேர்க்கிறார்.

    ''கல்வி, வகுப்பு தேர்வுகள்.... என ஏற்கனவே 'ஸ்டிரெஸ்' மனநிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் சுகமான அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர, கூடுதல் சுமையாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், அவர்கள் விரும்பும் வகையிலான பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறோம்.

    எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், யோகா-தியானம்... என பயிற்சி அனுபவத்தை விளையாட்டு அனுபவமாக்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன்.

    என்னுடைய பயிற்சிகளை குழந்தைகளும் விரும்புகிறார்கள்'' என்றவர், இந்த பயிற்சிகள், அவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் மாற்றும் என்கிறார்.

    ''நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்திருப்பார்கள். சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்வார்கள்.

    பிரச்சினைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட பயிற்சிகள்தான், இந்த காலத்துக் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது'' என்பவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார்.

    • கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
    • டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.

    வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...

    கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

    முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.

    சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

    கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.

    இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.

    • நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியம்.
    • இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டுள்ளது.

    தங்கங்களே நாளை தலைவர்களே

    நம் தாயும் மொழியும் கண்கள்

    சிங்கங்களே வாழும் தெய்வங்களே

    நம் தேசம் காப்பவர் நீங்கள்

    -என்று மாணவர்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் தான் இவை. இது போன்ற எண்ணற்ற கவிஞர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி தேசத்தின் தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதில் உறுதியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மாணவர்களின் அறிவும், செயல்திறனும் உள்ளது.

    நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இன்றும் உலக அரங்கில் இளைஞர்கள் அதிகம் உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. அவர்களால் எந்த சவால்களையும் எளிதாக வென்று விட முடியும். எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் இடையே எழுந்து உள்ள மோதல் போக்கு பல்வேறு தரப்பினருக்கும் கவலை அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது.

    இன்றைய சூழலில் குடும்பங்களில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அவர்களை கையாளுவதில் மென்மையான போக்கே பெற்றோரிடம் இருக்கிறது. மேலும் அவர்களை முழு நேரமும் கண்காணித்து, கண்டிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் பிள்ளைகள் விரும்புவதை செய்து கொடுக்கவும், அவர்களின் எதிர்காலத்துக்காகவும் வேலை, வாழ்வாதாரம் என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் தன்வசதி ஒன்றையே பெரிதாக கருதிக் கொள்கிறார்கள். இதனால் சமூக ஓட்டத்தில் மற்றவர்களோடு இணக்கமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள தவறி விடுகிறார்கள்.

    ஆனால் மாணவ- மாணவிகளின் பெரும் பகுதி நேரம் பள்ளிக் கூடத்திலேயே கழிகிறது. எனவே அவர்களை கண்காணிப்பது, கையாளுவது என்பது ஆசிரியர்களுக்கு இயல்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்களால் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் சந்தேகம் தான். மேலும் மாணவ- மாணவிகளை கையாளுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    அதோடு இன்றைய மாணவ- மாணவிகளிடம் இருக்கிற தைரியம், மூர்க்கமான போக்கு போன்றவை ஆசிரியர்களையே அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இதனால் வகுப்பறைகளில் பாடங்களை நடத்தி முடித்து வெளியேறுவது என்பதே சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

