search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PTR Palanivel Thiagarajan"

    • மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
    • திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:

    அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.

    இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

    பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், நிதித்துறையை போன்று ஐடி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டது.

    அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

    கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் சபரீசன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே கிளப்பின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

    அதன்படி, நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டார்.

    ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
    • சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது.

    ஆடியோ விவகாரத்தால்தான் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றப்பட்டதா? ஆடியோ பிரச்சனையாக இருந்திருந்தால் பதவியே பறிபோயிருக்குமே? என்ற கேள்விகள் உலா வருகின்றன.

    இதுதொடர்பாக உடன் பிறப்புகள் கூறும் தகவல் வேறு விதமாக உள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது அவருக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமான சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி இலாகா தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் இரண்டு பெரிய துறைகளை சமாளிப்பது கடினம் என்பதால் அவரிடம் இருந்த தொழில்துறை டி.ஆர்.பி.ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறை அமைச்சர் ஆனதுமே மிகப்பெரிய துறை வழங்கப்பட்டிருப்பதற்கும் பின்னணி காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    அதாவது சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை விரும்புகிறார்கள். இதனால் முதலீடுகள் அதிக அளவில் குவிகின்றன.

    டி.ஆர்.பி.ராஜா இளையவர். அவரது 'நட்பு' வட்டாரம் பெரியது. இதனால் கூடுதலான கவனம் செலுத்த முடியும் என்று அந்த வட்டாரம் கேட்டுக்கொண்டதாலேயே அவரிடம் இந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    • கலைஞர் டி.வி.யில் கனிமொழி பங்குதாரர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.

    தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன்பிறகு பங்குகளை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதாவது அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.

    நிதிஅமைச்சர் பழனி வேல் தியாகராஜனின் ஆடியோ என்பது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்து இருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை.

    மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. யிடம் நான் புகார் கொடுத்து உள்ளேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2010 கோடி சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் இல்லை என்று மறுத்து உள்ளார். ஒருவேளை நமது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாச்சே. ரூ.2000 கோடி என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

    நான் சொத்து மதிப்புகளை வங்கி ஸ்டேட்மெண்டுடன் வெளியிட்டுவிட்டேன். தி.மு.க.வினர் குறைந்தபட்சம் ஒருமாத ஸ்டேட்மெண்டை வெளியிட்டுவிட்டு பேசட்டும் பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று மதுரை வந்தடைந்தது.
    • அவரது உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    75-வது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

    ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம். ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த ராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் "நாட்டுப்பற்று" சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.

    செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

    ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள், தூண்டி விட்டவர்கள், துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை மதுரை வந்தடைந்தது.
    • அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானார். இவரது உடல் இன்று தனி விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க.வினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் என கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை முற்றுகையிட்டு அவரது கார் மீது காலணி வீசி தாக்குதலில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வை சேர்ந்த ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 6 பேருக்கும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×