search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ooty flower show"

    • ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அரவேணு:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

    தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

    • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
    • ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன.

    ஊட்டி:

    கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஊட்டியில் அரசு துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. பல டன் காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 2 நாள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துச் சென்றனர்.

    கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நேற்று தொடங்கியது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.

    ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன. பூத்துக்குலுங்கிய பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கண்காட்சியில் 27 அடி உயரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு ஈபிள் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஈபிள் டவர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான உருவ மாதிரிகளும் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர்.

    தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் விழிப்புணர்வு மஞ்சள் பை அலங்காரம், உலக சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் அதன் சின்னம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் கோ ஆர்கானிக், ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம் என பலவகையான அலங்காரங்கள் 50 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு செய்யப்பட்டு இருந்தன.

    இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    ஊட்டி:

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. டன் கணக்கில் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென் டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், ட்யுப்ரஸ், பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 325 வகையான மலர்கள் இடம் பெறுகின்றன. இவை 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதுதவிர பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் நாற்றுகளும மலர்ந்து அழகாக காட்சி அளிக்கிறது.

    மலர் காட்சி திடலில் வண்ண மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த பணியை தொடங்கி வைத்தார்.

    கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை சுற்றி பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவானது நாளை மறுநாள் தொடங்குகிறது.

    கூடலூரில் விளையும் வாசனை திரவியங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை சாா்பில் வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.

    தொடர்ந்து நடைபெற உள்ள கண்காட்சிகள் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 123-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள், புல்வெளிகளை சுற்றி வித விதமாக பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியினை சிறப்பிக்கும் வகையில் 89 அடி அகலம், 23 அடி உயரத்தில் 1¼ லட்சம் கார்னேசன் மலர்களால் பாராளுமன்றத்தின் தோற்றமும், 12 அடி உயரத்தில் 2 ஆயிரம் ஆர்கிட், 2 ஆயிரம் கார்னேசன் மலர்களால் மலர் அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள், மயில் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஞ்செடிகளும், மலர் மாடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வரவேற்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெற்று வரும்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்று பேசினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் அமர்குஷ்வாஹா, இயக்குநர் இண்கோ வினித், தமிழ்நாடு தேயிலை கழகமேலாண்மை இயக்குநர் ஸ்ரீநிவாஸ்ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, கூடலூர் வனகோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நன்றி கூறினார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, கேமிராவிற்கு ரூ.100, வீடியோ கேமிராவிற்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அங்கு தோட்டக் கலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பொதுமக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கேமிராவும், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் ஹெலி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் மாணவர்கள் வழிகாட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியினை கண்டுகளிக்க பொது மக்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக ஊட்டியில் கலை நிகழ்ச்சிகளை கவர்னர் ரத்து செய்தார். #Thoothukudifiring #TNGovernor #BanwarilalPurohit
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவின் போது ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கதக் கலை நிகழ்ச்சி தொடங்க இருந்தது.

    முன்னதாக அரங்கிற்கு கவர்னரின் குடும்பத்தினர் வந்து இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி ராஜ் பவனில் இருந்து கார் மூலம் பழங்குடியினர் பண்பாட்டு மைய நுழைவு வாயில் பகுதிக்கு வந்து விட்டு காரை விட்டு இறங்காமல் மீண்டும் ராஜ் பவனுக்கு சென்று விட்டார்.

    அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இது குறித்து மேடையில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நடந்து உள்ளதால் தென்னக பண்பாட்டு மைய தலைவராக உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார் என்றார்.

    இதை தொடர்ந்து பண்பாட்டு மையத்துக்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக மலர் கண்காட்சி நிறைவு விழா முடிந்து கவர்னர் புறப்படும் போது அவரிடம் பத்திரிகையாளர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்து உள்ளனர். இது குறித்து அரசிடம் என்ன விளக்கம் கேட்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி ராஜ் பவன் சென்று விட்டார். #Thoothukudifiring #TNGovernor #BanwarilalPurohit
    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
    ஊட்டி:

    ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டியில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்று உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 122-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

    மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரூ.1,850 கோடி மதிப்பிலான குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பில் முடிவுற்ற 7 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.10.85 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1,577 பயனாளிகளுக்கு ரூ. 11.25 கோடியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, சரோஜா, வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, எரி சக்தி துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக் கலை இயக்குனர் சுப்பையன்,சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, எம்.பி.க்கள் கே.ஆர். அர்ஜூனன், கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் தலைவர் மில்லர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 10 இடங்களில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. மலர் மாடத்தில் பூக்களால் ஆன பூப்பந்தல் போடப்பட்டு உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளும், புதுப் பூங்காவில் 25 ஆயிரம் மலர் தொட்டிகள் என 40 ஆயிரம் மலர் தொட்டிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூர், ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சம் காரனே‌ஷன் மலர்களால் மேட்டூர் அணை மாதிரி உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலம், 20 அடி உயரத்தில் இவைஅமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    10 ஆயிரம் காரனே‌ஷன் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட்டும், 3,500 ஆர்கிட் மற்றும் காரனே‌ஷன் மலர்களை கொண்டு பார்பி பொம்மை உருவம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


    ஆலந்து நாட்டில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட துலிப் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உழவன் செயலி அமைக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு வகை பூக்களால் மலர் பந்தல் போடப்பட்டு இருந்தது. வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வெலிங்டன் ராணுவ கல்லூரி, ராஜ் பவன், செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    கண்காட்சியை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
    ×