    மேலும் வகுப்பறையில், மாணவ-மாணவிகளிடம் காணும் மாறுபாடுகளை சரி செய்வது குறைந்து வருகிறது. மேலும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு இருந்த பயம், மரியாதை இன்றைக்கு அர்த்தமற்றதாக மாறி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் வீட்டிலும், பள்ளியிலும் பரவலாக மாணவர்களுக்கு ஒரு கண்டிப்பற்ற சூழல் நிலவுகிறது. அதில் சில மாணவர்கள் குழு மனப்பான்மையில் ஒன்று சேரும் போது வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    அதுமிகமோசமாகி வீடு புகுந்து தாக்குவது போன்ற குற்றங்களை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்கிறது. அது மாணவ சமுதாயத்தின் மீதே தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வன்முறையால் அழிவு தான் நிகழும். ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்காது. மேலும் யார் மீதும் வன்முறை எண்ணம் இருக்க கூடாது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் அதிக எண்ணிக்கை யில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக நடைபெற்ற கவுன்சிலிங்கில் 40 ஆசிரியை கள் உள்பட 122 பேர், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம் என்று புறக்கணித்து விட்டனர். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பள்ளியில் நிர்வாக சிக்கல்கள் எழுகிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. பள்ளிச் சூழலிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள், கடிவாளம் இல்லாத குதிரை போல் ஆகி விடுகிறது. அது ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதிக்கப் படுகிறது. எனவே தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    இது மட்டுமின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்- ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. அப்போது தான் மாணவ- மாணவிகளின் படிப்பு மட்டுமின்றி சமூக நலப் பண்புகளை மேம்படுத்தி நல்லிணக்கத்தை கொண்டு வருவதில் வெற்றி காண முடியும். அதற்கான தொழில்நுட்ப தொடர்பு வசதிகள் தற்போது துணையாக இருக்கிறது. அதன் வழியாக கலந்துரையாடல் நிகழ்கிற போது மாணவர்கள் மத்தியில் இயல்பான மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படும்.

    தற்போது டி.வி., செல்போன், சமூக வலைத்தளங்கள், சினிமா, அரவணைப்பு அற்ற நிலை என்று ஏராளமான புறச்சூழல்கள் உள்ளன. அவை மாணவர்களிடம் ஆக்ரோஷத்தையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைந்து இருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டதாக 2019-ம் ஆண்டு - 2,686 வழக்கு, 2020-ம் ஆண்டு - 3,394 வழக்கு, 2021-ம் ஆண்டு - 2,212 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதோடு பள்ளி மாணவர்களிடம் வேகமாக பரவும் தவறான பழக்கம் அவர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது போன்ற நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், நெறிப்படுத்தி கண்டிக்க கூடிய தோழமைகள் குறைந்து விட்டனர். இதனால் சில மாணவர்கள் மனம் போன போக்கில் எதிர்காலம் குறித்த அச்சமின்றி குற்றம் செய்ய துணிகின்றனர்.

    இதனால் மாணவர் சமூகம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மாணவர்களின் அடையாளம் என்பது கல்வி கற்பது மட்டும் தான். எனவே வகுப்பறை சூழலை கொண்டாடுவதன் மூலம் தான் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்த வேண்டும். அதை விடுத்து வன்முறை எண்ணத்தில் வேறுவிதமான செயல்களில் ஈடுபட்டால் எதிர்காலம் பாதிக்கும்.

    எனவே மாணவர்களை சரிப்படுத்த அன்பான வார்த்தைகள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு கண்டிப்பான பார்வையும் மிகமிக அவசியம். வேறுபாடுகளை மறந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தான் சீருடை வழங்கப்படுகிறது. அதற்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு. அத்தகைய சீருடை அணிந்த மாணவ- மாணவிகள் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உயர்கல்வி கற்று புகழ் பெற வேண்டும். அது தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல மனித சமூகத்துக்கும் நலம் அளிக்கும் என்பதை மாணவ- மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

    • வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.
    • பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

    எப்படி படிக்க வேண்டும்? படிப்பதை எப்படி மறக்காமல் இருப்பது, படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    படிப்பதை நாம் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது அதை வைத்து உயர்ந்த இடத்துக்கு சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவோ இருக்க கூடாது. வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.

    ஒரு ஆறு வயது குழந்தைக்கு நீங்கள் படித்த விஷயத்தை புரிய வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கே அதைப்பற்றிய புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. படித்ததை நியாபகம் வைத்துக்கொள்வதற்கு ஒரு சில கோட்பாடுகளை நாம் பார்க்கலாம்.

    படிக்கும்போது குழந்தைகள் படித்ததை அப்படியே மனப்பாடம் செய்து படித்தோம் என்றால் வெறும் வார்த்தைகளை மட்டுமே நாம் புரிந்து வைத்திருப்போம். இதனால் அந்த பாடத்தில் உள்ள வார்த்தைகளை சீக்கிரமே மறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

    இரண்டாவதாக குழந்தைகளுக்கு புரியும் மொழிகளில் நாம் கற்ற பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பாடத்தை அவர்களுக்கு தெரிந்த தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் புரியும் அளவுக்கு அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் புரிந்து படிப்பதற்கும், படித்ததை அவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். படித்ததை அவர்களுக்கு எளிதாக புரியும் அளவுக்கு உதாரணங்களை கூறி சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    உதாரணத்திற்கு அவர்கள் விரும்புகிற காற்றுன் திரைப்படங்கள், விளையாட்டுகளை கூறி அதனை விளக்க வேண்டும். அப்போது இன்னும் ஆர்வமாக படிப்பதற்கு வழிவகுக்கும்.

