search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Numerology"

    • வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது.
    • ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது. ஆனால், ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ''இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்'' என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.

    திங்கள்கிழமை

    திங்கள்கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். எங்கு இருந்தாலும், இவர்கள் அந்தச் சூழ்நிலையைத் தனதாக்கிக்கொள்வார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்துவிடுவார்கள். பிறகு தங்களின் கைச் செலவுக்கு இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு.

    செவ்வாய்க்கிழமை

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும்போது மற்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது இவரும் கவனமாக இருக்க வேண்டும். சூடம் காண்பித்துக் கொண்டே மணி அடிப்பது போல் விவாதம் செய்யும்போது மிகச் சரியாக எதிராளியை உரிய ஆதாரங்களுடன் வீழ்த்திவிடுவார்கள். முணுக் முணுக்கென இவர்களுக்குக் கோபம் வருவது வாடிக்கை. ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள்.

    புதன்கிழமை

    புதன்கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் ரிசர்வ் டைப்பான இவர்கள், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். திடுக்கெனப் பறந்து சென்று மீனைக் கவ்விடும் மீன்கொத்திப் பறவையைப்போல் தங்களுக்கான இடத்தை எந்தச் சபையிலும் பெற்று விடுவார்கள்.

    வியாழக்கிழமை

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் அதிகம் ஆர்வம் இருக்கும். வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலும் முறையான அணுகுமுறையும் இவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும்.

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். எல்லா மதநம்பிக்கையாளர்களும் புனிதமான நாளாக நினைப்பது வெள்ளிக்கிழமையைத்தான்.

    சனிக்கிழமை

    சனிக்கிழமை பிறந்தவர்கள், தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத கடைசி பெஞ்ச் மனோபாவம். 'எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் 'என்கிற டைப். எதிலும் ஷார்ட் கட் ரூட்டை ஃபாலோ பண்ணுவார்கள். மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பார்கள். மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால், எல்லோரிடமும் ஒரு 'பர்சனல் டச்' வைத்திருப்பார்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்தரும் பல்வேறு முறைகளில் நியுமராலஜியும் ஒன்று.
    • பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வான் மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுபகிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபகிரகம் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

    வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த எண்ணிற்குரிய வழிபாட்டு முறையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயமாகும்.

    பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும்.

    ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    உங்கள் பெயரின் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.
    நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.

    பொதுவாக பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியலாம் என்பார்கள். அது உண்மைதான், ஆனால் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். ஒருவேளை முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருந்தால் கூட அவை இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.

    மூன்றாம் எழுத்து A

    உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து A வாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் காதல் உணர்வு மிகுதியவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி A என்பது ஆற்றலின் அடையாளமாகும், இவர்கள் துணிச்சலானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே உங்களுடைய தன்னம்பிக்கைதான். உங்களுடைய திறமையையும், சாகசத்தையும் எப்போதும் பிறருக்கு காண்பிக்க விரும்புவீர்கள்.

    மூன்றாம் எழுத்து B

    உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து B ஆக இருந்தால் உங்களுடைய அடிப்படை குணம் பாசம் ஆகும். நீங்கள் எப்பொழுதும் உங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை எப்படி அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் சிலசமயம் உங்களுக்குள் எழும் பேராசை உங்களை பலவீனமாக்கும்.

    மூன்றாம் எழுத்து C

    C என்ற எழுத்து மூன்றாவது எழுத்தாக உள்ளவர்கள் இனிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் அப்பாவியான குணத்தாலும், இனிமையாக பழகுவதன் மூலமும் அனைவருடனும் எளிதில் நன்கு பழகக்கூடியவர்கள். அதேசமயம் நீங்கள் காயப்பட்டுவிட்டால் நிச்சயம் அதற்கு பழிவாங்காமல் இருக்கமாட்டார்கள். அனைத்திற்கும் மேலாக உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த குணம் நேர்மை ஆகும்.

