என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Palanivel Thiagarajan"
- தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
- இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.
நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Madurai: Tamil Nadu Minister Dr Palanivel Thiaga Rajan says, "A minister from Tamil Nadu has been in jail for a year without bail. Similarly, the Chief Minister and ministers of the Delhi government are in jail. If this government continues, democracy will be completely… https://t.co/Ud3IbP3Vkh pic.twitter.com/pysVg0q1sS
— ANI (@ANI) April 2, 2024
- வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
- அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது
வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன்.
- இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.
சென்னை:
மதுரையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுரை வந்த பிரதமர் மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.
* பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவுபோல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார்.
- பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
- முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.
அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
- தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
- பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.
மதுரை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.
தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.
நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
- புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
சென்னை:
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும், பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் சமர்ப்பித்துள்ளேன்.
முந்தைய ஆட்சியின் விளைவாக உச்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத்திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச்சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.
நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில் நுட்ப இலாகாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.
தொழில்நுட்பமே எதிர் காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்த போதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம்.
எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜ் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். தொழில் துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.
இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார்.
- முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன. ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.
அவருக்கு பதில் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.
இதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பதில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பேசியதாக வெளியான ஆடியோ அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து விளக்கம் அளித்து விட்டு வந்திருந்தார்.
இதன் பிறகு இப்போது கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.
வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படலாம் என்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.
அந்த சமயத்தில் பட்டியலின அரசு அலுவலர் ஒருவரை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக எழுந்த புகாரில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.
அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, முத்துசாமி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகிய 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டதே தவிர யாரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை.
ஆனால் இப்போது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் கட்சித் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லாத நிலையில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ஆவடி நாசர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அப்போது புதுமுகங்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது.
- சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி :
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த முறை நான் டெல்லி வந்தபோது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதராக இருந்துள்ளார். உலக பொருளா தாரத்தின் கவனம் இந்தியா மீது இருக்கும் சூழ்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆட்சி தொடங்கும்போது நிதி நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதை படிப்படியாக சரிசெய்து, கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அந்த செயல்பாடு தொடர்கிறது.
மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும், தற்போதைய புதிய அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. அதைப்போல தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக கூடுதல் நிதி கேட்டும் கோரிக்கை வைக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது. மத்திய அரசின் பங்களிப்பு 4 சதவீதம் வரை இருந்தது. தற்போது 3 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.
சென்னை:
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பான நிதித்துறையை யாருக்கு வழங்குவது என விவாதம் எழுந்தபோது அதற்கு தகுந்த நபராக பழனிவேல் தியாகராஜன் திகழ்ந்தார்.
பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். நிதிச்சுமையை எவ்வாறு குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
காகிதம் இல்லாத பட்ஜெட்டை உருவாக்கியும், பல்வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்தார்.
இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தி.மு.க.வின் தொழில்நுட்ப மாநில செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பேட்டியின் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அரசியல் தொடர்பாக அங்கு உள்ள அமைச்சருக்கும், இவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது.
இதற்கிடையே அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், கடக்க போகும் பாதை குறித்தும் புத்தகம் எழுத இருந்தார். இதுகுறித்து புத்தாண்டில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 2023-ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதிமொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுத தொடங்கி உள்ளேன்.
அரசியலில் இருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் வெளியானதும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவியது. இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார். நான் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.
இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்