    மூன்றாவதாக குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்தும் படித்த விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். அதாவது படித்த பாடங்களை புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா? பிடிக்கவில்லையா? சூழ்நிலை சரியாக இல்லையா? ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கிறார்களா? என்பன போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவது மற்றும் இன்னும் தெளிவாக அவர்களுக்கு புரிய வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    இப்போது நம்மகிட்ட இன்டர்நெட் இருக்கிறது. எக்கச்சக்கமான கம்யூனிகேஷன் சேனல்கள் உள்ளது. ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்கு நிறையபேர் இருக்கிறார்கள். எனவே எந்த விஷயத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதன் மூலம் அல்லது அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள இன்று வாய்ப்புகள் நிறைய வந்துவிட்டன.

    கடைசியாக குழந்தைகள் படித்ததை தெரிந்துகொண்டபிறகும் சிலருக்கு அது படிக்கும்போது மட்டுமே நினைவில் இருக்கிறது. ஆனால் அது 3 மாதங்கள் கழித்து கேட்டால் நினைவில் இருப்பதில்லை என்றால் இன்னும் பயிற்சி அவசியம். அதாவது படித்த பாடத்தை குழந்தைகள் எவ்வாறு பயின்றார்களோ அதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு குழந்தைகள் கற்றுக்கொண்ட பாடத்தை அவர்களுடைய நண்பர்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ முதலில் சொல்லித்தர பழக்க வேண்டும்.

    குழந்தைகள் பள்ளியில் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை வீட்டிற்கு வந்ததும். ஆசிரியர் நடத்திய பாடங்களை பெற்றோருக்கு புரியும்படியாக எடுத்துக்கூற வேண்டும். இதில் பெற்றோர்கள் தவறு ஏதும் இருந்தால் திருத்திக்கொள்ளலாம். இன்னும் எளிமையாக கற்கும் அளவிற்கு அவர்களுகு சொல்லிக் கொடுக்கலாம். அவ்வாறு குழந்தைகளை நாம் பழக்கினால் தான் குழந்தைகளுக்கு அவர்கள் படித்த பாடங்கள் எத்தைனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்கும்.

    சரி இவ்வாறு செய்வதற்கு நிறைய நேரம் எடுக்குமா? என்றால், நாம் நினைப்பதைவிட குறைந்த அளவு நேரமே தேவைப்படும். நாம் ஒரு பாடத்தை 10 தடவைக்கு மேல் படிப்பதை விட இரண்டு, மூன்று தடவை படிக்கும் போதே அவர்களுக்கு புரியும்படி கற்றுக்கொடுத்துவிட்டால் நன்றாக அவர்களுக்கு பதிந்துவிடும்.

    யோசித்துபாருங்கள் ஒரு பாடத்தை குழந்தைகள் மாதத்தேர்வுக்கும் படிப்பார்கள். அதையே காலாண்டு தேர்வுக்கும் படிப்பார்கள், அரையாண்டு, முழுபரிட்சை தேர்வுக்கும் படிப்பார்கள். நாம் முதல் தடவை படிக்கும் போதே ஒரு பாடத்தை புரிந்து படித்துவிட்டால் நாம் அந்த பாடத்தை எப்போது கேட்டாலும் சொல்லும் அளவுக்கு அவர்கள் கைதேர்ந்தவர்களாகிவிடுவார்கள்.

    இதேபோல் ஒரு பாடத்தை புரிந்து படித்து, படித்த பாடத்தை வழிமுறைப்படுத்தி, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். எனவே உங்கள் குழந்தைகளும் இதே வழிமுறையை பின்பற்றி படிக்க கற்றுக்கொடுங்கள். படித்தவை அனைத்தும் மனதில் இருந்து மறக்காமல் அதிக நினைவாற்றலுடன் விளங்கவும் உதவியாக இருக்கும்.

    ×