    மூன்றாம் எழுத்து D

    D எழுத்தானது சமநிலை, கடின உழைப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இவர்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், பொருட்களை அதற்குண்டான இடத்தில் வைப்பதிலும் அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். உங்களின் எதிர்மறை குணம் என்பது பிடிவாதம் ஆகும்.



    மூன்றாம் எழுத்து E

    பெயரில் மூன்றாம் எழுத்தை E ஆக வைத்திருப்பவர்கள் இயற்கையிலேயே கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்கள். எந்தவித சிக்கலையும் எளிதாக தீர்க்கக்கூடியவர்கள், விரைவான சிந்தனையாளர்கள், வாழ்க்கை மீதான ஆழமான எண்ணம் கொண்டவர்கள். உங்களுடைய வசீகரிக்கும் குணம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் காதல் உறவுகளில் உங்கள் மீது நம்பிக்கை வருவது கடினம்.

    மூன்றாம் எழுத்து F

    இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். காதல் உறவுகளில் இறுதிவரை நேர்மையாக இருப்பார்கள். ஆனால் பழிவாங்கும் எண்ணமும், வேஷமிடும் குணமும் இவர்களுக்கு அதிகம்.

    மூன்றாம் எழுத்து G

    இவர்கள் தனக்கென ஒரு தனிவழியில் வாழ்பவர்கள், அதீத கற்பனைதிறன் மிக்கவர்கள். நீங்கள் அரிவுரையை வெறுப்பவர்கள், உங்கள் எண்ணம்போல வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களின் பலவீனம் சந்தேகம் ஆகும்.

    மூன்றாம் எழுத்து H

    இவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் எதார்த்தமாக பார்ப்பார்கள், அதேசமயம் பணவிஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அடிப்படையிலேயே இருக்கும் வியாபார குணத்தால் இவர்கள் எளிதில் தலைவர்களாக வரமுடியும். தன் இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் உறவுகளில் அதிக பொறாமை படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து I

    இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்ட தூய ஆத்மாக்கள். மற்றவர்களை சார்ந்து இருந்தாலும் ஆழமாக யோசிக்க கூடியவர்கள், இல்லாதவர்களுக்கு யோசிக்காமல் உதவக்கூடியவர்கள்.இவர்களின் பலவீனமும் இதுதான் பலசமயங்களில் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து J


    சுறுசுறுப்பும், ஆர்வமும் இவர்களின் கூட பிறந்த குணங்களாகும். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.



    மூன்றாம் எழுத்து K

    மிகவும் இரகசியமான குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களின் கவனம் எப்பொழுதும் தன் மீதே இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் இவர்கள் எப்பொழுதும் சமநிலைக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

    மூன்றாம் எழுத்து L

    இவர்களுக்கு வாழ்க்கை மீது எப்பொழுதும் ஒரு வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான கண்ணோட்டம் இருக்கும். இவர்களின் துணைதான் இவர்களுக்கு வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் கூடவே பிறந்த சுட்டித்தனம் இவர்களை அனைவரும் விரும்புபவர்களாக வைத்திருக்கும்.

    மூன்றாம் எழுத்து M

    இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை கவர்வதற்கு என எதையும் செய்யமாட்டார்கள், தன் வாழ்க்கையை தன்னுடைய விதிகளின் படி வாழ்வார்கள். இவர்களின் பிடிவாதமும், முன்கோபமும்தான் இவர்களின் பலவீனம்.

    மூன்றாம் எழுத்து N

    N எழுத்து மூன்றாவதாக உள்ளவர்கள் எப்பொழுதும் தான் செய்யும் காரியங்கள் முழுமையானதாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்கள் இயற்கையிலேயே அதிகமாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றாமல் தனக்கென ஒரு வழியை உருவாக்குபவர்கள்.

    மூன்றாம் எழுத்து O

    இரக்கமும், பிரியமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களை கண்ணைமூடிக்கொண்டு நம்பலாம். தனக்கான பாதையை தானே கண்டறிந்து அதனை வடிவமைத்து அதில் செல்லக்கூடியவர்கள். மற்றவர்களின் முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    மூன்றாம் எழுத்து P

    இவர்கள் வாழ்க்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் அனைத்திலும் தான்தான் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதற்காக எந்தவித வேடிக்கையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.



    மூன்றாம் எழுத்து Q

    இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மர்மம் இருக்கும். இவர்கள் மற்றவர்கள் பின்பற்றும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றமாட்டார்கள். நேர்மையான இவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவும், அறிவுரையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயத்தை இழக்க விரும்பமாட்டார்கள். இதுவே சிலசமயம் பலவீனமாகவும் அமையும்.

    மூன்றாம் எழுத்து R

    இவர்கள் அதிகளவு ஞானத்தையும், உள்ளுணர்வையும் கொண்டவர்கள். மற்றவர்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதற்கெனவே பிறந்தவர்கள். அமைதியை விரும்பும் உங்கள் குணமும், வாழ்க்கையை எதார்த்தமாக பார்க்கும் குணமும் அனைவரையும் விரும்பவைக்கும். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து S

    இவர்களை போல சிறந்த நேர்மையானவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவர்களுக்கு காதல் உணர்வு கொஞ்சம் குறைவுதான். இயற்கையாகவே தலைமை குணம் கொண்ட இவர்களின் வசீகரம் எப்பொழுதும் இவர்களை சுற்றி ஆட்களை இருக்க வைக்கும். தங்களுக்கான இலட்சியங்களை எப்பொழுதும் உயர்ந்ததாகவே வைப்பார்கள். உண்மையான இரக்கமும், அரவணைக்கும் குணமும் இவர்கள் கூடவே பிறந்தது.

    மூன்றாம் எழுத்து T

    இராஜதந்திர குணம் அதிகமிக்கவர்கள் இவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புபவர்கள். உங்களின் வெகுளித்தனமும், உதவும் குணமும் அனைவரும் உங்களை விரும்ப வைக்கும். அவர்கள் விரும்பும்படி செயல்கள் நடைபெறாவிட்டால் இவர்கள் எளிதில் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து U

    இவர்கள் எப்பொழுதும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வலிமையான உள்ளுணர்வு மற்றும் மனநிலையை கொண்ட இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எப்பொழுதும் புதிய யோசனைகளை செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களின் ஈகோ காரணமானாக அடிக்கடி தங்கள் உடனிருப்பவர்களை காயப்படுத்துவார்கள்.

    மூன்றாம் எழுத்து V


    இவர்களை போன்றவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு இவர்கள் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் அதீதமான நினைவாற்றல்தான். உறவில் இவர்கள் எப்பொழுதும் பொறாமைபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீதமான அர்பணிப்பே இவர்களுக்கு சிலசமயம் பலவீனமாக அமையும்.



    மூன்றாம் எழுத்து W

    இவர்கள் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர்கள். உறவுகளில் அடிக்கடி நீங்கள் சிக்கல்களை சந்திப்பீர்கள், அதனை சரிசெய்ய உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். உங்களின் செயல்கள் சிலசமயம் மற்றவர்களை அதிக வெறுப்படையச்செய்யும்.

    மூன்றாம் எழுத்து X

    இவர்கள் எந்தவொரு உறவுகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். இவர்களின் பேராசைதான் இவர்களின் மிகப்பெயய பலவீனம்.

    மூன்றாம் எழுத்து Y

    இவர்கள் தங்களின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் நிலை குறித்து அதிக கவலைப்படுவார்கள். இவர்கள் தங்கள் இடத்தில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் இடம் இவர்களுக்கு ஏற்றதல்ல.

    மூன்றாம் எழுத்து Z


    இவர்கல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். இலட்சியத்தை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிறந்த முதலாளிகளாக இருக்க இவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்கவேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள்.
    ×